மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள மலையக பல்கலைக்கழகத்திற்கு பலர் மத்தியில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் , அதனை உருவாக்குவதே மலையக மக்கள் மற்றும் மலையக அமைப்புகளின் பெரும் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றும் வகையிலான முதல் அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட 32 கோரிக்கைகளுள் ஒரு அம்சமான இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனை செயற்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் ஆறுமுகனின் பரிந்துரையின் பேரில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜின் தலைமையில் உபகுழு அமைக்கப்பட்டு அதற்கான செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பான முதல் கலந்துரையாடல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது மலையக கல்விமான்கள் , பேராசிரியர்கள் , அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் , நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன், மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் மூன்று சுற்றுக்களில் கலந்துரையாடப்பட்டது. சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்த இந்த கலந்துரையாடலில் ஏன் மலையகத்துக்கென்று பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும், அதன் அமைப்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பது தொடர்பில் கல்விமான்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் , திறந்த சுற்றில் பல்கலைக்கழகத்திற்கான அவசியம் தொடர்பில் சபையிலிருந்த பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ்
மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான வழிபிறந்துள்ளது. அதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சிபேதம் இன்றி நாம் ஒன்றிணைந்து செயற்பட்டாலே இதில் வெற்றிகாண முடியும்.
அமைச்சர் ஆறுமுகன் என்னை அழைத்து இந்த விடயம் தொடர்பில் உங்களால் ஆராய்ந்து பார்க்க முடியுமா என்று கேட்டபோது , நான் மிக மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நாம் தீர்மானித்தோம். இந்த கலந்துரையாடலை கல்வி அமைச்சில் மேற்கொள்வது உசிதமானது அல்ல என்பதினால், தமிழ்ச்சங்கம் போன்ற ஒரு மண்டபத்தில் மேற்கொள்வது சிறந்தது என்று கருதியே இதனை இங்கு ஒழுங்கு செய்துள்ளோம்.
மலையக சமூகத்தைச் சேர்ந்த சிறந்த கல்விமான்கள் இருக்கின்றனர். இவர்களுடன் கலந்துரையாடி இதற்கான முடிவுகளை எடுப்பது சிறந்தது என்று நான் கருதுகின்றேன். பிரித்தானியரின் ஆட்சி காலங்களின் போது, 1902 ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட பிள்ளைகளுக்கு ஏன் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்ட போது , தோட்ட நிர்வாக சங்கத்தலைவர்கள் 'கல்வி போதிக்கப்படாவிட்டால் அப்படியொரு பாதிப்பும் ஏற்படபோவதில்லை, மாறாக கற்பிக்கப்பட்டால் வீண் விபரீதங்களே ஏற்படும்" என்றும் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வந்த எமக்கு சுதந்திரத்தின் பின்னரான, 1977 ஆம் ஆண்டின் பின்னரே அதில் மாற்றம் ஏற்பட தொடங்கின. இந்நிலையில் நாம் தற்போது கல்வியில் உயர் நிலையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சூழ்நிலையிலே மலையகத்துக்கென்று பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவது உசிதமானது என நான் எண்ணுகின்றேன்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் கடந்த 12 வருடகாலமாக நானும் , பேராசிரியர் மூக்கையா மற்றும் பேராசிரியர் தனராஜ் உள்ளிட்ட பலரும் எழுதி வருகின்றோம். இந்த விடயம் தொடர்பில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானிடம் நாங்கள் தெரிவித்த போது அவரது வேண்டுகோளுக்கிணங்க அறிக்கையொன்றையும் தயாரித்துக் கொடுத்திருந்தோம். பின்னர் பல தடவைகள் குழு அமைத்தும் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
1942 ஆம் ஆண்டே இலங்கைக்கான முதல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கான யோசனைகள் 1890 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஆங்கிலேயர் காலத்திலே இலங்கையில் பல்கலைக்கழகமொன்றை அமைக்க தீர்மானித்த போது எவ்வாறான தடங்கல்கள் ஏற்பட்டதோ அதேபோலதான் இப்போது மலையகப் பல்கலைக்கழகத்திற்கும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்று வருகின்றன.
சுமார் 15 இலட்சம் மக்களை கொண்டுள்ள மலையகத்தின் அடையாளத்தை பிரதிபலிக்க ஒரு தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.இதுவரை காலமும் தனக்கென்ற பல்கலைக்கழகம் தொடர்பில் சிந்திக்காத மக்கள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள் என்றால், அவர்கள் வளர்ச்சியடைந்து விட்டார்கள் என்பதையே உணர்த்துகின்றது. நாங்கள் ஒரு இனத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்காக இந்த யோசனையை முன்வைக்கவில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் அவர்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வவுனியாவிலும் பல்கலைக்கழகமொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்மக்களின் வரலாறு கலாசார பண்புகள் ஆராயப்பட , அவர்களின் அடையாளத்தையும் மேம்படுத்த வேண்டும் அல்லவா? ஏனைய பல்கலைக்கழகங்களில் எமது பண்புகள் தொடர்பில் கற்கை நெறிகளை மேற்கொள்ள முடியாது.
ஜனாதிபதி நினைத்தால் ஒரு நிமிடத்தில் பல்கலைக்கழகத்தை அமைக்க முடியும். ஆனால் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் குழுக்கள் அமைத்து ஆராய்ந்து இறுதியில் அது தேவையில்லை என்ற நிலைமை ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது.
இறுதியாக எம் நாட்டில் 2005 ஆம் ஆண்டே பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 14 வருட காலமாக இன்னும் ஒரு பல்கலைக்கழகம் கூட உருவாக்கப்படவில்லை. எமது வேண்டுகோள் என்னவென்றால், அடுத்த பல்கலைக்கழகத்தை நுவரெலியா மாவட்டத்தில் அமையுங்கள் என்பதே. ஆராய்ச்சிகளின் ஊடாகவே சமூகத்தின் மேம்பாட்டை ஏற்படுத்த முடியும். நாமும் எமது சமூகத்தில் மேம்பாட்டை ஏற்படுத்துவதென்றால் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே எமக்கென்று ஒரு பல்கலைக்கழகம் தேவைப்படுகின்றது.
பல்கலைக்கழகங்களிலே கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது சமூகம் தொடர்பிலும் நாம் அவற்றை மேற்கொள்ள வேண்டும். .அதேவேளை இவ்வாறு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டால் உயர்கல்விக்கான கேள்வியும் எமது சமூகத்தில் அதிகரிக்கும். அப்போது அனைவரும் உயர்கல்வியை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். எந்த பல்கலைக்கழகத்திலும் பட்டபடிப்பை மேற்கொள்ளலாம். ஆனால் மலையக மக்களை அடையாளப்படுத்தும் வகையிலான கற்கைநெறிகளை முன்னெடுக்கவே இந்த மலையத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் தேவையாகவுள்ளது.
பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா
பல்கலைக்கழகம் என்றால் பாடசாலை கல்வியை முழுமையாக முடித்த மாணவர்களுக்கான உயர் கல்வியை வழங்கி அதற்கான ஒரு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் பட்டமொன்றை வழங்கும் இடம் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.இவை காலத்திற்கு காலம் அவற்றின் நடைமுறைகள், இயக்கங்கள் என்பவற்றை பொறுத்து வளர்ச்சியடைந்து வருகின்றன.
'யுனி வர்சிட்டி" என்பது ஐரோப்பிய ஜேர்மனிய சிந்தனை. தலைமைத்துவதற்திற்கான பயற்சிகளை மாத்திரம் வழங்கும் இடமாகவே இவை காணப்பட்டன. இதன்போது தனவந்தர்கள் மற்றும் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் மாத்திரமே இதன் மூலம் கல்வி கற்று வந்தனர்.ஆனால் இங்கு ஏற்பட்ட புரட்சிகளின் பின்னர் ஏனைய சமூகத்தினரும் கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
வளர்ச்சியடைந்த நாடுகளில் பல்கலைக்கழகம் என்பது தனியான சமூகத்தினருக்கு என்று வேறுப்படுத்தபடாமல் , அனைத்து சமூகத்தினரையும் இணைத்துக் கொண்டு செயற்படும் உயர்மட்டத்திலான கல்வி நிறுவனங்களாகவே காணப்படுகின்றது. இந்நாட்டை பொறுத்தமட்டில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் உயர்தரத்தில் தோற்றி சித்தியடைந்திருந்தாலும் கூட இதில் 30 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைக்கின்றது.ஏனைய 90 ஆயிரம் பேரில் வசதிபடைத்த பகுதியினரைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று பட்டப் படிப்பை முடித்தாலும் , மீதமுள்ள 80 ஆயிரம் மாணவர்கள் விரக்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையிலே 15 பல்கலைக்கழகங்களை வைத்துக்கொண்டு எம்மால் எந்த மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்?
பல்கலைக்கழகங்களை வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்கி நாட்டிற்கு பெரும் சுவையை ஏற்படுத்தும் நிறுவனங்களாக பார்ப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.பல்கலைக்கழகத்திற்கான அனுமதியை பெறுபவர்களின் தொகையிலும் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உயர்கல்வியை பெறுபவர்களே அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்திக் கொள்ளவேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் மட்டும்தான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும் என்ற நிலைமையை மாற்றி சாதாரண எழுத படிக்க தெரிந்தவர்கள் கூட பயிற்சிகளை பெற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமைகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளளோம்.
பேராசிரியர் தை. தனராஜ்
நாம் முதலில் மலையகப் பல்கலைக்கழகம் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.மலையகம் என்பது தனியான ஒரு சமூகத்தை பிரதிபலிப்பதாகும். இது தனியான ஒரு சமூகத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக பலராலும் அவதானிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும். ஒரு சமூகத்திற்கென்று ஏன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் தமது கலாசார அம்சங்களை வெளிப்படுத்தினாலும், அவை அனைத்தும் தேசிய பல்கலைக்கழகங்களாகவே திகழ்கின்றன. இந்நிலையில் எல்லா பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்கள் அங்கு கல்வி கற்று வருகின்றனர்.
எம்மைப் பொறுத்தவரையில் அடுத்து உருவாகவிருக்கும் பல்கலைக்கழகத்தை மலைநாட்டில் அமைப்பதே சிறந்தது. இந்நிலையில் 16 ஆவது பல்கலைக்கழகத்தை அட்டன் , கொட்டகலை அல்லது தலவாக்கலையில் அமைப்பது சாலச் சிறந்தது எனக் கருதுகின்றேன். அப்போது பல்கலைக்கழகத்துக்கு எதிரான தவறான அபிப்பிராயங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.
பல்கலைக்கழகத்தின் பழைமையான கற்கை நெறிகளாக சான்றிதழ், டிப்ளோமா, பட்டதாரி , முதுகலை என்பனவே அமையப்பெற்றுள்ளன. நாம் தொடர்ந்தும் இந்த கற்கை நெறிகள் தொடர்பிலே ஆராயாமல், வெளிப்புற திட்டங்களை ஆரம்பிப்பதே சிறந்தது. இதனூடாக நாம் முன்னேற்றகரமான வளர்ச்சியை அடையமுடியும். மாற்றம் என்பது மனித குலத்திற்கு புதியவிடயமல்ல, நாம் தற்போது எமக்கென்று ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க முன்வந்துள்ளோம். இது சாத்தியப்படுமானால் அது எமக்கு பெரும் மகிழ்ச்சியே.
இலங்கையில் விரிவுரையாளர்கள் 5000 பேர் இருக்கின்றார்கள். அவர்களுள் 21 விரிவுரையாளர்களே மலையகத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள். 500 பேராசிரியர்களில் 5 பேரே மலையகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களும் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்கள். இந்நிலையில் தற்போது பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயசந்திரனுக்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இவ்வாறான நிலையிலே நாம் ஏனைய சமூகத்தைவிட பின்னடைவிலே இருக்கின்றோம். இதனால் எமக்கு பல்கலைக்கழகம் தேவையில்லை என்பதில்லை. நாம் இந்த நிலையிலிருந்து மாற்றமடைய வேண்டுமென்றால் அதற்கான புதிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்
பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பில் 4 விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவதாக எண்ணக்கரு அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும். கடந்த 15 வருடங்களாக பல்கலைக்கழகம் தொடர்பில் பேசியும் எழுதியும் வருகின்றார்களே தவிர இந்த அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் அடிக்கடி கூடி முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் திட்டவட்டமான அறிக்கையொன்றை தயாரித்துள்ளோம்.
ஏறக்குறைய 15 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்களை கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான காரணம் , அதன் கட்டமைப்பு எவ்வாறு அமையவேண்டும் , அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் என்பன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிடமே இருக்கின்றது, இதனை மீளப் பெறமுடியுமா?அல்லது பிறிதொரு அறிக்கையை தயாரிப்பதா? என்பது தொடர்பில் முன்னாள் அமச்சர் பி.பி தேவராஜூம் அமைச்சர் ஆறுமுகனும் தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவதாக அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்து , பல்கலைக்கழகத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிலம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். மலைநாட்டு பகுதியிலே 35 ஆயிரம் ஹெக்டெயர் காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. ஹட்டன் - நுவரெலியா வீதிகளில் அவை காணப்படுகின்றன. இவ்வாறான நிலங்களை எமக்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும்.எனவே நிலத்தை அடையாளம் காணுவதில் எமக்கு சிக்கல் ஏற்படாது என்று நான் எண்ணுகின்றேன்.
நான்காவது விடயமாக நிதி திரட்டுவது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். அரசாங்கம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உடனே பல்கலைக்கழகத்தை நிராகரிக்கலாம். இவ்வாறான நிலையிலே எமக்கான நிதியை திரட்டுவது தொடர்பில் நாம் வெளிநாடுகளிலும் , எம் அயல் நாடான இந்தியாவிடமும் உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும்.
இந்த கலந்துரையாடலின் போது , இரண்டாவது சுற்றிலே பல்கலைக்கழகம் செல்லும் போது மலையக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , பல்கலைக்கழத்தின் அவசியம் , இதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் , இனிமேல் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் , கலாநிதி சந்திரமோகன் , யசோதரா கதிர்காம தம்பி , பேராசிரியர் எஸ். விஜேயசந்திரன் , கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பிரேம்குமார், கலாநிதி இரா.ரமேஸ் , இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பிரபாகரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
நிகழ்வுகளின் இறுதியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பி.பி தேவராஜ் , இந்த கலந்துரையாடலின் பின்னர் மலையக பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புகளும் கிடைக்கப்பெறும் என்று தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் , இதன்போது முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை பத்திரமொன்றை தயாரித்து, அதனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
- செ.தேன்மொழி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM