பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்க சிந்தனையை பெரும்பான்மையாகக் கொண்ட சமூகத்தில் சிக்கித் தவித்த பெண்கள், இன்று சாதனைப் பெண்களாக வலம் வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் சாதனைப் படைக்கும் போது அது வரலாறாக மாறுகின்றது. இவர்களின் வளர்ச்சியானது சகலரையும் நெஞ்சை உயர்த்தி பெருமிதம் கொள்ள வைக்கின்றது.
அவ்வாறு சாதனைப் பெண்களின் வரிசையில் ஒருவராகத் தான் திருமதி சிவநந்தினி துரைசாமி காணப்படுகின்றார். இலங்கையில் முழுமையாக பெண்களின் தலைமைத்துவத்தால் கட்டமைக்கப்பட்ட, சைவ மங்கையர் கழகமானது பல்வேறு சாதனை சுவடுகளை சுமந்து வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரின் வாரிசான திருமதி சிவநந்தினி துரைசாமி கழகத்தில் 50 வருட சேவையை முன்னெடுத்துள்ளதுடன் ஒரு முகாமையாளராக 25 வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கின்றார். சைவ மங்கையர் கழகத்தின் முக்கிய அங்கமாக காணப்படுவது தான் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல பாடசாலையான சைவ மங்கையர் கல்லூரி ஆகும்.
இந்த கல்லூரி மாணவிகள் ஒவ்வொரு வருடமும் கல்வி மற்றும் ஏனைய பாட விதானங்களில் வரலாற்று சாதனைகளை செய்து வருகின்றனர். அது மாத்திரமன்றி சைவ மங்கையர் கழகத்தில் மேலும் பல அங்கங்களாக டாக்டர். மரியா பாலர் பாடசாலை, வயோதிப பெண்களுக்கான முதியோர் பராமரிப்பு இல்லம், பெண்கள் விடுதி மற்றும் மாணவ விடுதி என்பனவும் காணப்படுகின்றன.
இந்த ஒவ்வொரு அமைப்பும் இன்று வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கின்றது. ஒரு மகளிர் தலைமைத்துவத்தின் கீழ் பல சவால்களையும் தாண்டி சாதனை சிகரத்தை நோக்கி பயணிக்கின்றது.இவ்வாறு சாதனைப் பெண்ணாக இருக்கின்ற சைவ மங்கையர் கழகத்தின் முகாமையாளராக 25வருட சேவையை நிவர்த்தி செய்கின்ற திருமதி சிவநந்தினி துரைசாமி வீரகேசரி நாளிதழுக்கு விசேட நேர்காணலை வழங்கியிருந்தார்.
அந்த நேர்காணலின் முழு விபரம் இதோ,
கேள்வி: சைவ மங்கையர் கழகத்தின் உருவாக்கமும் அதற்கான பின்புல காரணிகள் குறித்தும் ஒரு சிறிய விளக்கத்தை வழங்க முடியுமா?
பதில்: 1930 ஆண்டு ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை இருந்தபோது, ஒரு சில பெண்மணிகள் தங்களுடைய வருங்கால சந்ததியினர் தமிழையும் இந்து சமயத்தையும் மறந்து விடப் போகிறார்கள் என்ற அச்சத்தை கொண்டிருந்தமையால் சைவ மங்கையர் கழகத்தை ஸ்தாபித்தார்கள். அதன் குறிக்கோள் தமிழ்மொழியையும் இந்து சமயத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.
இது முழுமையாக பெண் ஸ்தாபகர்களால் மாத்திரம் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். கழக ஸ்தாபகர்களாக இருந்தவர்களின் கணவன்மார்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியதன் ஊடாக கழகத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றும் முகமாக சைவ மங்கையர் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
சைவ மங்கையர் கழகம் அதன் குறிக்கோள்களை நிறைவேற்றும் முகமாக ஒரு சில அமைப்புகளை, பெண்கள் நலன் சார்ந்தவையாக ஆரம்பித்தது.
அந்தவகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாடகம், சங்கீதம் பரதநாட்டியம் ஆகியவை பாடங்களாக கற்பிக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றை பாடங்களாக சேர்க்க முடியாதென கூற, சங்கீதமும் பரதநாட்டியமும் வேண்டும் என்ற நோக்கத்தோடு இசை நடன கல்லூரியை 1945 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார்கள்.
அதற்குப் பின்னர் 1952 ஆம் ஆண்டளவில் முன் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்படுத்தப்பட்ட பல இடையூறுகள் காரணமாக கல்லூரியின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமாகின.
1960 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவந்த மசோதாவை தொடர்ந்து சமய சார்பான கல்லூரிகள் யாவும் அரசாங்க கல்லூரிகளாக மாறவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் சைவ மங்கையர் கழகம் அரசாங்கத்துடன் போராடி கல்லூரியை ஒரு தனியார் பாடசாலையாக நடத்தியது.
இவ்வாறு பல்வேறு சவால்களுடன் உருவாக்கப்பட்ட பாடசாலையானது இன்று வன் ஏ. பி. என்று சொல்லக்கூடிய முதல்தர பாடசாலையாக விளங்குகின்றது.10 இற்கும் குறைந்த மாணவிகளுடன் ஆரம்பமாகி இன்று 2400 மாணவிகளை கொண்ட முதல்தர பாடசாலையாக எமது கல்லூரி விளங்குவதோடு அன்றிலிருந்து இன்றுவரை முழுமையான பெண்ணிய தலைமைத்துவத்தை கொண்ட அமைப்பாக செயற்பட்டு கொண்டிருக்கின்றது.
கேள்வி: இலங்கையில் பெண்ணிய தலைமைத்துவமும்- அதில் சைவ மங்கையர் கழகத்தின் வகிபாகமும் எவ்வகையான பங்களிப்பை செய்வதாக நினைக்கின்றீர்கள்?
பதில்: இந்த தலைமைத்துவ ஒப்பீட்டில் குறைந்தளவாகவே பெண்கள் நிற்கின்றார்கள் என நான் கருதுகின்றேன். பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் தங்களை நிரூபித்துக் கொண்டு வருகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது. அதனடிப்படையில் கல்வித்துறையில் பெண்கள் சுய கௌரவத்தோடு வளரவேண்டும் என்று, ஒரு வழிகாட்டியாக சைவ மங்கையர் கழகமும் அதன் முக்கிய ஸ்தாபனங்களும், சைவ மங்கையர் வித்தியாலயமும் முழு பங்களிப்பை ஆற்றி வருகின்றது.
ஏன் இந்த வித்தியாலயம் ஸ்தாபிக்கப்பட்டது, ஏன் இந்த வித்தியாலயத்தை எங்களுடைய ஸ்தாபகர்கள் உருவாக்கினார்கள் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. மகாத்மா காந்தி கூறிய ஒரு முக்கிய கொள்கையை இவர்கள் அடித்தளமாக வைத்து இந்த வித்தியாலயத்தை ஆரம்பித்தார்கள்.
ஒருவள் குழந்தைக்கு கல்வியை புகட்டினால் அது முழு குடும்பத்தையும் சேரும் என்ற ஒரு பெரு நோக்கோடு அவர் அதைக் கூறினார். அதே வேளையில் ஒரு ஆண் குழந்தைக்கு கல்வியை புகட்டினால் அது தனி மனிதனுக்கான கல்வியாக போய்ச்சேரும் எனச் சொன்னார்.
இதை கருப்பொருளாக வைத்து சைவ மங்கையர் வித்தியாலயத்தை பெண்களுக்கான ஒரு பாடசாலையாக அமைக்க வேண்டும் என்று அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இது மிக முக்கியமான ஒரு அம்சமாக எனக்கு தோன்றுகிறது. அதாவது பெண் கல்வியின் மகத்துவத்தை 1932ஆம் ஆண்டு அவர்கள் அறிந்து அதை நடைமுறைப்படுத்தி இன்று ஆயிரக்கணக்கான மாணவிகள் எங்களுடைய கல்லூரியில் இருந்து வெளியேறி சமூகத்துக்கு பங்காற்றுவதை நாங்கள் கண்ணாரக்கண்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
கேள்வி: இன்றைய இளம் தலைமுறை மங்கையர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக இருப்பது என்ன?
பதில்: பல சவால்களை அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். குறிப்பாக வீட்டினதும் நாட்டினதும் பொருளாதார முன்னேற்றத்தில் அவர்கள் பெரும்பங்காற்றி வருவதால், தங்கள் தங்கள் குடும்பங்களை சற்று மறக்க வேண்டியதாக இருக்கிறது. தங்களுடைய குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒரு முக்கிய நோக்கத்தை அவர்கள் சற்று பின்தள்ளி, குடும்பம் சார்ந்த முன்னேற்றத்தை மட்டும் கருதி வருவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் பொது செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வீதம் குறைவடைந்த நிலையிலேயே உள்ளதெனலாம். மேலும் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப செயலிகளுக்கு இளம் தலைமுறையினர் அடிமையாகி, அதனுடன் செலவிடும் நேரம் மிக அதிகமாக உள்ளது. இந்த சாதன பயன்பாடுகள் காரணமாக சிறு வயது குழந்தைகள் கூட தனித்துவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியானது இந்த மாற்றங்களை நோக்க வேண்டியதாக இருக்கின்றது. ஏனென்றால் குழந்தைகளை பராமரிப்பது ஒரு தாயின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். நாங்கள் பிறந்தது வளர்ந்தது எங்களுடைய பெற்றோர்களுடைய கண்ணோட்டத்தில். ஆனால் தற்போதைய சூழலில் அநேகமான குழந்தைகளுக்கு அந்தப் பாக்கியம் இல்லை. ஆகவே ஒரு தாய் என்பவள் குழந்தையுடன் முழு நேரத்தையும் செலவிடவேண்டியது முக்கியமானதாகின்றது.
கேள்வி: கலவன் படசாலைகளை விட தனித்துவ பாடசாலைமுறை மாணவர்களிடையே எவ்வாறான ஆளுமைகளை கட்டமைக்கின்றது?
பதில்: ஆரம்ப காலம் தொட்டு இது தனித்துவ பாடசாலையாக இருக்கின்றது. இந்த பாடசாலையில் நான் இரண்டு மூன்று வருடங்கள் ஆசிரியராக கற்பித்து வந்த காலகட்டத்தில் அந்தத் தனித்துவம் மாணவிகளுக்கு மிகவும் முக்கியமாக இருந்ததை கண்டு கொண்டேன். ஏனெனில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கிடையேயான போட்டிகள் இல்லை. அத்தோடு இந்த மாணவர்கள் எந்தவிதமான பாலின அடக்குமுறைகளையும் எதிர் கொள்ளாமல் வளர்வதனால் எதிர்கால சிந்தனைகள் யாவும் அடக்குமுறைகளை புறந்தள்ளி ஒரு சம உணர்வு மிக்க சிந்தனைகளை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றது.
அவர்களிடையே சுய ஒழுக்கம் சார் படிப்பினைகளும், ஆளுமைகளை வளர்க்கக் கூடிய படிப்பினைகளும் அதிகமாக கற்பிக்கப்படுவதோடு, சமூகத்தில் சம சிந்தனை உணர்வுகளை வளர்க்கவும் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய பண்புகளை முழுமையாக வளர்ப்பதற்கும் இந்த தனித்துவ பாடசாலை முறைமை உதவும் விதத்தை அனுபவமூடாகவே கண்டுள்ளேன்.
கேள்வி: இலங்கையில் பெண்களுக்கான தலைமைத்துவ வகிபாகம் குறித்த உங்களின் பார்வை?
பதில் : முக்கியமான நோக்கத்தோடு பெண்மணிகள் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சுய தொழில்களை செய்து வருவார்களேயானால் அது சமூகத்துக்கான சேவையாக அமையும். அதே நேரத்தில் தங்கள் குடும்பங்களையும் பராமரிக்கக் கூடிய நிலை வரும். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமலும் பெண்ணானவள் முன்னேறலாம் என்பது என்னுடைய கருத்து
கேள்வி: ஒரு பெண், தலைமைத்துவ பதவியில் 25 வருடங்கள் வெற்றிகரமாக பயணிப்பது என்பது இன்றைய சமூக சூழலில் இலகுவான விடயமல்ல. இந்த வெற்றி பயணத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?
பதில்: சில சமயங்களில் சிலவற்றை செய்தாக வேண்டும். எதிர் நீச்சல் போட்டாவது நான் செய்ய வேண்டிய நிலைமைகளும் இருந்தன. ஒரு கட்டத்தில் நீ என்ன செய்தாய்? நீ ஏன் இதை செய்தாய்? என்ற கேள்விகள் நிறையவே இருக்கும். ஏனென்றால் நிர்வாகசபை குழுதான் கூடுதலாக கேள்விகளைக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தக் கூடிய நிலைமை இருக்கிறது. அவ்வாறு நிர்ப்பந்தங்கள் ஏற்படும் போது வேலைகளை எந்தவித தவறுகளுமின்றி நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
கேள்வி: நீங்கள் வழிநடத்தி செல்லும் சைவ மங்கையர் கழகத்தின் எதிர்காலதங திட்டமிடல்கள்?
பதில்: சிறப்பாக இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். இதுதான் எங்களுடைய அவசியத் தேவையும் ஆகும். ஆனால் இந்த முன்னேற்றத்தில் எங்களுடைய பங்கு என்னவென்று நோக்கினால், பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார் சேவை செய், சேவை செய்வது தான் உன்னுடைய கடமை. ஒரு எதிர்பார்ப்புமின்றி பலாபலன்களை கருதாமல் சேவை செய், நீ செய்யும் சேவையை எம்பெருமானின் திருவடிகளில் அர்ப்பணித்து செய் என்று கூறிய அந்த முக்கிய அம்சத்தை மனதில் வைத்து நாங்கள் சேவை செய்கிறோம். எல்லாம் சிறப்பாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
கேள்வி: பாரதி கண்ட புதுமைப் பெண்கள் ஏராளமாக வந்துவிட்டார்கள். அவர்கள் இன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்கு மேலும் ஆற்ற வேண்டிய பணிகள் எவை என நினைக்கின்றீர்கள்?
பதில்: புதுமைப் பெண் பழமை பெண் எங்களுக்கு தேவையா? என்ற ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். பழமை பெண்தான் புதுமையாக ஆகிறாள், புதுமைப் பெண் தான் பழமையிலிருந்து எழுந்து வந்து இருக்கிறாள். ஆனால் அவளுடைய தேவையான முக்கிய கொள்கைகளும், முக்கியமான சேவைகளும் ஒருபோதும் மாறாது. என்னுடைய கருத்தின்படி அவள்தான் குடும்பத்துக்கு மையமாக இருந்து முழுமையாக நடத்துகிறாள். அந்த மையத்தில் இருந்து விலகினால் அவளும் எல்லாவற்றிலும் இருந்தும் விலகியதாகவே நான் கருதுவேன். தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய குழந்தைகளை அவள் முன்னேற்றி வந்தாலே அவளும், சமூகமும் சிறப்பாக இருக்கும். அதையே புதுமைப் பெண் என நான் கருதுகிறேன். பாரதி குழந்தைகளையும் சேர்த்து பாடியிருக்கிறார். பெண்ணையும் புதுமையாக படைத்திருக்கிறார். அந்தப் படைப்புகளில் இந்தக் கருத்துகள் உள்ளடங்கியிக்கின்றது என்பதை நான் காண்கின்றேன்.
கேள்வி: சைவ மங்கையர் கழகத்திலிருந்து வளர்ந்த பழைய மாணவர்கள் கழக வளர்ச்சிக்கு எவ்வாறான பங்களிப்பை செய்கின்றார்கள்?
பதில்: இந்த கழகத்தில் வளர்ந்த பழைய மாணவிகள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறார்கள். பாடசாலையினதும் இதர அமைப்புகளினதும் வளர்ச்சியில் அவர்களும் தமது பங்கை சிறப்பாக செய்கிறார்கள். அந்தவகையில் கழகத்தை முன்னேற்ற வேண்டும், அதில் உள்ள கஷ்டங்களில் நாங்களும் பங்கேற்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அவர்களிடையே உள்ளது. அதனால்தான் ஒரு சில மூத்த பழைய மாணவர்கள் கழகத்தோடு சேர்ந்து எம்முடைய நிர்வாகசபை அங்கத்தவர்களாக செயற்பட்டு வருகிறார்கள்.
திருமூலரின் யான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம் என்ற கூற்றுக்கிணங்க, தாங்கள் பெற்ற நன்மைகளை எடுத்து தங்களால் இந்த கல்லூரிக்கு செய்யக் கூடியவற்றை செய்யவேண்டும் என செய்து கொண்டு வரும் சேவையை பார்க்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1958 -– 60 ஆம் ஆண்டுகளில் நான் இந்தக் கல்விக் கூடத்தில் ஆசிரியராக சேர்ந்து படிப்பித்த ஒரு சில மாணவிகள், இன்று நல்ல பதவிகளில் இருந்து முன்னேறி, நாட்டுக்கும் சேவை செய்து தங்களுடைய பழைய கல்லூரிக்கும் பேரும் புகழும் ஈட்டி நிற்பதை கண்ணாரக் கண்டு மகிழ்கிறேன்.
கேள்வி: வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர் வெற்றி பாதையில் செல்ல தங்களிடையே எவ்வாறான பண்புகளையும் பயிற்சிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது?
பதில்: நாங்கள் மற்றவர்களுடன் போட்டி போடுவதை விடுத்து இன்றைய நீ நேற்றைய உன்னை விடவும் நாளைய நீ இன்றைய உன்னை விடவும் மேம்பட்டிருக்க உழைப்பது சிறப்பைத் தரும்” என நம்புகிறேன். இன்றைய நீ உன்னுடைய ஆணவத்தை விட்டு நாளைய நீயாக மாற அந்த ஆணவத்தை விட்டு செயற்பட்டாலே வெற்றியை நோக்கி நகரலாம் என நினைக்கின்றேன் என்றார்.
நேர்காணல்:
எஸ்.லோகேஸ்வரன்
படப்பிடிப்பு எஸ்.எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM