எம்.எம்.எ.ஸமட்
மக்களை ஒன்றிணைப்பது சூழ்நிலைகள்தான். சூழ்நிலைக் காரணிகளே மக்கள் ஒன்றிணைந்து செயற்பட களம் அமைத்துக் கொடுக்கிறது. அந்நிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பிற்பாடு இந்நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே இனமுறுகலும், முரண்பாடுகளும் விரிவடைய ஆரம்பித்தன.
இதன் பின்னணியில் அரசியல்வாதிகளும், பேரினவாதிகளும் தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. இதனால் ஓர் இனத்தின் மீது பிறிதோர் இனம் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டன.
ஒடுக்கப்படும் இனம் தமக்கிடையே நிலவும் பொது அடையாளத்தைக் கொண்டே தம் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக உணர்ந்தன. ஒடுக்குமுறைகளிலிருந்து இனத்தைப் பாதுகாப்பதற்காக அவ்வினம் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்படலாயிற்று. மொழி, மதம், கலாசாரம், பொருளாதாரம், நிறம், பிரதேசம், பாரம்பரியம், இனம், பொதுவான வரலாற்று அனுபவம் என பல்வேறுபட்ட காரணிகளில் ஒன்று அல்லது பல மக்களை தங்களுக்குள் ஒன்றிணைக்கின்ற காரணிகளாக உள்ளன.
இலங்கைவாழ் முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு–கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனக்கட்சித் தலைமைகளினால் புறக்கணிக்கப்பட்டதாலும், காணிப்பறிப்பு, விவசாயத்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தின் விளைவால் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதாரப் பாதிப்புக்கள், பேரினவாதத்துக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்வுகள் போன்ற காரணிகள் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தங்களுக்குள் ஒன்றிணையவும் ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது.
சமூகத்துக்குள் காணப்படும் இதர வேறு பாடுகளைக் கடந்து பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து தமக்கென தனியான அரசியலை முன்னெடுக்கக் கூடிய இயக்கத்தின் தேவை இக்கால கட்டத்தில் சமூகத்துக்காக சிந்திக்க கூடியவர்கள் மத்தியில் வெகுவாக உணரப்பட்டது. அந்த உணர்வா னது 1980களின் பிற்பாடு வலுப்பெற்றது. இதனால் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்த முஸ்லிம் அரசியல் எழுச்சியானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தை உருவாக்கியது.
இந்த அரசியல் இயக்கம் உள்ளூராட்சி மன்ற, மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பெரும் தேசியக் கட்சிகளுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற்றது. இக்கதை இக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த அஷ்ரஃபின் யுகக்கதை. அஷ்ரஃப் யுகத்தின் பின்னரான முஸ்லிம் அரசில் கதை வித்தியாசமானது என்பதை விட பிளவுபட்ட அரசியல் பின்னணியைக் கொண்டது. இந்தப்பின்னணியில் பல கட்சிகள் உருவாகி தனித்தனி அரசியல் பயணத்தின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவங்களை தேர்தல்களின் ஊடாகப் பெற்றுக்கொண்டன. இத்தனித்தனி கட்சிப் பயணம் அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற அழைப்புக்கள் 2015 பாராளுமன்ற தேர்தலுக்கு முற்பட்ட காலம் முதல் விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்வழைப்புக்கு இதுவரை விடை காணப்படவில்லை.
இச்சூழலில்தான், முஸ்லிம்களை நோக்கிய நெருக்கடிகள் அதிகரித்தன. இந்த நெருக்கடிகளின் உச்சகட்ட வெளிப்பாடு ஏப்ரல் 21 தாக்குதலுடன் வலுப்பெற்றது. நெருக் கடிகளின் உச்சமானது முஸ்லிம் அமைச்சர்களை ஒன்றிணைந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைத்தது. தற்போது ஒரு முஸ்லிம் அமைச்சரைக் கூட பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நியமிக்கச் செய்யாமலும் செய்திருக்கிறது. பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கான இடம் வழங்கப்படாமைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலினூடாக பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அச்செய்திகளில் ஒன்றுதான் பெரும்பான்மை சமூகமே இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி என்பதே.
இந்நிலையில், பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஏறக்குறைய 69 லட்சம் வாக்குகளை அளித்து அமோக வெற்றிபெறச் செய்தது போன்று அடுத்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பார்களா என்ற கேள்வி தற்போது எழ ஆரம்பித்திருக்கிறது என்பதை விட அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவே உணர முடிகிறது. இச்சூழலில், எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற அமர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2020 பாராளுமன்றத் தேர்தல் புதிய வருடத்தின் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிமித்தம் பாராளு
மன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முன்நகர்வுகளை கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. 2020இல் உருவாக்கப்படும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முஸ்லிம் அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியல் சூழல் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 9ஆவது பாராளுமன்றத்தில் அதிகரித்துக் காணப்பட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தியிருப்பதாகவே உணரப்படுகிறது.
ஒரு சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக் கும் சமூகக் கட்டமைப்புக் கூறாக அரசியல் துறை உள்ளது. இந்த அரசியல் பலமே ஒரு சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் சக்தியாக மாத்திரமின்றி அச்சமூகத்தின் இருப்பையும் பாதுகாக்கக் கூடிய ஆயுதமாக விளங்கும். நகர்ந்து செல்லும் அரசியல் சூழலில் இந்நாட்டின் ஒரு தனித்துவ இனம் என்ற ரீதியில் பாராளுமன்றத்தில்
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அதிகரிப்பு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் நிலைப்பாடு உறுதி செய்வதாகவே அமைகிறது. நாம் எதிர்நோக்கும் பெரும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கும், ஆட்சியாளர்களின் கவனத்தை சிறுபான்மை சமூகத்தின் மீது மேலோங்கச் செய்வதற்குமான ஒரேவழி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கான பாராளுமன்ற ஆசனங்களை அதிகரித்துக் கொள்வது மட்டுமேயாகும் என்ற அவரின் நிலைப்பாடு இங்கு உற்று நோக்க வேண்டியதொன்றாகும்.
இலங்கையின் மக்கள் மன்ற வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்ப்போமானால் 1833ஆம் ஆண்டுகளில் நிறைவேற்று சபை என்றும் 1931ஆம் ஆண்டு இலங்கை ஆட்சி மன்ற சபை என்றும் 1947இல் செனட்சபையாகவும் பின்னர் 1971ஆம் ஆண்டு காலத்தில் தேசிய ஆட்சிமன்ற அசம்பிளி எனவும் அழைக்கப்பட்டு வந்த மக்கள் மன்றமானது 1977ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கமைய பாராளுமன்றமென மாற்றப்பட்டது.
தற்போது ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையின் தியவன்ன ஓயாவின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்றம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டு, 1982ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் திறக்கப்பட்டது. இப்புதிய பாராளுமன்றம் திறக்கப் பட்டு அதன் முதலாவது அமர்வுக்கான பாராளுமன்றத் தேர்தல் 1989ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் 1994, 2000, 2001, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலம் முதல் சுதந்திரத்துக்கு பிற்பட்ட இந்நாள் வரை மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மன்றுக்கு அனுப்புவதற்கான 3 தெரிவு முறைமை நமது நாட்டில் பேணப்பட்டிருக்கிறது. அதில் 1910 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரை இனவாரிப் பிரதிநிதித்துவ முறைமையும், 1931ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டு காலம் வரை பிரதேசவாரி தொகுதி ரீதியான பிரதிநிதித்துவ தெரிவு முறைமையும் 1978ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்காக விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுப் பின்னணியில் 2020இல் நடைபெறவுள்ள 9ஆவது பராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் சாணக்கியத்துடன் பாராளுமன்ற தேர்தலை கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில், 2020 பாராளுமன்றத் தேர்தல் அரசியல் பலத்துக்கான களமாக அமையப் போகிறது.
ஜனநாயகத் தேசமொன்றின் முதுகெலும்பாக விளங்குவது நீதி மன்றம், சட்டவாக்கம் (பாராளுமன்றம்), நிர்வாகத்துறை மற்றும் ஊடகம் ஆகியவையே. இவ்வாறான ஜனநாயகக் கூறுகள் அர்த்தமாக்கப்படும் தேசமொன்றிலிருந்து ஒரு பிரஞையடையும் நன்மைகளில் மிக முக்கியமானது மனித உரிமை. ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக்கொடுக்க முடியாத, மறுக்க இயலாத உரிமைகளாகக் கருதப்படுகின்ற உரிமைகளுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் மனித சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன.
மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை. நுகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவு உரிமை, உடை உரிமை கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாக மனித உரிமை என்பது அடுத்தவர்களை எந்தவொரு வகையிலும் பாதிக்காத வகையில் தனது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்படும் அனுமதியே மனித உரிமையாகும். இந்த அனுமதியை சட்டமாக்கும் இடமே பாராளுமன்றம்.
ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான வாழும் காலத்தில் அவனால் மேற்கொள்ளப்படும் அத்தனை செயற்பாடுகளுக்கும் உரிமை உள்ள போதிலும், அவ்வுரிமைகள் மற்றவர்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பதும் அவசியம். அவை உண்பவையாக இருந்தாலும், குடிப்பவையாக இருந்தாலும், உடுப்பவையாக இருந்தாலும் சரியே.
ஆனால், இலங்கைவாழ் முஸ்லிம்கள் மேற் படி உரிமைகளுடன் வாழ்வியலை முன்கொண்டு செல்வதற்கான இடையூறுகளை அடிக்கடி அனுபவிக்க நேரிடுவதை காண முடிகிறது. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் இந்த இடையூறுகள் இடம்பெற்று வருகின்றன. அரசியல் யாப்பின் பிரகாரம் இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வோர் இனமும் ஏனைய இனங்களின் உரிமைகளை மீறாத வகையில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான தடைகள் இல்லாமலில்லை. இத்தடைகளைக் கையாள்வதற்கு அரசியல் அதிகாரம் அவசிமாகிறது. இந்த அதிகாரத்தை பாராளுமன்றத்தினூடாக அடைய முடியும். அதனால்தான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த ஒன்றிணைதல் என்பது பெரும்பான்மை தேசிய கட்சிகளுக்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்துக்கோ பாதகமான சூழலை ஏற்படுத்துவதாக உணராத வகையில் வடக்கு, கிழக்கிற்கு வெளியே இணக்க அரசியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கும், வடக்கு–கிழக்கில் தனித்து நின்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்குமான சாணக்கியமும் நிதானமுமிக்க வியூகங்களாக அமையப்பெறுவது முஸ்லிம் அரசியல் பயணத்துக்கு ஆரோக்கியமாக அமையும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
அதிக ஆசனங்ளைப் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்நோக்க வேண்டும் என்ற இந்த அழைப்புக்கான பிரதான காரணமாக இருப்பது தனித்துவ இனமான முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் பயணம் சக்திமிக்கதாக முன்நகர்த்திச் செல்லப்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளின் குரல்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஒன்றாக ஒலிக்க வேண்டும் என்பதன் அடிப்படை யில்தான்.
அரசியல், சமூக, பொருளாதார ரீதியிலான அழுத்தங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டு இந்நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும். அவ்வாறான வாழ்வுக்கான உரிமையை அரசியல் அதிகாரங்களினூடாக உரியவர்களிடமிருந்து பெற்றுக்கொடுப்பதை இலக்காகக் கொண்டே முஸ்லிம் சமூகம்சார் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்நாட்டில் இரண்டாம் நிலைச் சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழும் இச்சமூகத்தின் மத்தியிலுள்ள பலருக்கு சமூகம் சார்ந்த விடயங்களில் இறந்த காலம் எதைக் கற்றுத்தந்தது. நிகழ்காலம் எதைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் எதைக் கற்றுத்தரப்போகிறது, என்பது குறித்தான மீள் வாசிப்பு அவசியமாகவுள்ளது.
இந்நிலையில், சமகால இனவாதச் சூழல் தொடர்பில் சிந்திப்பதும் சாணக்கியமாகச் செயற்பட்டு இனவாதத்தின் பரப்புரைகளையும், செயற்பாடுகளையும் வெற்றிகொள்வதும் அவசியமாகவுள்ளது. ஏனெனில், இந்நாடு எல்லோருக்கும் சொந்தமானது, இந்நாட்டின் அரசியலமைப்பானது நாட்டில் வாழும் அனைத்து இனங்களும், சமூகங்களும் தங்களுக்குரிய உரிமைகளோடு வாழ முடியும் என்றே கூறியிருக்கிறது. அதனால், சந்ததி சந்ததியாக இந்நாட்டில் வாழவிருக்கும் முஸ்லிம்கள் பொருளாதாரத்தை மாத்திரமின்றி அத்தனை சமூகக்கூறுகளையும் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் வாழ்வுப் பயணத்தில் தடங்கலாகவுள்ள இனவாதச் சூழலை சாணக்கியத்துடன் வெற்றிகொள்வதாயின் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள், உலமாப் பெருந்தகைகள், புத்திஜீவிகள் என அத்தனை தரப்புக்களும் ஒரே கோட்டில் பயணிப்பது காலத்தின் அவசியம்.
கட்சி அரசியல் மற்றும் பதவிகளுக்காகவும், பிரதேச அதிகாரங்களுக்காகவும், கொள்கை கோட்பாடுகளுக்காகவும் பிரிந்து நின்று முஸ்லிம் சகோதரத்துவம் காட்டிக்கொடுக்கப்படுமாயின், பிளவுகள் தொடருமாயின் எதிர்கால சந்ததியினர் பாரியளவில் விலைகொடுக்க வேண்டி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது, பொருளாதார அழிவுகளை மாத்திரமின்றி பல நெருக்கடிகளை எதிர்கால சந்ததிகள் எதிர்நோக்க வேண்டியும் ஏற்படும்.
ஆதலால், முஸ்லிம்கள் தொடர்பில் பிற சமூகத்தினர் கொண்டுள்ள நம்பிக்கையீனம் கலையப்பட வேண்டும். அதற்காக அத்தனை சாதகமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவது அவசியம். அத்துடன், செயற் பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாற்றுச் சமூகங்களினால் முன்வைக்கப்படும் நியாயமான குற்றச்சாட்டுக்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்., குற்றவாளிகள் புரிகின்ற குற்றங்களுக்கு விளக்கில் விழும் வண்டுகளாக செயற்படாமல், சிந்தித்து நிதானமாகச் செயற்பட்டு சகவாழ்வுக்கான வழிகளைக் கூர்மைப்படுத்தி கடும்போக்குவாதிகள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை இல்லாமல் செய்வதும் அவசியம். அத்துடன், பரம்பரை பரம்பரையாக இந்நாட்டில் வாழப்போகும் எதிர்கால சந்ததியினரின் இருப்பும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. ஆதலால், இவற்றிற்கான முயற்சிகள் சாணக்கியமாக முன்நகர்த்தப்பட்டு சாதிக்கப்பட்டால் மாத்திரமே கடும்போக்குவாதச் சூழலிலிருந்து எதிர்கால சமூகம் நிம்மதி பெறும்.
இந்நிலையில், அனைவரும் ஒற்றுமைப்படுவதன் மூலமாக எதிர்வரும் தேர்தலின் பின்பலமான சக்தியாக உருவெடுக்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்கள் பெற வேண்டும் என்ற நிலைப்பாடுகளை பொதுத் தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். அத்துடன், முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து களமிறங்க வேண்டும் என்ற அழைப்புக்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 30 வீதமானவர்கள் சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களுமாவர். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் அத்துடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் பல்வேறு நீண்ட கால, சமகால மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுடன் அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நாட்டை மாறி, மாறி ஆண்ட அரசாங்கங்கள் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதியளித்தாலும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை. சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான ஆதிக்கம் குறையவில்லை.
இந்நிலையில், தமிழ்ப் பேசும் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் சந்தர்ப்பங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்டிருக்கிறது. தமக்கு வாக்களிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுத் தீர்வைப் பெறவும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் சிறுபான்மை அரசியல் தலைமைகளின் ஐக்கியப்பட்ட அரசியல் நகர்வு இன்றியமையாதது.
இந்த நகர்வுக்கான யோசனையை, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டமொன்றில் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் முன்வைத்திருக்கின்றார். எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலை தமிழ்ப்பேசும் சமூகக் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்நோக்க வேண்டுமென்ற அவரது ஆலோசனை கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் கூடியதான முயற்சிகளை, கடந்த காலங்களில் மு.கா.தலைவர் ஹக்கீம் கடந்த காலங்களில் மேற்கொண்ட நிலையில், சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பாடு குறித்து முன்வைத்திருக்கும் யோசனை வரவேற்கத்தக்கது, நமது அனைத்து நடவடிக் கைகளையும் ஒற்றுமையாக ஓரணியிலிருந்து முன்னெடுப்பது சிறந்தது. அத்தோடு தேசிய ரீதியில் ஒற்றுமையான செயற்பாடுகளே வெற்றியளிக்கும்.
சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின் அவசியம் உணரப்பட வேண்டிய ஒன்றாக நோக்கப்படுகிறது. எதிர்கால சிறுபான்மை சமூகத்தின் இருப்பு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமாயின் இரு சமூகத்துக்கும் பொதுவான விடயங்களில் இரு சமூகத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களும் வேஷம் போடுவதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்பதை மறந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் நலனை நிறைவேற்றுவதற்காக செயற்படும் மனப்பாங்கை ஏற்படுத்தி ஒற்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது.
சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான சரியான நேரம் தற்போது ஏற்பட்டிருப்பதாகவே பலரதும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்புக்காகவும், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்புக்காகவும் விடுக்கப்படுகின்ற அழைப்புக்களுக்கு விடை காணப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில் இந்த அழைப்புக்களை பெரும்பான்மை சமூக அரசியல் கட்சிகளும், மக்களும் எந்தக் கோணத்தில் நோக்கப் போகிறார்கள்? வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ், மற்றும் முஸ்லிம்கள் அவ்வழைப்பை ஏற்று எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளிப்பார்களா? இணக்க அரசியலில் தனித்துவ தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முயற்சிகள் வெற்றியளிக்குமா? இவை போன்ற கேள்விக்கான விடைகளுக்கு காலமே விடையளிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM