ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முஸ்லிம் அரசியல் நிலைகுழைந்துள்ளதனைப் போன்றதொரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும், முக்கிய ஆதரவாளர்களும் தமது கட்சி அரசியலை முன்நோக்கிச் செல்வதில் பாரிய சவால்களை எதிர் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்குவாதிகளின் நெருக்கடிகள் மீண்டும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் அரசியல் தலைமைகளை அரசியலில் இருந்து இல்லாமல் செய்யும் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆதலால், பல குறைபாடுகளைக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியலை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக் ஷவை புதிய பிரதமராக அறிவித்தார். மைத்திரிபால சிறிசேனவின் இந்த அறிவிப்பு நாட்டில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பநிலை 52 நாட்களாக நீடித்தது.
மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் தமக்கு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்குமென்று எதிர்பார்த்தனர். அவர்கள் ரவூப் ஹக்கீம் ஆதரவு தராது போனாலும், ரிஷாத் பதியுதீன் ஆதரவு தருவார் என்று நம்பினார்கள். ஆனால், இரு கட்சிகளும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தன.
இக்கட்சித் தலைவர்களின் இந்த முடிவுதான் அவர்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. அதற்குரிய திட்டங்களும் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் உச்ச ஆதரவுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்ற போதிலும், அவர் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பது சர்வதேச நாடுகளில் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் அமைச்சர்களாக நியமனம் செய்யாமை கூட விமர்சிக்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாம் ஆட்சி அமைப்போம் என்று பொதுஜன பெரமுன நம்பிக்கை கொண்டிருந்தாலும், அந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டுமென்பதில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஆனால், இதனைச் செய்வது இலகுவான காரியமாக இருந்தாலும், பொதுஜன பெரமுன கடினமாக்கியுள்ளது. எக்காரணம் கொண்டும் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர்களை இணைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ள பொதுஜன பெரமுனவினர், முஸ்லிம் கட்சிகளின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்து, கட்சிகளின் தலைமைகளை தனிமைப்படுத்துவதற்கு திட்டங்கள் வகுத்துள்ளார்கள். இந்தத் திட்டத்திற்கு மேற்படி இரு கட்சிகளின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் துணை போகக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம்.ஹரிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர்கள் எந்த வேளையிலும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளலாமென்று தெரிவிக்கப்படுகின்றன.
ஹரிஸ் ஜனாதிபதித் தேர்தலில் கூட கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஸை பொறுத்தவரை கல்முனை பிரதேச செயலகத்தின் எல்லைகள் குறித்தான சர்ச்சையில் கவனமாக இருக்கின்றார். தாம் ஆளும் தரப்பாக இல்லாது போனால் கல்முனை முஸ்லிம்களிடம் இருந்து பறிபோய்விடுமென்று கருதுகின்றார். கல்முனையை பாதுகாத்துக் கொள்வதற்கு பொதுஜன பெரமுனவுடன் இணைவதே ஒரே வழி என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்.
இதேவேளை, கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனோதானோ என்று செயற்பட்டார் என்றதொரு கருத்தையும் ஹரிஸ் தமது ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார். கல்முனை விவகாரத்தைப் பொறுத்தவரை ஹரிஸ் தனித்துவிடப்பட்டுள்ளார் என்பது உண்மையாகும். முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை விவகாரத்தில் ஹரிஸுடன் இணைந்து கொண்டால், தங்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்ற கூட்டல், கழித்தல் சமன்பாட்டையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், அரசியல் குழப்பம் ஏற்பட்ட 52 நாள் கால கட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷவோடு இணைந்து கொள்வதற்காக இணக்கம் தெரிவித்தவர் என்று பரவலான கருத்து உள்ளது. அந்த நாட்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் இஸ்மாயிலை சல்லடை போட்டு தேடிய கதைகளும் இருக்கின்றன. என்ற போதிலும், மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும், இஸ்மாயிலுக்கும் இடையே இன்று வரைக்கும் இறுக்கமான உறவு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இஸ்மாயில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்றுதான் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இவருடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவும் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுமா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்த கதைகளும் இருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மூன்று வேட்பாளர்களை போட்டியிட செய்து வந்துள்ளது. அதே போன்று இம்முறையும் செய்யுமா என்று பேசப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எம்.ஐ.மன்சூர், பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், ஏ.எல்.நசீர் ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளார்கள். இவர்கள் நான்கு பேரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். பொத்துவில் தொகுதியில் பைசால் காசிம், நசீர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளதால், இவர்களில் ஒருவரையே போட்டியிடச் செய்ய வேண்டியதொரு நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. இவர்களில் ஒருவரை தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கும் யோசனையும் இருக்கின்றது. ஆயினும், அட்டாளைச்சேனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நசீர் ஒருபோதும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்பதனை நம்பும் நிலையிலில்லை. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையில் தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி தமது செல்வாக்கை பாராளுமன்ற உறுப்பினர் நசீர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு நிரூபித்துள்ளார். இதனால், மூன்று முறை கட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட பைசால் காசிம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் உள்ளது. நசீர் மற்றும் பைசால் காசிம் ஆகியோர்கள் பொத்துவில் தொகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நிலைமைகள் உள்ள போதிலும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை இழந்து விடக் கூடாதென்பதில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கவனம் செலுத்தியுள்ளார். அடிக்கடி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கொண்டிருக்கின்றார். இதனால், அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் முடிவினை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் எம்.எஸ்.அமீர்அலி போட்டியிடுவார். முஸ்லிம் காங்கிரஸில் அலிசாஹிர் மௌலானா போட்டியிடுவார் என்று தெரிகின்றது. ஆயினும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் தானும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடம் கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நசீர் அஹமட்டிற்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்காது போனால், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத் தேர்தலை எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பதில் பலத்த கேள்விகள் உள்ளன. ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத் தேர்தலை பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அதிக விருப்பம் கொண்டுள்ள போதிலும், பொதுஜன பெரமுன அவரை இணைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டிலில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஏப்ரல் 21 தாக்குதலும், அதனோடு ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன் ஆகியோர்களின் பெயர்களையும் அரசியல் தேவைக்காக ஒரு சில அரசியல்வாதிகள் மேற்கொண்டார்கள். அதனால், ஹிஸ்புல்லாஹ்வை பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்ளும் போது, தமது பிரசாரத்திற்கு தடையாக அமையலாமென்று அக்கட்சி கருதுகின்றது. அதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்தான் இணைந்து போட்டியிட வேண்டும். என்றாலும், இது கூட ஹிஸ்புல்லாஹ்வுக்கு சாத்தியமாகுமோ என்பதில் ஐயமுள்ளது. ஆதலால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் வரலாற்றில் புதியதொரு அனுபவமாகவே இருக்கும் என்று கருதுகின்றோம்.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் மூன்று பேரும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவார்கள்.
சரணாகதி அரசியல்
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை ஓரங்கட்டி, அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்து கொள்ளும் நிலைப்பாட்டின் மூலமாக முஸ்லிம்களின் அரசியலை சரணாகதிக்கு கொண்டு வருவதற்கு எண்ணுகின்றார்கள். ஏற்கனவே, முஸ்லிம் கட்சிகள் சரணாகதி அரசியலை செய்து கொண்டிருந்தாலும், ஆட்சியின் பங்காளிகள் என்றதொரு நாமம் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த நாமத்தை இல்லாமல் செய்து, முஸ்லிம்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்சிகளையும் அழித்துவிடும் சதி வெற்றியாக முடியுமென்றால் முஸ்லிம்களின் அரசியல் மிகமோசமான சரணாகதியை அடைவது என்பது கடினமான காரியமாக இருக்காது. இந்நிலையில் இருந்து முஸ்லிம் கட்சிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியோடு இணைந்திருக்க வேண்டும். தான் போட்டியிட வேண்டும் எனக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தர வேண்டுமென்ற கோரிக்கைகளை கைவிட்டு பொது நோக்கத்தின் அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
மேலும், முஸ்லிம் அரசியலை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களாக ஒரே முகத்தையே பாராளுமன்ற உறுப்பினர்களாக்கிக் கொண்டிருப்பதில் வாக்காளர்கள் அலுத்துப் போய் உள்ளார்கள். இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகம் சார்ந்த விவகாரங்களில் அக்கறை கொள்ளாது, மண்கோட்டாவுக்கும், வேறு சுயநலன்களுக்காகவுமே செயற்பட்டார்கள். ஆதலால், புதிய முகங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று கட்சிகளின் ஆதரவாளர்கள் தலைமைகளிடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் புதிய முகங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வரவேற்கக் கூடிய இந்த முடிவினை முஸ்லிம் கட்சிகளும் எடுக்க வேண்டும். புதிய முகங்களை தேர்தலில் அறிமுகம் செய்யும் போதே கட்சியின் ஆதரவாளர்கள் உற்சாகமடைவார்கள். அதுமட்டுமன்றி, முஸ்லிம் கட்சிகளின் அரைகுறை சரணாகதி அரசியலை இல்லாமல் செய்து, சமூகத்திற்காக அரசியலை மேற்கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளுடன் இணக்கம் காணப்பட்டதனைப் போன்று இம்முறை காண முடியாது. முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டுமாயின் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்புரிமை பெற்றே போட்டியிட வேண்டும். சிறுகட்சிகளுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது கூட தரப்படமாட்டாதென்று தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நிலைப்பாடு உண்மையாயின் முஸ்லிம் கட்சிகள் தனித்தே போட்டியிட வேண்டிய நிலையும் ஏற்படலாம். ஆனால், முழு நாட்டிலும் முஸ்லிம் கட்சிகளினால் தனித்து போட்டியிட முடியுமா என்பதுதான் மிகப் பெரிய சிக்கலாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நிலைப்பாட்டினால் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடியுமா என்று சிந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதனை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் ஒரு குடையின் கீழ் இணைவது என்பது இனிக்கும் செய்தியாக இருந்தாலும், தென்னிலங்கையில் இந்த ஒற்றுமையை காட்டி, இனவாத அரசியலை முன்னெடுக்கும் சக்திகளின் இனவாத அரசியலை இலகுவாகக் கொண்டு செல்ல முடியும். முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டுள்ளன. அதனால், சிங்கள வாக்காளர்கள் ஒரு கட்சியின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வார்கள். இத்தகையதொரு பிரசாரம் சிறுபான்மையினருக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மேலும், இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் இணையும் போது, குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றுக் கொள்ள முடியும்.
இனவாதக் கருத்துக்கள்
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அமைதியடைந்திருந்த பௌத்த கடும்போக்குவாதிகள் மீளவும் தமது இனவாதப் பாட்டை பாடிக் கொண்டிருக்கின்றார்கள். வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று அத்துரலியே ரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் தெரிவித்துள்ளார்கள். அரசாங்கம் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை விசாரிப்பதற்கு புதிய குழுவொன்றினை நியமித்துள்ளது. அத்தோடு, முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்றும் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த முஸ்லிம் விரோத பிரசாரம் பாராளுமன்றத் தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்படும் வரை தொடரும் என்றே எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
இனவாதக் கருத்துக்களின் மூலமாக வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியுமென்றதொரு சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் மூவின அரசியல் தலைவர்களும் இனவாதக் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மைக் கட்சியினர் பெரும்பான்மையின அரசியல்வாதிகளினால் சமூகத்திற்கு ஆபத்து என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்ற உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையினக் கட்சியினர் சிறுபான்மையினரால் பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தல் உள்ளதென்று, பெரும்பான்மையினத்தவர்களின் ஆதரவுடன் சிறுபான்மையினருக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக தங்களை நாட்டுப்பற்றாளர்கள் என்றும், பௌத்த மதத்தின் காவலர்கள் என்றும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த தர்மத்திற்கு மாற்றமாக செயற்படும் யாரையும் பௌத்த மதத்தின் காவலர்கள் என்று அழைக்க முடியாது. மேலும், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிக்காதவர்களை ஒரு போதும் நாட்டுப்பற்றாளர் என்று அடையாளப்படுத்த முடியாது.
அரசியல் இலாபத்திற்காக குறுக்கு வழிகளை கையாள்கின்றவர்கள் திருந்தாத வரை இலங்கையில் இன ஐக்கியம் என்ற ஒன்று ஏற்படாது. இனவாதிகள் மலிந்ததொரு தேசத்தில் குழப்பங்களும், அமைதியின்மையுமே கோலாட்சி செய்யும். 30 வருட யுத்தத்தில் காணப்பட்ட இனவாதக் கருத்துக்களை விடவும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மிக மோசமான வகையில் இனவாதக் கருத்துக்கள் மலிந்துள்ளதையும், அதற்கு பெரும்பான்மையினர் துணையாக இருப்பதும் இலங்கையின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.
- சஹாப்தீன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM