அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பாரிய பிரச்சினை போதைப்பொருள் பாவனையாகும். குறிப்பாக, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் போதைப்பொருள் பாவனையில் முன்னிலையில் உள்ளன. மேலைத்தேய நாடுகளில் அனுமதிப்பத்திரம் பெற்று நடத்தப்படும் போதைப்பொருள் வியாபாரம் கீழைத்தேய நாடுகளிலும் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக ஐரோப்பிய நாடுகளிலும் அபிவிருத்தி அடைந்த ஆசிய நாடுகளிலும் போதைப்பொருள் வியாபாரம் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் சந்தைகளை நம்பியே உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் கடத்தல்களை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம். சமீப காலத்தில் இலங்கை போதைப்பொருள் கடத்தலில் ஒரு மத்திய நிலையமாக மாறிவருவதுடன் உள்நாட்டு பாவனைகளிலும் பாரிய வளர்ச்சிப்போக்கைக் கொண்டுள்ளது.
குறுகிய காலத்தில் உள்நாட்டில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை சர்வதேச மட்டத்தில் அதிக விலைக்கு விற்பனையாகும் போதைப்பொருட்களாகும். உள்நாட்டிலும் முகவர்கள் மூலம் இளைஞர்களையும் பாடசாலை மாணவர்களையும் இலக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நாட்டினுள் பல்வேறு சட்டவிரோத வழிமுறைகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன. இவற்றை கடத்துவது, கைமாற்றுவது, விற்பனை செய்வது, கொள்வனவு செய்வதற்கு என ஒரு கறுப்புச்சந்தை, இயக்கப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் பெரும்புள்ளிகளும் போதைப்பொருள் மாபியாக்களும் தான் இச்செயற்பாட்டிற்கு மூளையாகச் செயற்படுகின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது. போதைப்பொருள் விற்பனையானது கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு வலையமைப்பாக இயங்குகின்றது. நாட்டில் சமீப காலமாக இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் பெரும்பாலும் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்டவர்களே. தலைநகரில் பல்வேறு பிரதேசங்களில் இந்த போதைப்பொருள் வியாபாரிகளும் முகவர்களும் இயங்குகின்றனர். வெளிப்பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு தொழிலுக்குச் செல்லும் இளைஞர்கள் சுயமாகவும் வற்புறுத்தலின் மூலமும் இவ்வலைப்பின்னலில் சிக்கிக் கொள்கின்றனர். மலையக இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைநகரில் தொழிலுக்காகச் சென்று தங்கியிருக்கும் மலையக இளைஞர்கள் அங்குள்ள தொடர்புகள் மூலம் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றனர். அவர்கள் மூலம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கும் இந்த போதைப்பொருட்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இன்றளவில் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் தொடர்புகள் மூலம் இளைஞர்கள் இந்த வலைக்குள் சிக்குகின்றனர். மலையகத்தில் பல்வேறு முகவர்கள் மூலம் போதைப்பொருள் விற்பனைகள் இடம்பெறுவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உறுதி செய்துள்ளது. அதேபோல் சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரிலும் மலையக இளைஞர்களும் அடங்குகின்றனர்.
2019ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான 7 மாதக்காலப்பகுதிக்கும் மொத்தமாக 50,480 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது ஆரோக்கியமான செய்தியல்ல.
இத்தரவுகளின்படி 25,231 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கெனபிஸ் என்றவகை போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24,340 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வருட முடிவில் கணக்கெடுப்புச் செய்யும்போது சுமார் ஒரு இலட்சம் பேர் இவ்வாறு போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைதுசெய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
மலையகத்தை பொறுத்தவரையில் தொழில் அற்ற இளைஞர்கள், நகரத்தொழிலாளர்கள், கட்டிட நிர்மாணத்தொழிலாளர்கள் என்போரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை வெளிப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வின் பிரகாரம் கடைநிலைத் தொழிலாளர்களே அதிகமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். குறிப்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 47 சதவீதமானோர் இவ்வாறான தேர்ச்சிபெறாத தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலுக்குப் புறம்பாக மலையக மக்கள் அதிகமாக சேவையாற்றுவது நகரங்களிலேயாகும். நகரங்களில் இன்று கட்டிட நிர்மாணப்பணியாளர்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றது. அதேபோல் நாட்சம்பளம் வழங்கப்படுவதும் பெரும்பாலும் கட்டிட நிர்மாண தொழிலிலே ஆகும். எனவே இடைநிலை வருமானம் பெறும் இளைஞர்கள் நகரங்களிலுள்ள முகவர்கள் மூலம் போதைப்பொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். அன்றாடம் கையில் பணம் கிடைப்பதும் இதற்கு வாய்ப்பாக அமைகின்றது. இவ்வாறானவர்களின் மூலம் தோட்டப்பகுதிகளுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் போதைப்பொருட்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
வயது அடிப்படையில் பார்க்கும்போது 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டோரில் 10 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். அதேவேளை 25 தொடக்கம் 50 வயதுக்கு இடைப்பட்ட அதிகமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். குறிப்பாக போதைப்பொருள் பாவிப்போரில் 80 சதவீதமானோர் 25–-50 வயதுக்குட்பட்டவர்களாவர். பெரும்பான்மைச் சமூகத்துடன் ஒப்பிடும் போது மலையக இளைஞர்கள் குறைவான எண்ணிக்கையானோரே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். எனினும் இது முளையிலேயே களையப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாகும்.
கல்வி மட்டத்தினை ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது பாடசாலை செல்லாதோரும் பாடசாலைக்கல்வியை இடைநடுவில் கைவிட்டோருமே அதிகமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். தரம் 6 தொடக்கம் 10 இற்கு இடைப்பட்ட வகுப்புகளுடன் இடைவிலகியோர் கிட்டத்தட்ட 40 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனையாளர்கள். அதேபோல் போதை பாவனையுடையோரில் 50 சதவீதமானோர் திருமணமாகாதவர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 15 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையை தொடங்கியோர்களாவர்.
இவ்வகையான போதை பாவனையாளர்கள் தினசரி பாவிப்பவர்களாகவும் வாரத்துக்கு ஒரு முறை அல்லது வேறு கால இடைவெளிகளில் பாவிப்பவர்களாகவும் இருக்கின்றனர். மலையக இளைஞர்களை இதிலிருந்து மீட்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. போதைப்பொருள் பாவனையால் பொருளாதார ரீதியாக பலவீனமடைவதும் உடல் ரீதியாக நோய்வாய்ப்படுவதும் இடம்பெறும். போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் நோய்களுக்கான மருத்துவ செலவீனமானது மிகவும் அதிகமாகும். அவ்வாறு நோய்வாய்ப்பட்டால் அதிலிருந்து மீள அதிக காலமெடுப்பதுடன் அவர் சார்ந்த குடும்பமும் சமூகமும் இதனால் மொத்தமாகப் பாதிக்கப்படும்.
முக்கியமாக பாடசாலை மாணவர்களின் நடத்தையை கண்காணிப்பதும் இளைஞர் குழுக்களின் மீது அவதானம் செலுத்துவதும் காலத்தின் தேவையாகவுள்ளது. குறிப்பாக குழுக்களின் மூலமே போதைப்பாவனை அறிமுகம் செய்யப்படுகின்றமையும் புதியவர்கள் அப்பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலைகளை அண்மித்த கடைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சமூகத்தின் இருப்பை அழிப்பதற்கான கூர்மையான ஆயுதங்களில் போதைப்பொருள் முதன்மையானது. அதனைக் கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் சீரழிக்கலாம். மலையகம் இவ்விடயத்தில் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
- அருள்கார்க்கி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM