(பாகிஸ்தான் ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)
இலங்கை அணி இங்கு வருகை தருவதில் முக்கிய பங்காற்றிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்ற வலுவான செய்தியை இலங்கை அணியினர் முழு உலகுக்கும் உணர்த்தியுள்ளனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் ஐ.சி.சி.யின் முன்னாள் தலைவருமான ஏஷான் மானி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்கள் நடைபெறுவதை முழு உலகும் விரும்புகின்றபோதிலும் அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிண்டி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஏஷான் மானி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
'இலங்கை அணியினர் இங்கு வருகை தந்தமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றோம். இலங்கை அணியினர் மீது 2009 இல் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எமது நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் வாசனையை பத்து வருடங்களாக இழந்திருந்தோம்.
மீண்டும் இலங்கை அணி இங்கு வருகை தந்து டெஸ்ட் கிரிக்கெட் மலர்வதற்கு வழிவகுத்தமைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினர், குறிப்பாக நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை வீரர்கள் ஆகியோருக்கும் இலங்கை அரசுக்கும பெரிதும் கடைமைப்பட்டுள்ளோம்.
இலங்கை அணியினரின் வருகையின் மூலம் இங்கு சர்வதேச வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்கின்றது என்பது முழு கிரிக்கெட் உலகுக்கும் உணர்த்தப்பட்டுள்ளது. எனவே ஏனைய நாடுகளும் இலங்கையைப் பின்பற்றி எவ்வித அச்சமுமின்றி இங்கு வருகை தரவேண்டும்.
'சர்வதேச போட்டிகளை இனிமேலும் நடுநிலையான மைதானங்களில் நடத்துவது குறித்து பாகிஸ்தான் சிந்திக்கப்போவதில்லை. இலங்கையைப் போன்று மற்றைய நாடுகள் ஏன் இங்கு விளையாட வருகைதர முடியாது? பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு என்ற வலுவான செய்தியை இலங்கை அணி கொடுத்துள்ளது என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகின்றோம். இருதரப்பு தொடர்களை நாங்கள் இங்குதான் விளையாடுவோம். பாகிஸ்தானுடன் விளையாடவேண்டுமானால் இங்கு வருகைதந்தே ஆகவேண்டும்' என்றார்.
எம்.சி.சி. தனது அணி ஒன்றை அடுத்த வருடம் இங்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளது. அவ்வணிக்கு தானே தலைவராக விளையாடப் போவதாக குமார் சங்கக்கார தெரிவித்தார். அவர்களுக்கு இத்தயை பாதுகாப்பு அவசியப்படாது எனக் கருதுவதாகவும் ஏஷான் மானி கூறினார்.
இந்தியாவுடன் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளீகளா எனக் கேட்டபோது,
இந்திய கிரிக்கெட் சபையுடன் நாங்கள் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இரண்டு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சுமுகமாகவே இருந்துவருகின்றது. துரதிர்ஷ்டவசமாக அரசியல் உறவுகளில்தான் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்திய அரசுதான் அடிக்கடி தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் நடைபெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.
கிரிக்கெட்டும் அரசியலும் கலக்கக்கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியிடுவதை முழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் உள்ளது. நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கே அதிகம் கேள்வி நிலவியது. டிக்கெட் விற்பனைகளும் அதிகளவில் இருந்தது. தொலைக்காட்சிகளிலும் இந்தப் போட்டியே அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியிடுவதை பொதுமக்களும் இரசிகர்களும் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள்தான் விரும்பாமல் உள்ளனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஏஷான் மானி குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM