திருமலை நவம்
“பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக எதுவுமே செய்ய முடியாது என்று நான் நம்புகின்றேன். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஏதாவது வாக்குறுதி வழங்கும் யாராயினும் பொய்யானவர்கள்” என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்திய விஜயத்தின்போது தனது பயண முடிவில் அடித்துக் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதியின் இக்கூற்றானது ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களின் நீண்டகாலப் போராட்டங்கள், அபிலாஷைகள் மற்றும் கோரிக்கை களை நிராகரிக்கும் அறிவிப்பென ஏன் கருதக் கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து சில நாட்களுக்குள் இந்தியாவிலிருந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு பறந்து வந்தார். இவரின் கொழும்பு வருகைக்குப் பிறகு இந்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. தமிழர்களுக்கு நீதி மற்றும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென அந்த அறிக்கை தெளிவுபடுத்தியிருந்தது.
இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகிய இருவருக்கிடையிலான டில்லி சந்திப்பின் போது பிரதமர் மோடி இலங்கையில் தமிழ்மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், மதிப்பு ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறைகளை புதிய அரசு முன்னெடுக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்திருந்தார்.
அவர் இன்னுமொரு விடயத்தையும் தெளி வாக கூறியிருந்தார். இலங்கை–இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியல் சாசன திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் மோடி புதுடில்லியில் கோத்தபாய முன்னிலையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தனது பயணத்தின் இறுதியில் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி கோத்தபாய பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக என்னால் எந்த அதிகாரப்பகிர்வையும் செய்ய முடியாது, அத்துடன் 13 ஆவது அரசியல் சாசனத்தை முழுமையாக என்னால் நடைமுறைப்படுத்த முடியாது என வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் கூறிவிட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக, இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் அறியாதிருக்க முடியாது.
இலங்கை ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தின்போது மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை இனப்பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பகிரங்கப்படுத்தியுள்ள இரு விடயங்கள் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று பெரும்பான்மை மக்களின் விருப்புக்கு மாறாக எந்தவொரு தீர்மானத்திற்கும் தன்னால் வரமுடியாது, மற்றொன்று 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்து வருகிறபோதும் அந்த நடையைத் தாண்டி இன்னுமொரு வாசலை திறந்து விட முடியாது என்பதாகும்.
ஜனாதிபதி பெரும்பான்மை சமூகமென்று விளித்துக் கூறிய சமூகம் சிங்கள மக்களையே குறிக்கிறது. சிங்கள மக்கள் தனக்குத் தந்த ஆணையை மீறி மாற்று வழியில் பயணிக்கவும் முடியாது செயற்படவும் இயலாது என்பதே அது. அவரின் இக்கூற்றானது பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டுக்கு ஏற்புடையதாக இருக்க முடியுமா? ஜனநாயக சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கவிருக்கும் தலைவர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா என்பது கடினமானதொரு கேள்வியே.
இலங்கை ஒரு பல்லின சமூகம் வாழும் ஒரு சிறியநாடு. அதிலும் சிங்களப் பெரும்பான்மைக்கு நேரொத்த கலாசாரங்களையும் மொழியையும் பிரதேசங்களையும் கொண்ட சிறுபான்மை சமூகம் வாழும் நாடு. அதிலும் தமிழ் மக்கள் மொழியால் வேறுபட்டவர்கள். முஸ்லிம் மக்கள் மதத்தாலும் கலாசாரத்தாலும் மாறுபட்டவர்கள். மலையக மக்கள் பிரதேசத்தால் வேறுபட்டவர்கள்.
இவர்களுடைய அபிலாஷைகள், கோரிக்கைகள் அரசியல் வழியில் வேறுபட்டாலும் அடிப்படையில் சிறுபான்மையினர். அவர்களை எந்த வகையிலும் நாட்டிலிருந்து அந்நியப் படுத்த முடியாது. இலங்கை அந்நியர் ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாட்டின் சுதந்திரத்தை அனைத்து தரப்பினருமே நேசித்தவர்கள்தான்.நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் தமிழ்மக்கள் தமது சுதந்திரம், சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு என்பவற்றுக்காகவே கட்சிகளை உருவாக்கி இவற்றைப் பெற அகிம்ஷை வழியில் போராட முற்பட்டார்கள். தந்தை செல்வநாயகம் வட–கிழக்கு மக்கள் உட்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். திருகோணமலையில் நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டின் (1951) தமிழ்ப் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் எனவும் அவர்கள் அரசியல் ரீதியாக சுயாதீனம் பெறுவதற்கும் சிங்கள மக்களுடன் சமதன்மையுடன் இணைந்து வாழ்வதற்கும் விருப்பம் உள்ளவர்கள் எனவும் மாநாட்டில் பிரகடனப்படுத்தினார். இப்பிரகடனத்தின் மூலம் தமிழ்மக்கள் இந்நாட்டின் தேசிய இனம் மாத்திரமன்றி சிங்களப் பெரும்பான்மையுடன் சகல சமவுரிமையும் பெற்று வாழும் உரிமை கொண்டவர்கள் எனவும் வெளிப்படுத்திக் காட்டினார்.இதன் அடுத்த பரிணாமமாகவே முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு அதை தார்மீக வழியில் உணரவைத்து பண்டா–செல்வா ஒப்பந்தம் (1957) அதன் மறுகட்டமான டட்லி சேனநாயக்கா அரசாங்க காலத்தில் டட்லி–செல்வா உடன்படிக்கை என்பன ஒப்பந்தங்களாக விரிவுபடுத்தப்பட்டன. இந்த ஒப்பந்த காலங்களில் எல்லாம் பெரும்பான்மை சமூகமான சிங்களச் சமூகத்துக்கு சமமாக தமிழ்மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதை மேற்படி பெரும்பான்மை மக்களின் தலைவர்களான இவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் காரணமாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. துரதிஷ்டவசமாக அவை கிழித்தெறியப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான உரிமை, அதிகாரப்பகிர்வு, தாயகக் கோட்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை மானசீகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது வரலாற்றை மாற்ற முடியாத உண்மை.
1978ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன புதிய அரசியல் யாப்பை உருவாக்கியபோது தமிழ்மக்கள் கலந்து கொள்ளவில்லை. மறுபுறம் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவுமில்லை. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளாத இந்த யாப்பின் பிரதிவாத விளைவுகள் பிற்காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது மக்கள் அறியாத ஒரு விடயமல்ல.
ஆயுதப் போருக்கான விதை நாட்டலில் இந்த யாப்பு எவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது என்பது பலரும் தெரிந்து கொண்ட விடயம். 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள நாட்டின் போர் நிலைமைகள் அமைதிக்கு பங்கம் விளைவித்தது மாத்திரமின்றி சர்வதேச ரீதியாகவும் அவப்பெயரை உருவாக்கிய நிலையில் தான் இலங்கை–இந்திய ஒப்பந்தத்துக்கு இலங்கை அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. தமிழ்மக்களின் நீண்டகால அபிலாஷைகளுக்கு முடிவு காணப்பட வேண்டுமென்ற கட்டாயத்தின் பேரிலேயே இலங்கை–இந்திய ஒப்பந்தத்துக்கு அமைவாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு வேறு மாகாணங்களுக்கு அளிக்கப்படாத சலுகையாக வட–கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு மாகாணசபை கொண்டு வரப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட வேளையில் பெரும்பான்மை சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டது என்பதும் உண்மையே.
தமிழ்மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வின் பொறிமுறையாக அது அமையவில்லையென விமர்சிக்கப்பட்டாலும் தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமென்ற சர்வதேச அபிப்பிராயத்தின் அடிப் படையில் இந்தியா தலைமையில் அது நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது பெரும்பான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமையும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் உலக நாடுகளின் அபிப்பிராயம் என்ற வகையில் சகல நாடுகளும் வரவேற்றிருந்தன.
தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு சிங்கள மக்களின் முழு அனுசரணையுடன் அரசியல் தீர்வொன்றைக் கொண்டு வருவேன் என பகிரங்கமாகவே கூறி சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் (1994) வெற்றி பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் அளித்த வாக்குறுதிக்கு அமைய 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய தீர்வுத் திட்டத்துக்கான பொதியை முன்வைத்தார். சிங்களப் பெரும்பான்மை மக்கள் எவ்வித சலனமுமின்றி மெளனமாக வரவேற்றார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முயற்சியை எந்தவொரு சிங்கள மகனும் கைநீட்டி எதிர்ப்புக் காட்டவில்லை. அத்திட்டத்தை எதிர்க்கட்சியினரான ஐக்கிய தேசியக் கட்சியினரும் பெளத்த குருமாரும் எதிர்த்தமைக்கு அமைய அவற்றில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 1996 அதன் பின் இன்னொரு திருத்தமாக 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது தமிழ் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படப் போகின்றன எனக் காரணம் காட்டி ஐ.தே.கட்சியினர் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். இம்முயற்சி படுதோல்வி கண்டது.
2009 இல் யுத்தத்தை வெற்றி கொண்டு விட்டதாக பெருமைப்பட்டுக்கொண்ட இன்றைய பிரதமரும் அன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றிக்குப் பின் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வு முறையைத்தான் 13க்கு அப்பால் சென்று வழங்குவேன் எனத் தெரிவித்திருந்தார். அதிலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் முழு ஒத்துழைப்புடனும் அரசியல் பகிர்வை செய்து முடிப்பேன் என சத்தியப்படுத்தியதாக செய்திகளும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஒரு காலத்தில் வாக்குறுதி நல்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இன்றைய ஜனாதிபதியை பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இத்தகையதோர் ஆணையை சிங்கள மக்களிடமிருந்து பெறவில்லையென்று மறுதலிப்பது எந்தளவுக்கு நியாயமுறை என்பது புரியவில்லை.தமிழ்த் தலைமைகள் எப்பொழுதுமே சிங்கள மக்களையோ அவர்களது தலைமைகளையோ பகைத்துக் கொண்டு தமிழ்மக்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எந்த தலைமையும் முன்வைத்தது கிடையாது. தந்தை செல்வா அறவழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தமைக்கான காரணமும் அதுவே. சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நீதிபூர்வமாக ஏற்றுக்கொண்டு அதை ஜனநாயக வழியில் வழங்க வேண்டுமென்பதற்காகவே செல்வா அகிம்சை வழிப்போரை அறிமுகம் செய்து வைத்தார். இதை அன்றைய தலைமைகள் உணர்ந்து கொள்ளவில்லை. இன்னும் கூறப்போனால் அன்றைய நிலைமை இன்னும் தொடர்ந்த வண்ணமேதான் காணப்படுகிறது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாகியபோது இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை முன் மொழிந்தவர்கள் சிங்கள தலைமைகளே. புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் வழி தமிழ்மக்களுக்கான அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமாயின் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பொதுஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டு அவர்களின் பெரும்பான்மை ஆதரவுடனேயே அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும். அவ்வாறானதொரு தீர்வு நிலையானதாகவும் பலமுடையதாகவும் இருக்குமென்று கூறியவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு ஒளித்து மறைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக தமிழ் தலைமைகள் காணப்படவில்லையென்பதை தென்னிலங்கை அரசியல் தலைமைகள் புரிந்து கொள்வது அவசியம். இவை இவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கிற நிலையில் தான் இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினரின் விருப்பத்துக்கு மாறாக எதனையும் என்னால் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார். அவ்வாறு இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. உதாரணமாக பொதுஜன பெரமுன வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கூட அதை பறைசாற்றவில்லை. தமிழ் மக்களுக்கு எந்தவொரு அதிகார பூர்வமான தீர்வையும் நாங்கள் வழங்கப்போவதில்லையென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு அதை சிங்கள மக்கள் அங்கீகரித்திருந்தால் ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் எவரும் குறைகாணமுடியாது.
”ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக வெளியிட்ட 13 அம்சக் கோரிக்கைக்காரர்களுடன் நான் பேச்சுவார்த்தை வைக்கப்போவதில்லை. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற கோரிக்கைகள்” என விமர்சித்திருந்த ஜனாதிபதி நியாயமான கோரிக்கையை முன் வைப்பவர்களுடன் நான் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என்ற தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தமை இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் இன்னொரு மறுதலிப்பான செய்தி: “13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதி. ஏலவே அது நடைமுறையில் உள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாத்திரம் வழங்கப்படவில்லை. இதை எங்களால் வழங்கமுடியாது. இருந்தபோதும் அதற்கான மாற்று வழி குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் ”என அவர் கூறியுள்ளமை.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் 13ஆவது திருத்தமென்பது நெருக்கடியும் நிர்ப்பந்தமும் நிலவிய ஒரு சூழ்நிலையில் கொண்டுவரப்பட்ட ஒன்று. இத்திருத்தம் கொண்டு வரப்பட்ட வேளை பல சூழ்நிலைக் காரணிகள் இருந்துள்ளன என்பதும் மறுப்பதிற்கில்லை. சர்வதேச நிர்ப்பந்தமும் பிராந்திய நலனும் முதல் நிலைக்காரணியாக விளங்கியுள்ளன. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு உடன் தீர்வொன்று காண வேண்டிய அவசரம் இருக்கும் ஒற்றையாட்சி முறைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம். எல்லாவற்றுக்கும் அப்பால் 13ஆவது திருத்த வடிவிலான தீர்வை பெரும்பான்மை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளாத இழிநிலை.
திம்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஜே.ஆர். அரசின் நழுவல் போக்கு இந்திய அரசின் நிலைப்பாட்டில் ஒரு தீவிரத்தன்மையை உண்டாக்கியதன் விளைவாக தனது பிராந்திய நலன் சார்ந்த தீர்மானத்துக்கு இந்தியா வர வேண்டிய சூழ்நிலையில் தான் அவசரமான இலங்கை–இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் ஒரு பக்கவிளைவு தான் 13ஆவது அரசியல் திருத்தம். இந்த திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட அதிகாரப் பகிர்வானது, தமிழ் மக்களின் அபிலாஷைகளை குறைந்தபட்சமேனும் பூர்த்தி செய்யவில்லையென காட்டப்பட்ட கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரு திணிப்பு அதிகாரப் பகிர்வாகவே இது கொண்டு வரப்பட்டது. இதற்கு ஒரு மறுபிறப்புண்டு இதை இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற வற்புறுத்தல் காரணமாக மெளனமாக கைகட்டி ஏற்றுக் கொண்ட தரப்பினர் மாகாணசபை முறையை இயக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ ஆயுதப்போர் தரப்பினரில் ஒரு தரப்பினர் இதை முற்றாக நிராகரித்தார்கள். அவர்களின் பயம் காரணமாக மிதவாத கட்சிகளும் அதை ஏற்க மறுத்தனர்.
வட–கிழக்கின் சுதந்திரம், சுயநிர்ணயம், தாயகக்கோட்பாடு அதிகார மயமாக கிடைக்கப் பெற வேண்டுமாயின் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உச்ச அளவில் வழங்கப்பட வேண்டுமென்பதை அன்றைய மாகாண ஆட்சியை கையில் எடுத்தவர்களும் வலியுறுத்தி நின்றபோதும் ஜே.ஆர். ஆட்சி கண்டு கொள்ளவுமில்லை; கணக்கில் எடுக்கவுமில்லை. இருந்த போதிலும் இந்திய ராணுவத்தின் உதவியுடன் மாகாண ஆட்சியாளர்கள் குறிப்பிட்டு கூறுவதாயின் வட–கிழக்கு மாகாண ஆட்சியாளர்கள் (C.V.F) என்ற துணைப்படையை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவை தோல்வியிலேயே முடிந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி அழுத்தமொன்றை பிரயோகித்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. விட்ட குறை தொட்ட குறை என்பது போல் தனது நாடு முன்மொழிந்த திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி கோர வேண்டிய தார்மீகப் பொறுப்பின் அடிப்படை யில் அந்த மெல்லிய அழுத்தம் மறைமுகமாக விடுக்கப்பட்ட போதும் அந்த கூட்டு செய்தியாளர் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மறுதலிக்கவில்லை. இருந்த போதிலும் அந்த விடயம் முழுமையாக சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல என்பதை ஊடகத்துக்கான பேட்டியில் எடுத்துக் கூறியிருக்கின்றார்.
ஜனாதிபதியின் இந்த மறுதலிப்பான கருத்தானது தமிழ்மக்களைப் பொறுத்தவரை பெரும் ஏமாற்றத்தையும் தமிழ்த் தலைமைகளுக்கு சவால் நிலைமையையுமே உருவாக்கி விட்டிருக்கிறது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியிருந்தமையை தமிழ்மக்கள் வரவேற்றிருந்தார்கள். இந்தியாவின் கரிசனை தங்களை நோக்கி பொருத்தமான வேளையில் திரும்பியுள்ளது என்ற காரணமாக அது இருக்கலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வட–கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி அவரின் வெற்றியை உறுதிப்படுத்த முயற் சித்த போதும் போடப்பட்ட கணக்கு தவறுதலாகி விட்ட நிலையில் ஏமாற்றமே முடிவாகியது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பகிரங்கமாகவே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி வேட்பாளருக்கே தாங்கள் வாக்கை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் இந்த முடிவு தீர்க்க தரிசனமற்ற முடிவு என்ற விமர்சனமும் தற்போது முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் எந்த தீர்மானத்துக்கும் வரமுடியாத நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை போன்ற தோர் அவலநிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது என்பது கசப்பான உண்மைதான்.
ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தின் போது தன்னை ஆதரிக்கும்படி தமிழ் மக்களை தான் கோரியிருந்த போதும் அம்முயற்சியில் தன்னால் வெற்றி பெற முடியவில்லை என்ற கருத்தை கூறி வைத்தமை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக தமிழ்த் தரப்பினரை குற்றம் சாட்டும் நிலையாக காணப்பட்ட நிலையில்தான் இந்தியப் பிரதமரின் வேண்டுகோள் தமிழ்த் தரப்பினருக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளதென்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஜனாதிபதியின் செய்தியில் 13ஆவது திருத்தத்தை முழுமையாகத் தன்னால் நடைமுறைப் படுத்த முடியாது போனாலும் அதற்கு மாற்றீடாக மாற்று வழிபற்றி கலந்துரையாட முடியுமென்ற ஒரு மறைமுகமான செய்தியை குறிகாட்டியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் 13ஆவது திருத்தம் தொடர்பான அதிருப்திகள் தமிழ்மக்கள் மத்தியில் கடந்த 32 வருடங் களுக்கு மேலாகவே இருந்து வருகிறது. அத்திருத்தத்தின் பலவீனம், குறைபாடு போதாமை நலிவான அதிகாரப் பகிர்வு முறை பற்றி பல தடவைகள் தமிழ்த் தலைமைகளால் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களின் 70 வருட போராட்டங்களுக்கு அது போதுமான தீர்வாக இருக்க வில்லையென்ற நியாயப்பாடுகள் தமிழ் தலைமைகள் போதியளவு விலாவாரியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கருத்தொன்றின் போது தமிழ்மக்களின் அரசியல் அதிகாரப்பகிர்வு விடயத்தில் 13க்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை மிக யதார்த்தமாக வலியுறுத்தியிருந்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு நீண்ட காலப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பைப் போல் தகித்து கொண்டிருப்பது மாத்திரமல்ல தேசத்தின் எல்லை தாண்டி பேசப்பட்டு வரும் பிரச்சினையென்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் நிலைமை கொண்டது. அது மட்டுமின்றி மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் பேரிழப்புக்களைச் சந்தித்த தமிழ்மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வின் அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இணைந்த வட–கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பது அவர்களது நீண்டகால நிலைப்பாடாகவுள்ளது. ஆனால் தமிழ் மக்களின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் காணப்படுகின்றது என்பது கசப்பான உண்மை. இருந்தபோதிலும் பெரும்பான்மை சமூகமென்ற வாய்ப்பாடோ அல்லது அதிகார ஆணையோ நாட்டின் நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் உதவப் போவதில்லை என்பதை மிக நுண்ணிய முறையில் அவதானித்து ஆராய்ந்து அதற்குரிய பொருத்தமான தீர்வைக் காணவேண்டிய பொறுப்பை பெரும்பான்மை சிங்கள மக்களே தற்போதைய ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்கள். இதனை பயன்படுத்தாது விடின் பெரும்பான்மை, சிறுபான்மை, சிங் கள ராஜ்ஜியம், வட–கிழக்கு அரசு என்ற இழுபறிகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வு காணவே முடியாது என்பதே நிதர்சனம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM