பிரிவிடல் வழக்கை தாக்கல் செய்யவேண்டும் என விரும்பும் ஒருவர் அல்லது பலர் அவ்வழக்கை தாக்கல் செய்வதற்குத் தேவையான சரியான தகவல்களை சட்டத்தரணிக்கு வழங்குவாராயின் ஏனைய காணி வழக்குகளைப் போல் பிரிவிடல் வழக்கையும் தாக்கல் செய்து தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதில் சங்கடமில்லை. ஆனால் வழங்கப்படும் தகவல்கள் சரியானவையாக இருக்கவேண்டும். பிழையாக இருப்பின் வழக்கை தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுவது உண்மையே. ஆகவே பிரிவிடல் வழக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் கையிலேயே வழக்கின் தாமதமும் விளைவும் தங்கியுள்ளது என்று கூறலாம். இங்கு கூறப்படுகின்றவற்றை மனதில் எடுத்து அதன்படி உங்களது சட்டத்தரணியுடன் ஒத்துழைத்தால் பிரிவிடல் வழக்கில் தாமதமிருக்காது.
வழக்கின் விளக்கம் ஏன் தாமதமாகிறது?
பிரிவிடல் வழக்கை பல்வேறு தவணைகளில் நீதிமன்றத்தில் அழைப்பதால் வழக்கு விரைவாக முடிந்து விடும் என எண்ணக்கூடாது. விசாரணை சுணங்குவதற்கு காரணங்களாக அமைவது அக்காணியின் ஆரம்பகால உரித்தாளர்களின் விபரம் கிடைக்காமல் வழக்கை தாக்கல் செய்வதும் மேலும் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது காணியின் பங்குதாரர் இறப்பதால் அவர்களுக்கு பதிலாக பதிலீட்டாளரை சரியாக அடையாளம் கண்டு அவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்காமல் வேறு சிலரின் பெயரைக் கூறுவதாலும் பல பிரிவிடல் வழக்குகள் தாமதமடைவதாகக் கூறலாம். பிரிவிடல் வழக்கின் 23ஆம் பிரிவு பிரிவிடல் வழக்குக்குத் தேவையான தகவல் எதையும் பெறமுடியாதவாறு அமையவில்லை. அப்பிரிவு கூறுவது என்னவெனில் வழக்கை நடத்துவதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியலையும் அவ் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளவற்றின் சுருக்கத்தையும் வழக்கு விளக்கத்துக்கு எடுக்கப்படவுள்ள திகதிக்கு 30 நாட்களுக்கு முன்னர் வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு ஆவணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நான் அறிந்த வகையில் இப்பட்டியல் அவ்வாறு நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படுவதில்லை. சமர்ப்பிப்பதற்குரிய திகதியை மாற்றித் தருமாறும் பல தடவை இக் கோரிக்கையை சட்டத்தரணிகள் முன்வைப்பதையும் நான் கண்டுள்ளேன். மேற்படி அட்டவணையில் உள்ள ஆவணங்களையே விளக்கத்தின் போது சட்டத்தரணி அடையாளமிட நீதிமன்றம் அனுமதிக்கும். ஆகவே அதில் கவனமாக இருக்கவேண்டும்.
24 ஆம் பிரிவின் கீழ் செய்ய வேண்டியது என்ன?
பிரிவிடல் வழக்கின் 24ஆம் பிரிவு வழக்குக்கு தேவையென கூறுகின்ற பின்வரும் ஆவணங்களை விளக்கத்துக்கு முன்னர் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இணைத்திருக்க வேண்டும் என கூறுகிறது.
1) உரித்துப் பட்டியல்
2) நிலஅளவையாளர் மூலம் பிரிவிடல் செய்யப்படவுள்ள காணியை அளந்து அது சம்பந்தமான அறிக்கை என்பன அவையாகும்.
விளக்கத்துக்கான திகதி
மேலேயுள்ளபடி தகவல்கள் அனைத்தும் நீதிமன்றத்துக்குக் கிடைத்தால் நீதிமன்றம் விளக்கத்துக்கான திகதியைத் தீர்மானிப்பதற்காக பகிரங்கமாக நீதிமன்றத்தில் மேற்படி வழக்கைக் கூப்பிடும். தரப்பார் தோன்ற வேண்டும். அவ்வாறு அழைக்கப்படுவது விளக்கத்துக்கான திகதியை தரப்பார் அறிந்து கொள்வதற்கேயாம். சிலவேளை வழக்கு அழைக்கப்பட்ட திகதியில் விளக்கம் தொடங்க முடியாவிட்டால் வேறு ஒரு திகதியில் விளக்கத்தை நீதிமன்றம் தொடங்கலாம்.
பிரிவிடல் சட்டத்தின் 25 (1) ஆம் பிரிவு
முக்கியமானது ஏன்?
இத்தினமே பிரிவிடல் வழக்கை விளங்குவதற்காக நீதிமன்றம் நியமித்த திகதியாகும். சிலவேளை இப்பிரிவின் கீழ் இத்திகதியை நீதிமன்றம் தகுந்த காரணங்களுக்காக மாற்றலாம்.
மாற்றப்பட்ட திகதியில் நீதிமன்றம் வழக்கின் தரப்பாரது உரித்துப்பட்டியலை பரிசீலனை செய்யவேண்டும். மேலும் அவ்வுரித்து சம்பந்தமாக சாட்சியம் கூறுபவர்களை விசாரணைசெய்ய வேண்டும். சாட்சியத்தை எழுத்தில் எடுக்க வேண்டும்.
நீதிமன்றம் எடுத்துக்கொண்ட விசாரணையை அடிப்படையாக வைத்து சட்டப்படியான ஏதுக்களையும் நிகழ்வுகளையும் பரிசீலித்து அவற்றின்படி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அக்காணியில் உள்ள பங்குகளை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
25 (2) ஆம் பிரிவு மிக முக்கியமானது ஏன்?
இந்தப் பிரிவின்படி தரப்பார் உரித்துப்பட்டியல் அல்லது உரித்துரிமையைக் கூறாது இருந்தால் அவர்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச விளக்கத்தை நீதிமன்றம் நடத்தலாம். இந்த ஒரு தலைப்பட்ச விளக்கம் உரித்துப்பட்டியலை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக மட்டுமே நடத்த முடியும். ஆகவே அவர்கள் வழக்கில் பங்குபற்றமுடியாது.
இவ்வாறு உரித்துப் பட்டியலை சமர்ப்பிக்காதவர்கள் வழக்கின் விளக்கத்தின்போது ஏனையவர்களுடன் எந்த தர்க்கத்திலும் ஈடுபடமுடியாது. ஆனாலும் அவர்கள் ஏனைய பங்குதாரர்களின் உரித்தில் தங்களுக்கு உரித்து உண்டு என கூறுவார்களாயின் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே அவ் உரித்து பற்றி தர்க்கிக்கவேண்டும்.
மேலே கூறியவற்றைப் பார்க்கும்போது பங்குதாரர்களுக்கு சில கஷ்டங்கள் இருப்பினும்
அவரவரது பங்கைப் பெற 25 (2) ஆம் பிரிவு இடமளிக்கிறது எனக் கூறலாம். இவ் இடமளிப்பானது சட்டத்திற்கமையவே நடைபெறவேண்டுமே தவிர வழக்கின் தரப்பாரது துக்கம் அல்லது வேறு காரணங்களைக் கொண்டு அமையக் கூடாது என்ற எண்ணத்தை தரப்பார் மனதில் கொள்ளவேண்டும். ஒருவரது அல்லது சிலரது துக்கத்தை கருத்தில்கொண்டு உரித்துப்பட்டியல் சமர்ப்பிக்காதவர்களை வழக்கில் சேர்க்க மேற்படி பிரிவு இடமளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே வழக்கில் உள்ள காணியில் தங்களது உரித்து என்ன என்பதை தரப்பார் கூறவேண்டும்.
மேலும் உரித்துப் பட்டியலை திருத்த இடமுண்டு. ஆனால் குறித்த காலத்துக்குள் அதனைச் செய்யவேண்டும். எந்தக் காரணம்கொண்டும் வழக்கானது தரப்பினரின் கவனமின்மையால் தாமதமாகக்கூடாது என்பதை தரப்பார் மனதில் எடுக்கவேண்டும். கவனமின்மையாளருக்கு நிவாரணத்தை நீதிமன்றம் வழங்கமுடியாது. ஆகவே பிரிவிடல் வழக்கில் நீதிமன்றத்தின் கடமை மிகமுக்கியமானதாக அமைகிறது. கேட்கும் போதெல்லாம் தவணை வழங்கி ஏனையவர்களின் இரைச்சலுக்கு நீதிமன்றம் ஆளாகக்கூடாது என்பதை மேற்படி பிரிவு நன்கு உணர்த்துகிறது என்று கூறவேண்டும்.
ஆகவே பிரிவிடல் வழக்கு கஷ்டமானது என்று கூறுவது தவறு என்றே கொள்ள வேண்டும். தவறு தரப்பாரிடமே உள்ளது.
பிரிவிடல் வழக்கில் தீர்க்கப்பட வேண்டிய வினாக்கள் என்ன?
சிவில் வழக்குகளில் அதிகமானவை இரு பகுதியாரின் உடன்பாட்டால் பெரிய விளக்கம் இல்லாமல் ஒற்றுமையாக தீர்க்கப்படுவதும் உண்டு. குற்றவியல் வழக்குகளில் கூட சில தகராறுகள் ஒற்றுமையாகத் தீர்க்கப்படலாம் என்று குற்றவியல் நடவடிக்கை சட்டத்தில் ஒரு பிரிவு உள்ளது. அதன் கீழ் ஒற்றுமைப்படக்கூடிய தகராறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் சிவில் வழக்குகளில் அவ்வாறு குறித்த சில விடயங்களிலேயே தகராறுகள் ஒற்றுமையாக அமைய முடியும் என்று கூறவில்லை. ஆகவே பிரிவிடல் வழக்கு, சிவில் வழக்கு ஆதலால் சில விடயங்கள் இரு பகுதியாரின் ஒற்றுமையின் கீழ் தீர்க்கப்படலாம். உதாரணமாக தகராருக்குரிய காணியின் பெயர், விலாசம், காணியின் அளவு, காணியின் ஆரம்ப சொந்தக்காரர்கள் என்பன சுமுகமாக தீர்க்க இடமுண்டு. இவ்வாறு சுமுகமாகத் தீர்த்ததன் பின்னர் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிராதில் சில திருத்தங்கள், உரித்துப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களில் சில மாற்றங்கள் போன்றவை இரு தரப்பாரது ஒற்றுமையின் மூலம் தீர்க்க நீதிமன்றம் அனுமதியளிக்கலாம்.
சிலவற்றை சமாதானமாகத் தீர்க்கமுடியாத பட்சத்தில் நீதிமன்றம் வழக்கெழு வினாவை எழுப்பி பின்னர் சாதாரண விசாரணையின் கீழ் தீர்க்க, பிரிவிடல் சட்டம் இடம் அளிக்கிறது.
பிரிவிடல் வழக்கில் சில விடயங்கள் இடியப்ப சிக்கல் என சாதாரணமாக கூறும் மொழியில் கூறலாம். அவ்விடயங்கள் சம்பந்தமாக முதலில் வழக்கெழு வினாக்கள் எழுப்பப்படவேண்டும். இவ்வினாக்களுக்கான விடையைப் பெறுவதற்கு விசாரணை தேவையானால் சாட்சிகளை விசாரிக்க பிரிவிடல் சட்டம் இடமளிக்கிறது.
மேலும் விசாரணை ஒன்று நடைபெறும்போது எச்சந்தர்ப்பத்திலும் வினா ஒன்றை எழுப்பி விடைகாண இரு தரப்பாரும் உடன்பட நீதிமன்றம் உதவ வேண்டும்.
சில வேளைகளில் பிராதிக்குப் புறம்பாகச்சென்று வழக்கெழுவினாவை எழுப்ப வேண்டுமானால் நீதிமன்றம் இதற்கு இடமளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பிராதில் இல்லாத விடயம் சம்பந்தமாக வழக்கெழு வினாக்கள் எழுப்பப்படவிரும்பினால் அதனை நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டி வழக்கெழு வினாவை எழுப்பலாம். சிவில் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையில் இதற்கு அனுமதியுண்டு. சிவில் வழக்குகளுக்கு இது சட்ட ரீதியாகப் பொருந்தும். ஆனால் பிரிவிடல் சட்டத்தில் இவ்விதி இல்லை. ஆயின் பிரிவிடல் சட்டத்தில் இல்லாத ஒரு விடயத்தை சிவில் நடவடிக்கை முறைச் சட்டத்தின் கீழ் எழுப்பலாம் என்று பிரிவிடல் சட்டம் கூறுவதால் சில வினாக்களை மேற்படி பிரிவின்கீழ் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பிரிவிடல் வழக்கிலும் எழுப்ப முடியும்.
பிரிவிடல் வழக்கில் நீதிமன்றம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விடயம் பற்றி வீரப்பா செட்டியார் எதிர் ரம்புக்பொத்த குமாரி ஹாமி என்ற வழக்கில் ஆராயப்பட்டது. இவ் விடயம் 45 NLR இல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ் வழக்கில் தீர்க்கப்பட்டது என்னவெனில் பிரிவிடல் வழக்கில் சம்பந்தப்பட்ட காணியானது வேறு யாருக்கும் உரிமையுடையதா? என நீதிமன்றம் கவனிக்க வேண்டும் என்றாகும். ஆகவே தரப்பினர் எழுப்பும் வழக்கெழு காரணங்களில் மட்டும் நீதிமன்றம் தங்கியிராமல் சாட்சிகளின் அடிப்படையில் இதனைக் காணவேண்டும் என்றாகும். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரித்து எவ்வாறு வந்தது என்பதை நீதிமன்றம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்பதும் வற்புறுத்தப்பட்டுள்ளது.
சிவில் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையில் 147ஆம் பிரிவின் பிரகாரம் வழக்கை சட்டம் சம்பந்தமான காரணத்தால் முடிவுக்கு கொண்டு வர முடியுமாக இருந்தால் அவ்வாறு நீதிமன்றம் அதனைச் செய்யலாம். அதற்கு சட்டத்தில் தடையில்லை என்று கூறலாம்.
பிரிவிடல் வழக்கில் ஒருதலைப்பட்ச விசாரணை
பிரிவிடல் சட்டத்தின் 25 (2) ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது. எதிராளி குறித்த தினத்தன்று உரித்துரிமையை சமர்ப்பிக்க தவறினால் நீதிமன்றம் வழக்கை ஒரு தலைப்பட்சமாக விசாரிக்கலாம் என்கிறது. உரித்துப் பட்டியல் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு எதிராகவே ஒரு தலைப்பட்ச விசாரணையை நடத்தலாம். மேலும் ஏனையவர்கள் சமர்ப்பித்துள்ள உரித்துப் பட்டியல் சம்பந்தமாக தனது கருத்தை உரித்துப் பட்டியலை சமர்ப்பிக்காதவர்கள் நீதிமன்றத்தின் அனுமதியின்றி சமர்ப்பிக்கமுடியாது.
மேலும் அறிய வேண்டியது என்னவெனில் உரித்துப் பட்டியலை சமர்ப்பிக்க தவறியவர்கள் தங்களுக்கு உரித்துப் பட்டியலை சமர்ப்பிக்க அனுமதி தருமாறு பின்னர் கோரினால் அவர்கள் அக் கோரிக்கையை மறு பகுதியாருக்கு முன்வைத்த பின்னரே அதனைக் கேட்கமுடியும். அதேபோல் நீதிமன்றமும் அவர்களது தவறானது, தீய நோக்குடையது அல்ல என்பதில் திருப்தி அடையவும் வேண்டும். மேலும் மறுபகுதியாருக்கு செலவையும் கட்ட வேண்டும் என்று அடுத்த தரப்பாருக்கு நீதிமன்றம் கட்டளையிட வேண்டும்.
ஒரு தலைப்பட்ச விசாரணை எப்போது நடைபெறுகிறது என்றால் அது உரித்துப் பட்டியலைச் சமர்ப்பிக்காதபோதே நடைபெறுகிறது.
இதில் முக்கியமானது என்னவெனில் பணம் கட்டத் தவறியதற்கு காரணம் தீய நோக்கம் இல்லை என்றும் நன்நோக்கத்துடனேயே இத்தவறு நடந்துள்ளது என்பதில் நீதிமன்றம் திருப்திப்பட வேண்டும்.
சாதாரண சிவில் வழக்குகளைப் போல் கட்சிக்காரர் வருகை தராமல் இருக்கும்போது ஒரு தலைப்பட்ச விசாரணையை பிரிவிடல் வழக்கில் பின்பற்றுவதில்லை. இதற்குரிய காரணங்கள் பற்றி பல வழக்குகள் உள்ளன. விரும்புவோர் பின்வரும் வழக்குகளைப் படிக்கவும் (1994) 3 SLR 6ஆம் பகுதி 168ஆம் பக்கம், 58 NLR 89 Page, 41 NLR 33, 33 NLR 217, (Full Bench)
சுருக்கமாக மேற்படி தீர்ப்புக்களை வாசிக்கும் ஒருவர் பின்வரும் கருத்தை ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை என நீதியரசர் சிரிமானே கூறியுள்ளதுடன் பின்வருமாறு விளக்கியும் உள்ளார். சிவில் வழக்குகளில் உரித்தை பிரகடனப்படுத்தவே காணி வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால் பிரிவிடல் வழக்கில் கேட்கப்படுவது என்னவெனில் காணி ஒன்றின் பொது உடைமையை இல்லாதொழிக்குமாறு என்று ஆகும். ஆகவே இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறியுள்ளார்.
பிரிவிடல் வழக்கில் ஒருவர் வராவிட்டாலும் மற்றவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தால் அவர்களைக் கொண்டு வழக்கை விசாரித்து ஒவ்வொருவரது பங்குகளையும் தீர்மானிக்கலாம். ஆனால் சிவில் வழக்குகளான உரித்து நிறுவல், உடைமை நிறுவல் வழக்குகளில் இவ்வாறு தீர்மானிக்க முடியாது.
மேலும் பிரிவிடல் வழக்கில் ஒருவர் தனது உரித்தை சமர்ப்பித்திருப்பார். அத்துடன் அவரது முகவரியும் அதில் அறியத் தந்திருப்பார். தீர்ப்பானது தனக்கு விரோதமாக இருப்பின் 30 நாட்களுக்கு இடையில் அது பற்றிய தனது நிலைப்பாட்டையும் கூறலாம். ஆகவே தனது உரிமை பாதிக்கப்பட்டதாக கருதும் ஒருவர் அத்தீர்ப்பை (இடைக்காலத் தீர்ப்பை) எதிர்க்கலாம். சிவில் வழக்கில் இந்நிலையில்லை.
பிரிவிடல் வழக்கில் ஒருவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படாது. ஆனால் சாதாரண சிவில் வழக்கில் விசாரணைக்கு ஒருவர் வருகை தராவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இடைக்கால தீர்ப்பும் இறுதித் தீர்வையும்
பிரிவிடல் வழக்கில் இரண்டு தீர்ப்புக்கள் வழங்கப்படுவதாக சாதாரண மக்கள் அறியாத போதும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அறிவர். இவை சம்பந்தமாக தெளிவாக அறிவைப் பெறவேண்டுமானால் பிரிவிடல் வழக்கின் 25 (1) ஆம் பிரிவையும் 26 (2) ஆம் பிரிவையும் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
25 (1) பிரிவின்படி நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படுகிறது என்று கூறி திகதியைக் குறிக்கும். அன்றைய தினம் அல்லது அன்று பிற்போடப்பட்ட வேறு ஒரு தினத்தில் நீதிமன்றம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் உரித்தை பரிசீலிக்க வேண்டும். உரித்தை பரிசீலிப்பது என்பது காணியின் பங்குதாரர்களின் உரித்துக்குரிய ஆவணங்களைப் பரிசீலிப்பது, சாட்சியங்களைக் கேட்பது, ஒவ்வொருவருக்குரிய பங்கு என்ன என்பதை அடையாளப்படுத்திக்கொள்வது தரப்பினருக்கு அதனை நிரூபிக்கத் தேவையான தகவல்களைப் பெறுவது என்பவற்றுடன் விசாரணையின்போது எழும் சட்ட, நிகழ்வுப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன் பிரிவிடல் வழக்கின் 26 (2) ஆம் பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள எந்த கட்டளையை இடவேண்டும் என்பதையும் நீதிமன்றம் கவனிக்க வேண்டும். இது ஒரு நாளில் நடைபெறுவதில்லை. பல நாட்கள் அல்லது பல மாதங்கள், வருடங்கள் செல்லலாம்.
ஆகவே 25 (1)இன் கீழ் விசாரணைக்கு வழக்கு நியமிக்கப்படுகிறது என்று கூறியதும், தரப்பார் மேலே கூறிய நீதிமன்றத்துக்குத் தேவைான சகலவற்றையும் தெரிவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். விசேடமாக நீதிமன்றம் பின்வருவனவற்றை மிகக் கவனமாக மனதில் எடுக்கும். தீர்க்கப்பட்ட வழக்குகளில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1) ‘‘வழக்காளியும் எதிராளிகளும் கூட்டாக பிரிவிடல் செய்யவிருக்கும் காணியை கூட்டாக உடைமை கொண்டிருந்தார்கள் என்பதில் நீதிமன்றம் திருப்திப்பட வேண்டும்.
(6 புதுச்சட்ட அறிக்கை 246ஆம் பக்கம்) அதனை நிரூபிக்கத் தவறின் பிரிவிடல் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
2) கூட்டுச் சொந்தக்காரர் இஸ்லாம் பக்தியாளர் ஆகையால் அவர்கள் இஸ்லாமிய சட்டத்தால் ஆளப்படுவதால் நீதிபதி அவர்கள் தரப்பாரின் பின் உரித்தாளர் இஸ்லாமிய (முஸ்லிம்) சட்டத்தால் ஆளப்படுவதால் பின்னுரித்தாளர்களை அச் சட்டத்தின்படியே தெரிவு செய்யப்பட வேண்டும்’’ (51 புதுச்சட்ட அறிக்கை 299)
3) உரிமை பற்றி எவ்வித விளக்கமும் இன்றி நீதிமன்றம் இடைக்காலத் தீர்வையைப் பதிந்துள்ளதால் அத்தீர்வை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்படும்வரை இடைக்கால தீர்வை வடிவில் இருக்கும். (58 NLR 217)
4) பிரிவிடல் சட்டம் கூட்டுச் சொந்தக்காரர் ஒவ்வொருவரினதும் உரித்து பரிசீலனை செய்யப்படுதல் கட்டாயம் எனக் கூறுகிறது. நீதிமன்றம் இவ்வாறு செய்யாமல் வழக்கின் தரப்பார் தங்களிைடயே ஓர் இணக்கப்பாட்டை செய்துகொள்வது சட்டத்தில் ஏற்கப்பட முடியாது (59 NLR 546) என்பது குறிப்பிடத்தக்கது.
5) பிரிவிடல் வழக்கில் இறுதித் தீர்வைக்கு நில அளவையாளரின் படமும் அறிக்கையும் முக்கியமானதாகும். ஆனால் இந்த வழக்கில் நில அளவையாளரின் படத்துக்கு சிறிதளவு மதிப்பே கொடுக்கப்பட்டுள்ளது. இது தவறு. ஏனெனில் உரித்தை ஒதுக்குவதற்கு நில அளவையாளரின் அறிக்கையும் நிலஅளவைப் படமும் முக்கியமானதாகும். (2 SLLR Page 15)
6) அறிவுசார் நீதிபதி அவர்கள் காணியின் உரித்து விபரத்தைப் பார்க்காமல் தீர்ப்பை வழங்கியுள்ளார் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. (2005) 3 SLLR 197) என்று கூறப்பட்டுள்ளது.
மேலே கூறிய இடைக்காலத் தீர்ப்பு பற்றியும் இடைக்கால தீர்ப்புடன் கூடிய இறுதி தீர்வையும் பற்றிய இன்னும் சில விடயங்கள் உண்டு. இதில் கவனிக்கவேண்டியது இடைக்கால தீர்வையும் 25 (1) ஆம் படியானது மற்றும் 26 (2)இன் படியானதுமான இறுதித் தீர்வையும் பற்றி அறியவேண்டியவைகள் சில பின்வருமாறாகும். அதாவது
25 (1)இன் கீழ் வழங்கப்படுகின்ற இடைக்காலத் தீர்வும் 26 (2)இன் கீழ் வழங்குகின்ற இறுதித் தீர்வும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத முறையில் இருக்கமுடியாது. ஆகவே இரண்டு தீர்வையும் பின்வருமாறு கூறவேண்டும்.
அ) காணியானது பிரிவிடல் செய்யப்படவேண்டும்.
ஆ) விரும்பின் முழுக்காணியும் விற்பனை செய்யப்படலாம் அல்லது கூறுகள் மூலம் விற்பனை செய்யலாம்.
இ) காணியில் ஒரு பகுதி பிரிக்கப்பட்டும் விரும்பின் ஏனைய பகுதி பிரிக்கப்படாமலும் வைத்திருக்க முடியும்.
ஈ) தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை ஒருவர் விற்பனை செய்யாமல் வைத்திருக்கலாம்.
உ) ஒரு குறித்த தரப்பினருக்கு அல்லது குழுவினருக்கு அவர்களது விருப்பப்படி காணியை பிரிந்துக் கொடுக்கலாம்.
ஊ) யாருக்கும் ஒதுக்கப்படாத காணித்துண்டு அப்படியே இருக்க இடமளிக்கலாம். இவை இரண்டு தீர்வையிலும் அடங்கவேண்டும்.
பிரிவிடல் செய்யும் முறை பற்றி சில ஆலோசனைகள் இவை சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை 1997 ஆம் ஆண்டு 17 ஆம் பிரிவு
சில சமயங்களில் பல்வேறு காணிகளை இணைத்து பிரிவிடல் செய்யவேண்டிய தேவையேற்படுவதுண்டு. உதாரணமாக பல காணிகளை பிரிவிடல் செய்யும்போது ஒவ்வொரு காணியும் சிறிது சிறிதாக இருக்கிறது என வைத்துக்கொண்டால் ஒவ்வொரு காணியிலும் சிறு சிறு பங்குகளே ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடும். அதனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவே அக்காணிக்குரிய சொந்தக்காரர் ஒவ்வொரு காணியிலும் தமக்குக் கிடைக்கும் பங்குகளை ஒன்றாகச்சேர்த்து ஒரு காணியில் தருமாறு கேட்கலாம். அச்சந்தர்ப்பத்தில் அதனை நீதிமன்றம் ஏற்கலாம். அப்போது நீதிமன்றம் செய்யவேண்டியது என்னவெனில், சிறு பங்குகளைப் பெறப் போகிறவர்களுக்கு அவர்களது பங்குகளுக்குரிய பணத்தை வழங்கிவிட்டு அப்பங்குகளை எல்லாம் சேர்த்து 5 பேர்ச்சஸ் அல்லது 6 பேர்ச்சஸ் துண்டுகளை பங்குதாரர் ஒருவருக்கு வழங்க 1997 ஆம் ஆண்டு சட்டம் இடமளிக்கிறது.
அதேபோல் பிரிவிடல் செய்யப்படவிருக்கின்ற காணியின் ஒரு பகுதியில் கூட்டுச் சொந்தக்காரரில் ஒருவர் அபிவிருத்தி செய்திருந்தால் அவருக்கு வழங்கவேண்டிய பகுதிக்கு இப்பகுதியை அவருக்கு வழங்கலாம். அவ்வாறு வழங்கும்போது அபிவிருத்தி செய்த பகுதிக்குரிய பணத்தை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை பங்கைத் தந்தவருக்கு வழங்கவேண்டும். அப்புஹாமி எதிர் சாஞ்சிஹாமி 21 NLR 33 என்ற வழக்கில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிவிடல் வழக்கொன்றில் எதிராளி வழக்காளியின் உரித்தை அங்கீகரித்தால் மட்டும் வழக்காளிக்கு உரித்து வந்துவிடாது. நீதிமன்றமும் அவ்வுரித்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி ஒருவருக்கு கட்சிக்காரர்களின் விருப்பம் மட்டும் காணியைப் பிரிப்பதற்கு உதவாது என்று 9 CLW 33 இல் கூறப்பட்டுள்ளது. வேறு நிபந்தனைகளும் உண்டு.
பிரிவிடல் வழக்கு ஒன்றில் இடைக்காலத் தீர்வை அளிக்கப்பட்ட பின்னர் அல்லது இறுதி நில அளவை செய்யப்பட்டதன் பின்னர் வேறு ஒருவருக்கு அவ்வழக்கின் தரப்பாராக வழக்கின் உள்ளே வர எந்த உரிமையும் இல்லை. ஆனால் அவர் அக்காணியில் தனக்கும் சொந்தம் இருக்கிறது என்று கூறி தர்க்கிப்பாரானால் இதற்கு ஆதாரமான ஆவணங்களைச் சமர்ப்பிப்பாரானால் அதனை அவர் காணியின் தீர்ப்பை வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. எனினும் மாகாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு விண்ணப்பம் செய்வதன் மூலம் அல்லது உரிய நிலையில் வைக்குமாறு (Restitutio Intergrum) கேட்கும் விண்ணப்பத்தைச் செய்யலாம்.
மேற்படி விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் மாகாண மேல்நீதிமன்றம் அவ்விண்ணப்பத்தைச் செய்பவரின் உரிமை இல்லாமல் போய்விட்டது என்பது உண்மை என்று கருதுமானால் அவ்வாறு உரிமை இல்லாமல் போவதற்கு வழக்காளரின் செயல் பிரிவிடல் வழக்கின் விதிகளுக்கு முரணாக அமைந்தது என்று கருதினால் மட்டுமே மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்வையை ரத்துச் செய்து இறுதித்தீர்வையை மீள வழங்க வேண்டுமென்று கட்டளையிடலாம்.
சோமாவதி எதிர் மடவல வழக்கு
1983 ஆம் ஆண்டு 2 ஸ்ரீ.ல.சட்ட அறிக்கை 15ஆம் பக்கத்தில் அறிக்கையிடப்பட்ட சோமாவதி எதிர் மடவல என்ற வழக்கிலும் 1984ஆம் ஆண்டு 1 ஸ்ரீ.ல.சட்ட அறிக்கை 57 ஆம் பக்கத்தில் அறிக்கையிடப்பட்டுள்ள பியசேன எதிர் மார்கிரட் பெரேரா மற்றும் இருவர் என்ற வழக்கிலும் முன்வைத்த அப்பீல் காரணமாக அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமசிறி பெரேரா எதிர் K.மகலின் நோனாவும் மற்றும் 9 பேர் வழக்கு
இந்த வழக்கில் நீதிமன்றம் இறந்தவருக்குப் பதிலாக பதிலீடு செய்யாமல் வழக்கை நடத்தி தீர்ப்பை வழங்கியதால் அதிருப்தி அடைந்தவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தனக்கு நடந்த துர்ப்பாக்கியத்தை எடுத்துக் காட்டியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்ததுடன் ஆரம்பத்தில் இருந்து வழக்கை விசாரிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்துக்கு கட்டளையும் இட்டது. இந்த வழக்கு 1994 ஆம் ஆண்டு 12–16 இல் தீர்க்கப்பட்ட வழக்காகும்.
மேரி மட்டில்லா பெரேரா எதிர் டொன் வில்சன் வழக்கு 1995.3.01
இந்த வழக்கில் பிரிவிடல் செய்யவேண்டிய காணி எது எனத் தெரியாது காணி வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், தான் பாதிக்கப்பட்டதாக மேன்முறையீட்டாளர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவறு நடந்துள்ளதை ஏற்றுக்கொண்டு மீளாய்வு விண்ணப்பக் காரியாலய வழக்கின் தரப்பாளராக ஏற்றுக்கொண்டு ஆரம்பத்தில் இருந்து விசாரணையை நடத்த உத்தரவு இட்டது.
இவ்வாறு பல வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்படி விசாரணை நடைபெறாமல் இருப்பின் மேன்முறையீட்டால் அத்தீர்ப்பை இரத்துச் செய்து மீண்டும் விசாரணையை நடத்தலாம்.
தொகுப்புரை
ஒரு காணி பல உரித்தாளர்களுக்குச் சொத்தான உடைமையில் இருக்கும்போது அதனை இரத்துச்செய்து அந்த உரித்தாளர் ஒவ்வொருவருக்கும் அக்காணியைப் பிரித்துக் கொடுப்பதற்கான சட்டமே பிரிவிடல் சட்டமாகும். இதனை மாவட்ட நீதிமன்றத்திலேயே விசேடமாக அக்காணி அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள்ளேயே தாக்கல் செய்யவேண்டும்.
பலருக்குச் சொந்தமான காணி பிரிவிடல் வழக்கின் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு (பங்குதாரர்களுக்கு) சொந்தமாகிறது.
மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தியுறும் தரப்பார் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு அல்லது மீளாய்வு செய்து தமது பங்கைப் பெறலாம்.
நீண்டகாலம் எடுப்பினும் உண்மையாக உரித்து இருப்பின் இவ்வழக்கை தாக்கல் செய்து உரித்தைப் பெறுவதால் பலன் உண்டு என்றும் கூறலாம்.
(கே.ஜீ.ஜோன் - சட்டத்தரணியும் ஆய்வாளரும் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM