சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கில் மியன்மாரை பாதுகாக்க தானே நேரடியாக நெதர்லாந்தின் ஹேக் நகருக்கு செல்வதற்கு ஆங் சான் சூ கீ எடுத்த தீர்மானம் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் வீராங்களை என்றும் ஒரு முன்னிலை ஜனநாயகப் போராளி என்றும் ஒரு காலத்தில் போற்றப்பட்ட அரசியல் தலைவியிடம் எஞ்சியிருந்திருக்கக்கூடிய சொற்ப தார்மீக நம்பகத்தன்மையையும் எடுத்துச்சென்றுவிட்டது. இது விடயத்தில் ஆபத்துக்குள்ளாகியிருப்பது ஒரு பெண்மணியின் மதிப்பை விடவும் பெறுமதியான விழுமியமாகும்.
இனப்படுகொலை உட்பட குடிமக்களுக்கு எதிராக படுபாதகமான குற்றச்செயல்களைச் செயதமைக்காக நீதியி்ன் முன்னால் நிறுத்தப்படவேண்டியவர்கள் என்று கடந்த வருடம் ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர்கள் கூறிய 6 இராணுவ தலைவர்களைப் ( பிரதம தளபதி உட்பட) பற்றியதுமல்ல இந்த விவகாரம் ; 2016 பிற்பகுதியில் இருந்து மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து பங்களாதேஷுக்கு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்ட 7 இலட்சத்துக்கும் அதிகமான றொஹிங்கியா முஸ்லிம்களையும் மியன்மார் இராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளில் பலியாகியிருக்கக்கூடும் என்று ஐ.நா.விசாரணையாளர்களினால் நம்பப்படுகின்ற 10 ஆயிரம் பேரையும் இன ஒதுக்கல் நிலைமைகளின் கீழ் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் 6 இலட்சம் பேரையும் பற்றியதேயாகும்.
57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவுடன இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் ' காம்பியாவுக்கான வழக்கறிஞர்கள் ' அமைப்பு விபரங்களை சமர்ப்பித்திருக்கிறது ; பெரும் எண்ணிக்கையானோர் சுட்டுக்கொலை, தொண்டையை நறுக்கி கொலை செய்தல், குழந்தைகளைக் கொலை செய்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் கிராமங்களுக்கு தீவைத்து அழித்தல் -- என்று திட்டமிட்டவகையில் கொடுமைகள் றொஹிங்கியாக்களை முழுமையாக அல்லது பகுதிபகுதியாக ஒழித்துக்கட்டும் நோக்குடன் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு இனக்குழுமத்தவர்கள் என்ற வகையில் ரொஹிங்கியாக்களை இல்லாமல் செய்வதே இலக்காகும். இந்த குற்றச்செயல்கள் சகலதும் நனகு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களினால் அளவுக்கு ஒவ்வாதமுறையில் படைபலம் பயன்படுத்தப்பட்டிரும்கிறது என்பதை நிராகரிப்பதற்கில்லை என்றும் போராளிகளையும் குடிமக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் படையினர் கவனம் செலுத்தவில்லை என்றும் நோபல் சமாதானப் பரிசாளரான ஆங் சான் சூ கீ கூட ஒத்துக்கொண்டிருக்கிறார்.ஆனால், இதுவெல்லாம் இனப்படுகொலைக்கு ஒப்பானதல்ல என்று அவர் வாதிடுகிறார். றொஹிங்கியா என்ற பதத்தையும் அவர் ஒரு தடவைகூட பயன்படுத்தவில்லை.
மியன்மாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரைகுறையானவை என்றும் தவறான நோக்கத்துடனானவை என்றும் அவர் நிராகரித்திருக்கிறார். ( பாதுகாப்பு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து பைடையினர் தாக்குதலை நடத்தாமல் பல தசாப்தங்களாக பாரபட்சத்தை அனுபவித்துவரும் மக்களே திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை சகல சான்றுகளும் நிரூபிக்கின்றன ) இன் டின் என்ற கிராமத்தில் 10 முஸ்லிம்களை கொலைசெய்தமைக்காக படையினர் சிறையிலடைக்கப்பட்ட போதிலும் ஒரு வருடம் கடந்துவிடுவதற்கு முன்னதாகவே அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.அதேவேளை, அந்த கொலைகளை அம்பலத்துக்கு கொண்டுவந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் 500 நாட்களுக்கும் அதிகமான காலம் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டியிருந்தது. நிலைவரம் இவ்வாறிருக்குமபோது அரசாங்கம் படையினரை பொறுப்புக்கூற வைத்ததாக ஆங் சான் சூ கீ கூறுகிறார்.
இராணுவமே இன்னமும் நிருவாகத்தை அதன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்ற ஒரு நாட்டில் சிவிலியன் அரசாங்கத்தின் தலைவியாக ஆங் சான் சூ கீ தயக்கத்துடனேயே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று எவரிடமாவது கொஞ்சநஞ்ச நம்பிக்கையேனும் இருந்தது என்றால் அந்த நம்பிக்கையையும் பொய்ப்பித்துவிட்டது சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாரை நியாயப்படுத்தி வாதிட நேரடியாக தானே பிரசன்னமாவதற்கு அவர் எடுத்த தீர்மானம். அந்த தீர்மானத்தை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட பேரணிகள் 2020 தேர்தல்களுக்கு முன்னதாக தனது செல்வாக்கை மேம்படுத்தும் நோக்குடனேயே அவர் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றார் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. ஹேக் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் இந்த அதியுயர் நீதிமன்றத்தின் முன்பாக தனது நாட்டை நியாயப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை, கொடுமையில் இருந்து தப்பியோட முயற்சித்தமைக்காக 23 சிறுவர்கள் உட்பட பல றொஹிங்கியா முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் நறுத்தப்பட்டிருந்தார்கள்.
இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு அட்டூழியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கும் இனப்படுகொலை நோக்கம் இருந்திருக்கிறது என்றும் சான்றுகளை முன்வைக்கவேண்டும் ; அதற்கான எல்லை மட்டம் மிக உயர்வானதாக காணப்படுகிறது. றொஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்காக இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட சர்வதேச நீதிமன்றம் இணங்கினாலும் கூட , அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் எத்தகையதாக இருக்கும் என்பது தெளிவில்லை. அந்தநீதிமன்றம் 1993 ஆம் ஆண்டில் பால்கன் நெருக்கடியில் அத்தகைய இடைக்கால ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டது ; இரு வருடங்களுக்குப் பிறகு செறபெறனிக்காவில் 8000 ஆண்களும் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
மியன்மாரின் இராணுவ தலைவர்கள் சர்வதேச கண்டனங்களுக்கு பழக்கப்பட்டவர்களாகிவிட்டனர். ஆனால், தங்களது செயல்களுக்காக என்றாவது ஒரு நாள் விளைவுகளைச் சந்திக்கவேண்டிவரும் என்று அவர்களுக்கு நினைவூட்டுவது மிகவும் மோசமான துஷ்பிரயோகங்கள் இடம்பெறாதிருப்பதை முனகூட்டியே தடுப்பதற்கு வாய்ப்பாக அமையக்கூடும் ; மியன்மார் நெருக்கடியை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதற்கான நெருக்குதலை அதிகரிக்கவும் அது உதவலாம்.மியன்மாரைப் பாதுகாப்பதற்காக சீனா பெருமளவுக்கு கண்டனத்தை எதிர்நோக்கவில்லை. றொஹிங்கியாக்களுக்கு சில வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் மாத்திரமல்ல, ( சர்வதேச நீதிமன்றத்துக்கு நினைவுபடுத்தப்பட்டதைப் போன்று ) மியன்மார் மாத்திரமல்ல பொதுவில் மனிதநேயமே விசாரணைக்குள்ளாகியிருக்கிறது என்பதனாலும் இந்த விவகாரம் பாதுகாப்பு சபைக்கு கொண்டுவரப்படவேண்டும்.
(லண்டன் கார்டியன் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM