நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு தனது ஆட்சிக்காலத்தின் போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ எந்தவொரு நியாயமானவிமர்சனத்திற்கும் இடமளிக்கப்படும். நாட்டுக்கும் நாட்டின் நற்பெயருக்கும் ஏற்றவகையில் ஊடகப்பணியில் ஈடுபட்டு ஊடகங்களின் மூலம் நாட்டுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடகவியலாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்துள்ள ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், மற்றும் பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்றதையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கமும் பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் ஊடக சுதந்திரத்தின் அவசியம் குறித்து உணர்ந்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படமாட்டாது என்று உறுதி அளித்துள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகவே அமைந்துள்ளது.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்ற பின்னர் சில ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரிக்கப்பட்டிருந்தனர். சில இணையதள ஊடக நிறுவனங்கள் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தன. முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சார்பாக செயற்பட்டதாக கூறி பெண் ஊடகவியலாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் ஊடக சுதந்திரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஊடகங்களுக்கு எத்தகைய அழுத்தங்களும் பிரயோகிக்கப்படமாட்டாது என்று தெரிவித்திருக்கின்றார். அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவுசெய்துள்ளனர். அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் வினைத்திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன அவற்றில் முக்கியமானவையாகும். இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு எனக்கு குறைவின்றி கிடைக்கும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலீடு மற்றும் பொருளாதார தொடர்புகளை சர்வதேச ரீதியாக கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதிமையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும் எனவே நாட்டின் பிரதிமையை கட்டியெழுப்புவதிலும் ஊடகங்களுக்கு விரிவானதொரு பொறுப்பு உள்ளதென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கடந்த சில நாட்களாக பேசப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியொருவருடன் சம்பந்தப்பட்ட விடயத்தில் நாட்டின் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளியிட்டிருக்கின்றார்.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலான நிலைமை மேலோங்கியிருந்தது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க வெற்றிபெற்றிருந்தார். சமாதான தேவதையாக காட்சி தந்த ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிகாலத்தில் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சு நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்ததையடுத்து பெரும் யுத்தம் மீண்டும் ஆரம்பமானது.
இந்த காலப்பகுதியில் ஊடக சுதந்திரம் என்பது பாதிக்கப்பட்டது. ஊடக தணிக்கையும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. யுத்தம் தொடர்பாக செய்திகளை உடனடியாக வெளியிட முடியாது. ஊடகத் தணிக்கை அதிகாரியிடம் செய்திகளை அனுப்பி தணிக்கையின் பின்னரே அவற்றை வெளியிடக்கூடிய நிலைமை அன்று காணப்பட்டது. அத்துடன் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் கலாசாரமும் உருவாக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நிமலராஜன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஊடக நிறுவனங்கள் மீதான அச்சுறுத்தல்களும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் அரங்கேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக வெற்றிபெற்றதையடுத்து பாதுகாப்பு செயலாளராக தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பதவியேற்றிருந்தார். இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்க காலத்திலும் ஊடக சுதந்திரம் என்பது பாதிக்கப்பட்டிருந்தது. ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இரு ஊழியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோன்று சிரச தொலைக்காட்சி அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இறுதி யுத்தகாலப்பகுதியில் இத்தகைய சம்பவங்கள் கூடுதலாக அரங்கேற்றப்பட்டன.
இறுதி யுத்தகாலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் விதிக்கப்பட்டதையப்போன்று ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்படவில்லை. ஆனால் ஊடக நிறுவனங்கள் தமக்குள் சுய தணிக்கை செய்யும் நிலைமை உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஊடக சுதந்திரத்திற்கு தொடர்ச்சியாகவே அச்சுறுத்தல் விடுக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றது. இதனையடுத்து ஊடக சுதந்திரம் என்பது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டது. அரசாங்கமானது 19ஆவது திருத்த சட்டத்தினை கொண்டு வந்ததன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகளினால் ஊடக சுதந்திரம் ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து கருத்துக்களை தெரிவிக்கும் அளவு ஊடக சுதந்திரம் அந்த ஆட்சிகாலத்தில் நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஊடகத் தரப்பினரை விமர்சித்து வந்தபோதிலும் அதனையும் கண்டிக்கக்கூடிய சுதந்திரம் நாட்டில் நிலவியது.
இவ்வாறு ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட ஊடக சுதந்திரமானது புதிய ஆட்சியிலும் நிலைநாட்டப்படவேண்டும் என்பதே மக்களினதும் ஊடகத்துறையினரதும் சர்வதேசத்தினதும் நிலைப்பாடாக உள்ளது.
இதற்கு கட்டியம் கூறும் வகையிலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஊடக சுதந்திரம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் அமைந்துள்ளன ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் நாட்டில் ஊடக சுதந்திரம் அமுலில் இருக்கும் என்பதற்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
ஒருநாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக அதனை தவறாகப் பயன்படுத்துவதற்கு ஊடகங்கள் முனையக்கூடாது. இவ்வாறு தவறாக பயன்படுத்தும் நிலைமை உருவாகும் போதுதான் அதற்கு எதிராக அரசாங்கமானது நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைமை உருவாகின்றது. கடந்த காலங்களில் நாட்டில் யுத்தம் இடம்பெற்று வந்தமையினால் ஊடக சுதந்திரத்தில் தலையிடும் நிலைமை அன்றைய அரசாங்கங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அத்தகைய தலையீடும் தவறானதேயாகும்.
தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இனிமேல் ஊடக சுதந்திரத்தில் தலையிட வேண்டிய அவசியம் எந்த அரசாங்கத்திற்கும் ஏற்படமாட்டாது. ஊடகங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்தி மக்களினதும் நாட்டினதும் நலனுக்காக செயற்படவேண்டியது இன்றியமையாததாகும்.
தற்போதைய சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விடயத்திலும் பல ஊடகங்கள் தவறான வழியில் செயற்படுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே இத்தகைய வெறுக்கத் தக்க செயற்பாடுகளை ஊடகங்கள் கைவிடவேண்டும். தற்போதைய நிலையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
இன்றைய வீரகேசரியின் ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM