ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது, பேச்சோடு பேச்சாக புதியதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து அவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தமிழ்க் கட்சிகள் விடவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. முஸ்லிம் கட்சிகளும் அவ்வாறே செயற்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கள மக்கள் மாத்திரம் தனித்துவமாக செயற்பட்டார்கள் என்று அவர் பெருமையுடன் கூறியிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் சுதந்திரமாகவும் எந்த வன் முறைகளும் இன்றி இடம்பெற்றிருந்தன.
சமூக ஊடகங்களின் அத்துமீறல்கள் தவிர, வேறெந்த குறிப்பிடும்படியான வன்முறைகளோ அத்துமீறல்களோ, அழுத்தங்களோ இல்லாமல் இடம்பெற்ற முதலாவது தேர்தல் என்று கூறும்படியாக அது இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களும், ஏனைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் இந்த தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.
எல்லாம் முடிந்து ஒரு மாதம் கழித்து, தமிழ் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை என்ற குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ.
அவ்வாறாயின் தமிழ் மக்கள் அழுத்தங்களுக்கு மத்தியில் தான் வாக்களித்தனர் என்றே பொருள். அவரது இந்தக் கருத்து அல்லது குற்றச்சாட்டு பல விடயங்களை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழ், முஸ்லிம் மக்கள், ஜனாதிபதித் தேர்தலில் அளித்த தீர்ப்பு அல்லது ஆணையை அவரால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. அத்துடன், தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் மன நிலையை, எதிர்பார்ப்புகளை சரிவர அவரால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.
அவரது கருத்து வெளிப்படுத்தியிருக்கின்ற பல விடயங்களில் இந்த இரண்டு விடயங்களும் முக்கியமானவை.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் அல்லது முஸ்லிம் மக்களின் மீது, எந்தவொரு தரப்பும் அழுத்தங்களைக் கொடுக்கவோ, ஆதிக்கம் செலுத்தவோ இல்லை.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தது உண்மை. அவருக்காக வாக்குகளைக் கோரியது உண்மை. அதற்காக அவர்களின் வாக்குகளை அளிக்கின்ற சுதந்திரம் அல்லது சுயாதீனத்தன்மை மீது யாருமே ஆதிக்கம் செலுத்தியிருக்கவில்லை.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு தமிழ்க் கட்சிகளை குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் பிடிக்காது. அதனை அவர் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். கடந்த திங்கட்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் ஆளுநர் நியமனத்தில் இருந்த இழுபறிக்குக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குற்றம்சாட்டத் தவறவில்லை.
கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் வரும் என்று ஆளுநர் பதவியை ஏற்கப் பலரும் முன்வரவில்லை என்று அவர் குற்றச்சாட்டை சுமத்தினார்.
பொருத்தமான ஒரு ஆளுநரைத் தெரிவு செய்ய முடியாத இயலாமையைக் கூட, கூட்டமைப்பின் மீது சுமத்தி விடுகின்ற அளவுக்கு, தமிழ்க் கட்சிகளை விமர்சிப்பது வழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால், தமிழ்க்கட்சிகள், சுதந்திரமாக வாக்களிக்க தமிழ் மக்களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியதல்ல.
சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தவில்லை. அவர் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற முடியும் என்று எதிர்பார்த்திருக்கவும் இல்லை. அவர் சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறவே திட்டமிட்டிருந்தார். கூட்டமைப்பு அவருக்கு ஆதரவளித்திருந்தால் சிங்கள மக்களின் வாக்குகள் தான் குறைந்திருக்குமே, தவிர, அவரது வெற்றியை பிரமாண்டப்படுத்தியிருக்காது.
அடுத்து, சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க கூட்டமைப்பு எடுத்த முடிவினால் தான் அல்லது கூட்டமைப்பு வழிகாட்டியதால் தான், தமிழ் மக்கள் இந்த முடிவை எடுத்தார்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் அது அவரது அறியாமை தான். தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் தான், கூட்டமைப்பும் அந்த வழியில் செல்ல முனைந்தது. இது தான் உண்மையான நிலை.
கோத்தாபய ராஜபக் ஷ தொடர்பாக தமிழ் மக்களுக்கு இருந்த அச்சம், அவநம்பிக்கை, ஏமாற்றம், எல்லாம் சேர்த்தே அவருக்கு எதிரான ஆணையை வழங்கக் காரணமாக இருந்தது.
தன்னை தமிழ், முஸ்லிம் மக்கள் முழுமையாக நிராகரித்ததை ஜனாதிபதியினால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த குறையுணர்வில் இருந்து அவரால் வெளியே வரவும் முடியாமல் இருக்கிறது.
அனுராதபுர- ருவன்வெலிசாயவில் நிகழ்த்திய முதலாவது உரையில் தொடங்கி, ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பு வரை அவர் பல சந்தர்ப்பங்களில், தனக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.
அந்த ஏமாற்றத்தை அவர், தமிழ், முஸ்லிம்கள் வாக்களிக்காமல் போனாலும் அவர்களுக்கும் தானே ஜனாதிபதி என்று கூறுவதன் மூலம் நிவர்த்தி செய்ய முனைகிறார்.
இது அவர் சமாளிப்புக்காக கூறிக் கொள்ளுகின்ற விடயமா அல்லது எல்லோருக்குமான ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறிவரும் அறிவுரையின் விளைவா என்பது தெரியவில்லை.
எது எவ்வாறாயினும், இதற்கு முன்பிருந்த எந்தவொரு ஜனாதிபதிக்குமே, சர்வதேச சமூகம், அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்பட வேண்டும் என்ற அறிவுரையைக் கூறியதில்லை.
தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அவ்வாறான ஒரு அறிவுரையை சர்வதேசம் கூறுகிறது என்றால், அதற்குக் காரணம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களால் அவர் நிராகரிக்கப்பட்டது தான்.
தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு ஜனாதிபதியாக, தெரிவு செய்யப்பட்ட நிலையில், தன்னை சிங்கள மக்களின் தனித்துவத்தினால் வெற்றி பெற்ற தலைவராக தொடர்ந்தும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் இன்னமும் கூட தமிழ், முஸ்லிம் மக்களின் மன விருப்பங்களையோ, ஆழ்மன அபிலாஷைகளையோ நாடி பிடித்துப் பார்க்கவில்லை.
எதற்காக தனக்கு தமிழ், சிங்கள வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதைக் கூட, புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை.
தன்னை ஒரு யதார்த்தபூர்வமான தலைவராக காட்டிக் கொள்ளும் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு, புரியாத அந்த உண்மை- இன்னமும் அரசியலில் கூட இறங்காத பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் இளைய மகன் றோஷித ராஜபக் ஷவுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.
அவர் அண்மையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், “வடக்கில் எங்களுக்கு யாரும் வாக்களிக்கவில்லை. அது வடக்கு மக்களின் தவறு அல்ல. நாங்கள் செய்த தவறு தான்.
வடக்கில் வாழும் மக்களின் தேவைகளை அடையாளம் காணவில்லை. நாங்கள் அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த மக்களின் மனங்களை வெல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட வேண்டும்.
தமிழ் மக்களினால் எங்களுக்கு பயன் இல்லை என சிந்திக்கும் அரசியல் மனநிலையே உள்ளது.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் இணைந்து செயற்பட வேண்டும். அவர்களை பிரிக்கக் கூடாது.” என்று கூறியிருந்தார்.
ஆனால், ஜனாதிபதி கோத்தாபயவோ, தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர் என்றும் இல்லையேல், தமக்கு வாக்களித்திருப்பார்கள் என்பது போலவும் நியாயப்படுத்த முனைகிறார்.
இதிலிருந்து அவர் தோல்வியில் இருந்து பாடம் கற்கவோ, தமிழ் மக்களின் பிரச்சினையை கையாளும் அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ளவோ தயாராக இல்லை என்றே உணர்ந்து கொள்ள முடிகிறது.
சிங்கள மக்களின் தனித்துவமான வாக்குகளால் அவர் நாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் எண்ணுவது போல, எல்லா மக்களுக்கும் நான் தான் ஜனாபதிபதி என்று கூறிக் கொள்ளும் தகைமை அவருக்கு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால், நாட்டின் கணிசமான பகுதியினரான தமிழ் பேசும் மக்களின் மன உணர்வுகளை, அவர்களின் பிரச்சினைகளைச் சரியாக அடையாளம் காணக் கூடிய தலைவராக அவர் இன்னமும் உருவாகவில்லை.
அவ்வாறான தகைமையைப் பெறும் வரையில் நடைமுறைச் சாத்தியமில்லா திட்டங்களையும், செயல்முறைகளையும் பற்றி பேசிக் கொண்டிருக்கத் தான் முடியுமே தவிர, பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM