நேற்றிரவு சி.சி.டி.யினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் வெலிக்கடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் போது உண்மைகளை, சாட்சிகளை மறைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டார்.
இந்த வாகன விபத்து தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த போதிலும் இது தொடர்பில் மீள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வாவுக்கு அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சம்பிக்கவினதும் அவரது சாரதியினதும் வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிமன்றம் அவர்களது கடவுச் சீட்டுக்களை முடக்கியது. பின்னர் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ, பொலிஸ் பரிசோதகர் மெக்கனந்த உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை நடத்தினர்.
இதன் போது வாகன விபத்தை அடுத்து வெலிக்கடை பொலிஸார் செய்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட சில தொலைபேசி இலக்கங்கள் உட்பட 20 தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி தீவிர விசாரணைகள் இடம்பெற்றன. அதில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியது.
அதன் படி நேற்று மாலை தமது ஆலோசனையை வழங்கிய சட்ட மா அதிபர் முன்னாள் அமைச்சர் சம்பிகவை சந்தேநபராக பெயரிட்டு உடனடியாக அவரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து நேற்று இரவு முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் வீட்டுக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தலைமையிலான குழுவினர் சம்பிகவை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் நேற்று இரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சம்பிக்க ரணவக்க எம்.பி.யை இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் இன்றையதினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது செய்யப்பட்டு குற்றத்தடுப்புப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் முன்னாள் பிரதித்த லைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச உட்பட பல எம்.பி.க்களும் சென்றிருந்தனர். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது அருகில் சஜித் பிரேமதாச எம்.பி.யும் நின்றிருந்தார்.
நேற்றிரவு சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அங்கு ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, எஸ்.எம்.மரிக்கார் , ஹிருனிகா பிரேமசந்திர ஹர்ச டி சில்வா உட்பட பலரும் வருகை தந்திருந்தனர். அத்துடன் சம்பிக்கவின் ஆதரவாளர்களும் நீதிமன்றுக்கு முன்னாள் குழுமியிருந்தனர். பெருமளவு பொலிஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்ததுடன் சிறைச்சாலை வாகனமும் கொண்டுவரப்பட்டிருந்தது. குற்றத்தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றுக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்த நிலையிலேயே சம்பிக்க ரணவக்க அழைத்துவரப்பட்டார்.
நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து குற்றத்தடுப்புப் பிரிவினர் சம்பிக்க ரணவக்கவை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சம்பிக்கவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான் சம்பிக்க ரணவிக்கவை இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இன்றையதினம் மீண்டும் வழக்குவிசாரணை இடம்பெறும் என்றும் அறிவித்தார்.
இதனையடுத்து சம்பிக்க ரணவக்க சிறைச்சாலை காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ரணில் விஜயம்
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்றதுடன் உறவினர்களுடன் கலந்தரையாடினார்.
பின்னணி
கடந்த 2016 ஆம் ஆண்டு வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகிரிய பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க பயணித்த ஜீப் வாகனம் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சன்தீப் சம்பத் என்ற நபர் படுகாயமடைந்தார். அவருடன் பயணித்த பிரிதொரு நபர் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை துரத்தி சென்ற போது முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் சாரதியே வாகனத்தை செலுத்தியதாக துரத்தி சென்ற குறித்த நபர் கூறியிருந்தார். இருந்த போதிலும் சம்பவம் தொடர்பில் துசித குமார என்பவரே நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM