(ஆர்.யசி)
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத் தின் நிலைப்பாடு என்னவென்பதே எமது கேள்வியாக உள்ளதெனவும், தமிழ் மக்க ளின் அரசியல் பிரச்சினைகளில் நிரந்தர தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையில் இந்தியாவின் முழுமையான தலையீடு இருக்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலப் பிரமுர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர் ஆர்.சம்பந்தன் எடுத்துக்கூறியுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்தில் வசித்துவரும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
ஆர்.சம்பந்தன் தமக்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் கடந்த வாரம் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
தனிப்பட்ட விதத்தில் அமைந்த இந்த பயணத்தின்போது தென்னிந்தியாவில் அரசியல் சந்திப்புகள் சிலவும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தற்போது இந்தியாவின் ஆளும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநிலப் பிரமுர்களுடன் அவர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். தமிழக பாரதீய ஜனதாவின் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் நாடு திரும்பிய கூட்ட மைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் இந்த சந்திப்புகள் குறித்து வினவியபோது அவர் குறிப்பிடுகையில்,
நாட்டில் இப்போது புதிய ஆட்சி ஒன்று உருவாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரித்த தரப்பு தோல்வியை சந்தித்து பெரும்பான்மை ஆதரவை கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இதில் தமிழ் மக்களின் நிலைமைகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதியின் சிம்மாசன உரை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது. இதுவே அவரினதும், அவரது அரசாங்கத்தினதும் கொள்கை விளக்க உரையாகவும் அமையவுள்ளது. ஆகவே இந்த அரசாங்கம் எவ்வாறான மன நிலையில் உள்ளது, இவர்களின் நிலைப்பாடுகள் என்ன என்ற விடயங்களை தெளிவாகவும், உறுதியாகவும், கொள்கை ரீதியாகவும் நாம் உத்தியோகபூர்வமாக அறிவதற்கு இதுவே உரிய சந்தர்ப்பமாகும்.
இந்த அரசாங்கம் ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என்பதை நாம் அவர்களுக்கு எடுத்துக்கூறியுள்ளோம். எமது அரசியல் பிரச்சினைகள் குறித்து தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நாம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளோம்.
அதற்கும் நாம் தயாராகவே உள்ளோம். அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் அரசியல் தரப்பு மாத்திரம் இன்றி சர்வதேச தரப்பின் ஒத்துழைப்புகளும் இருக்க வேண்டும்.
இதில் இந்தியாவின் பங்களிப்பு அதிக மாக இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். இந்தியா முன்வைத்த 13 ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத் தப்பட வேண்டும். எமக்கான அதிகாரங்கள் சுய நிர்ணய ஆட்சிமுறைமை எமக்கு கிடை க்க வேண்டும்.
எமது மக்களும் இரண்டாம் பிரஜைகள் போன்று நடத்தப்படாது அவர்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இது குறித்து இந்தியா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து தமிழர் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என நாம் கேட்டு நிற்கின்றோம்.
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாம் இலங்கையில் சந்தித்த நேரத்தில் மிகவும் குறுகிய கால எல்லைக் குள் எம்மால் நீண்ட கலந்துரையாடல் எதனையும் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது. எனினும் இந்தியாவில் சந்திப்பை நடத்த அவர் இணக்கம் தெரிவித்த நிலையில் எமக்கு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அந்த சந்திப்பு இன்னமும் இடம்பெறவில்லை. ஒரு சில தாமதங்கள் காரணமாக இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லி சென்று அவரை சந்தித்து எமது நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடுவோம்.
தற்போது இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரஜாவுரிமை திருத்தச் சட்டம் மூலமாக இலங்கை வாழ் மக்கள் அதிகமாக சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. எனினும் எமது மக்களை மீண்டும் எமது தாயகத்தில் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம். அவர்கள் மீண்டும் எம் மண்ணுக்கு வரவேண்டும். அவர்களின் தாயக பூமியில் அவர்கள் நிம்மதியாக வாழ வேண் டும். அதற்கான வழிமுறைகளை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த விடயங்கள் குறித்தும் அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அவை இன்று நடைமுறைப்படுத்தப்படாது உள்ளன. எனவே இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை அகதிகள் குறித்து இரு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்மானத்தை எட்ட வேண்டும். தமிழகத்தில் தங்கியிருக்க விரும்பும் மக்கள் அங்கேயே வாழவும் இலங்கைக்கு திரும்பி வர நினைக்கும் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வரவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்கள் குறித்து கலந்துரையா டப்பட்டது. எமது அரசியல் நகர்வுகள் குறித்து சர்வதேசம் பார்த்துக்கொண்டுள்ளது. எனவே அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடி க்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM