பிரித்தறிய முடியாத ஒரு அரசியல் சுழிக்குள் முஸ்லிம் சமூகம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. பனிப்புகாரின் ஊடாக பார்ப்பதைப் போல் முஸ்லிம்களின் எதிர்காலம் காட்சியளிக்கின்றது. இது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால், இது காலநியதி. இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது.
‘எம்மிடம் அதிகாரம் இல்லை’ என்று ஒரு பெருந்தேசியக் கட்சியும், ‘எமக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களிக்கவில்லை’ என்ற தோரணையில் ஆளும் கட்சியும் செயற்படுவதாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் சமூகமானது ‘இரண்டும்கெட்டான் நிலையை’ நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக உள்மனது சொல்கின்றது.
ஆண்டாண்டு காலமாக அபிலாஷைகளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாத ஒரு இனக் குழுமமாக, ஒழுங்கான தலைமைத்துவங்கள் இல்லாத குறை, பாதுகாப்பு இல்லாத குறை, ஆயுத அடக்குமுறைகள், இனவாத நெருக்கடிகள் என பல்வேறு கவலைகளுடன் போய்க் கொண்டிருக்கும் முஸ்லிம்கள், ‘இரு தரப்பாலும்’ கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்படுவோமோ என்ற மனத் தாங்கலுக்கு ஆட்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளாலும் முஸ்லிம்கள் உள்ளடங்கலாக சிறுபான்மை மக்களின் சில இலட்சம் வாக்குகளாலும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 4 மாதங்களில் பொதுத் தேர்தலொன்று நடைபெறவுள்ள சூழ்நிலையில், வரவேற்கத்தக்க அதிரடி அறிவிப்புக்களை ஜனாதிபதியும் பிரதமரும் வெளியிட்டு வருகின்றனர். இதனால், இந்த அரசாங்கம் பற்றிய ஒரு நல்ல பார்வை ராஜபக் ஷவுக்கு வாக்களிக்காத மக்களிடமும் உருவாகத் தொடங்கியுள்ளது. ஆனால், இது எதுவரை என்பது தெரியவில்லை.
முஸ்லிம்களுக்கு அழைப்பு
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, சத்தியப்பிரமாணம் செய்ததில் இருந்து சிறுபான்மை சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாட்டில் பரவலாக வெற்றி பெறுவதற்கும், நீண்டகாலம் தமது ஆட்சி நிலைத்திருப்பதற்கும் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவை பெறும் நோக்கில் அவர் அழைப்பு விடுத்தாலும் அல்லது முஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைத்துக் கொண்டு நல்லிணக்கமாக செயற்படும் எண்ணத்தோடு நேசக்கரம் நீட்டினாலும், இது நல்லதொரு சகுனம் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், ஜனாதிபதி கோத்தாபயவை விடவும் அதிகளவான முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும், சஜித்தை போட்டியிட வைத்த ஐ.தே.கட்சியும் தமக்கு வாக்களித்த முஸ்லிம்கள் தொடர்பில் தமக்குள்ள தார்மீக கடமையை நிறைவேற்றாமல் கறிவேப்பிலையாக முஸ்லிம் சமூகத்தை எறிந்துவிட்டு தமது உள்வீட்டுச் சண்டையிலேயே காலத்தைக் கடத்த எத்தனிப்பதாகவே தெரிகின்றது.
மறுபுறத்தில், ‘சஜித்திற்குத்தானே முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் வாக்களித்தார்கள். நமக்கு கொஞ்ச பேர்தானே ஆதரவளித்தார்கள் என்ற மனக்குறை புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கவே செய்யும். ஆனபோதும், இதனை மனதில் வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை இந்த அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு பார்க்கக் கூடாது என்றே முஸ்லிம் சமூகம் அவாவி நிற்கின்றது.
இதற்கிடையில், ஆளுந்தரப்பு எல்லா விடயங்களிலும் முஸ்லிம்களை தமக்கு ‘வாக்களிக்காத சமூகம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க தலைப்படுகின்றதோ என்ற சந்தேகமும், புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் இலேசாக துளிர்விடத் தொடங்கியுள்ளது. அதாவது, ‘முஸ்லிம்கள் தமக்கு பெரும்பான்மையாக வாக்களிக்கவில்லையே’ என்ற மனக்குறை புதிய ஜனாதிபதிக்கு இருப்பதைப் போலவே, ‘இந்த ஆட்சியில் பலமுள்ள பங்காளராக முடியாமல் போய்விட்டதே’ என்ற வருத்தமும், அமைச்சரவையில் ஒரு அமைச்சர் கூட இல்லாத குறையும் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கவே செய்கின்றது.
எனவேதான், சஜித்தை வெற்றிபெறச் செய்ய முடியாமல் போனதாலும், வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக் ஷவிற்கு பெருமளவு வாக்குகளை அளிக்காமல் விட்டதாலும், முஸ்லிம் சமூகம் அரசனும் இல்லை புருசனும் இல்லையென்ற இரண்டும்கெட்டான் நிலைக்கு வந்திருக்கின்றது என்கின்றோம்.
முஸ்லிம்களின் வரலாறு
இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் ஜனநாயகத்தின் வழிநின்றவர்கள் என்பதற்கு வரலாற்றில் நிறையவே சான்றுகள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பாதுகாப்பிலும் அபிவிருத்தியிலும் இன்னபிற விடயங்களிலும் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது. அரசிற்கு எதிராக போராடி தனிநாடு கேட்கவும் இல்லை, சகோதர தமிழ்
மக்களின் நியாயமான உரிமைக் கோரிக்கைகளுக்கு குறுக்கே நின்றதும் இல்லை.
ஆனாலும், கடந்த 40 வருடங்களில் முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்ட உரிமைகள், அபிலாஷைகள், தீர்வு கண்ட பிரச்சினைகளை விட இழந்தவைகள் தான் அதிகம். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள் போன்றவற்றாலும் முஸ்லிம்கள் அவதிப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால் பாதுகாப்பு உணர்வு மேம்பட்டாலும் 2010 இற்கு இனவாத சக்திகளால் நிம்மதி இல்லாத ஒரு சமூகமாக ஆக்கப்பட்டனர்.
தென்னாசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவோ, நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்காகவோ, இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் கூட்டத்தை அடக்கும் நிகழ்ச்சி நிரலிலோ அல்லது ஆட்சி மாற்றத்திற்காகவோ பகடைக்காய்களாக பாவிக்கப்பட்டதும், அதனால் அதிகம் இழப்புக்களைச் சந்தித்ததும் இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள் தான். இவ்வாறு முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணம், திராணியற்ற அரசியல், சமூக, சமயத் தலைமைகளாகும். இதில் யாரும் விதிவிலக்கல்லர்.
இலங்கை முஸ்லிம்கள் தனி ஒரு இராஜ்ஜியம் வேண்டுமென்று எண்ணியவர்களல்லர் என்பதுடன், ஒருபோதும் முஸ்லிம் சமூகம் தனியான ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவும் இல்லை. இதே கோஷத்துடன் போட்டியிட்ட நபர்களுக்கு ஐம்பதாயிரம் வாக்குகளைக் கூட வழங்கவில்லை.
எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும் யாராவது ஒரு சிங்கள பௌத்தருக்கு அல்லது சிங்கள கிறிஸ்தவருக்கே வாக்களித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த நாட்டின் ஆட்சியாளர்களை சிம்மாசனம் ஏற்றியதில் முஸ்லிம்களுக்கு பெரும் பங்கிருக்கின்றது என்பதையும் இதன் காரணமாகவே எல்லா அரசாங்கங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரமிக்க (அமைச்சு) பதவிகள் வழங்கப்பட்டன என்பதையும் யாரும் மறுக்கவியலாது.
கடந்தகால பங்களிப்பு
1990ஆம் ஆண்டில் ஆர். பிரேமதாஸவின் ஆட்சியை மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் தலைமையில் உறுதிபடுத்திய முஸ்லிம் சமூகமே 1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா அம்மையாரின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியது. இம்முறை கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி சஜித்துக்கு ஆதரவாக நின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் 2005இல் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிக்கு துணை நின்றனர்.
2010 தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக் ஷவை அந்தக் கதிரையில் அமர வைத்ததில் முஸ்லிம்களுக்கு பெரும் பங்கிருக்கின்றது. இது இந்நாட்டின் தமிழர்கள் வழங்கிய பங்களிப்பை விட சற்று அதிகம் என்றே கூறலாம். 2015 மற்றும் 2019 ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஆதரவளித்த வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களும் பெருந்தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களே என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
இம்முறை சஜித்திற்கு வழங்கிய அளவுக்கு கோத்தாபய ராஜபக் ஷவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்பது நிதர்சனமே. ஆனாலும், பல இலட்சம் முஸ்லிம்கள் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதையும், தேசிய காங்கிரஸ் போன்ற ஓரிரு முஸ்லிம் கட்சிகளும் பல தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்காக உழைத்திருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இருப்பினும், முஸ்லிம்கள் மெல்ல மெல்ல இரு தரப்பினராலும் கைவிடப்படுவது போன்ற ஒரு முன்னுணர்வு இச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சஜித்திற்கும் ரணிலுக்கும் இடையில் எதிர்க்கட்சித்தலைவர் கதிரைக்கான சண்டை இடம்பெறுகின்றதே தவிர, சிறுபான்மை முஸ்லிம்கள் தொடர்பில் அவர்களுக்குள்ள தார்மீக கடமை பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.
மறுபுறத்தில், பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்பதை குறிப்பெடுத்து வைத்திருக்கின்ற ராஜபக் ஷ அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயற்பட பொதுவெளியில் அழைப்பு விடுக்கின்ற போதிலும், அண்மையில் நியமிக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவோ, பிரதி அல்லது இராஜாங்க அமைச்சராகவோ எந்த முஸ்லிமும் நியமிக்கப்படவில்லை என்பது கவனிப்பிற்குரிய பேசு பொருளாகியிருக்கின்றது.
இது ஒரு குற்றம் இல்லை. அரசாங்கம் திட்டமிட்டு இதை செய்திருக்கவும் மாட்டாது. ஆயினும், வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் மக்கள் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறாமை, ஒரு சமூகம் என்ற வகையில்.. ‘எல்லாம் இருந்தும் ஏதோவொன்று இல்லாத ஒரு குறையை பரவலாக முஸ்லிம் மக்களுக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.
முன்னதாக, முஸ்லிம் ஒருவர் இந்து மதவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட போது எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவர் பதவி விலக வேண்டுமென்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இப்போது வடமேல் மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சமகாலத்தில், 53 பேரைக் கொண்ட அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுள் முஸ்லிம்கள் யாரும் இல்லை. எனவே, அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமே இப்படியான ஒரு இக்கட்டான நிலை ஏற்படுகின்றதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
தொடர்ச்சியாக பதவிகள்
இலங்கை சுதந்திரமடைந்தது தொடக்கம் இன்று வரையான எல்லா அரசாங்கங்களின் அமைச்சரவையிலும் முஸ்லிம் ஒருவராவது அமைச்சராக பதவி வகித்து வந்தார்கள். 1947 இல் நிறுவப்பட்ட டீ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அமைச்சரவையில் ரீ.பி.ஜாயா, 1953 இன் ஜோன் கொத்தலாவல அமைச்சரவையில் எம்.சி.எம்.கலீல், 1956 இன் பண்டாரநாயக்க அரசாங்கம் மற்றும் 1959 தஹநாயக்க அரசாங்கத்தில் சீ.ஏ.எஸ். மரிக்கார், 1960 மற்றும் 1970 களில் நிறுவப்பட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அமைச்சரவைகளில் பதியுதீன் மஹ்மூத், 1965 டட்லிசேனநாயக்க அமைச்சரவையில் எம்.எச்.மொஹமட், 1977 இன் ஜே.ஆர் ஜயவர்தன அரசாங்கத்தில் ஏ.சி.எஸ்.ஹமீட் மற்றும் எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார், 1989 இல் ஆட்சிக்கு வந்த ஆர்.பிரேமதாஸ அரசாங்கத்தில் ஏ.சீ.எஸ்.ஹமீட் மற்றும் ஏ.ஆர். மன்சூர் என எல்லா அமைச்சரவையிலும் ஆகக் குறைந்தது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இடம்பிடித்திருந்தனர்.
மிகக் குறிப்பாக 2004 இல் நிறுவப்பட்ட சந்திரிகா அம்மையாரின் ஆட்சி தொடக்கம், அதற்குப் பின்னர் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்திரிபால - ரணில் கூட்டரசாங்கங்களில் மேலும் அதிகமான முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். சிலருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்ட வரலாறும் உள்ளது.
ஆனால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள 15 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அதன் பின்னர் நியமனம் பெற்ற 35 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 3 பிரதியமைச்சர்களில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியையும் காண முடியவில்லை. பைஸர் முஸ்தபா, காதர் மஸ்தான் ஆகிய இருவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்று நினைத்திருந்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இந்த இடத்தில், “முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்கவில்லை. எனவே எந்த உரிமையுடன் அமைச்சு கேட்கின்றீர்கள்?” என்று ஒருசிலரும், “பொதுஜன பெரமுனவில் எந்த முஸ்லிம் எம்.பி.யும் இல்லை” என்று வேறு சிலரும் கேள்வி எழுப்புவதைக் காண முடிகின்றது. இதேவேளை, அமைச்சுப் பதவி இருந்தால் மட்டும் சாதித்து விடுவார்களா என்ற வினாவும் முன்வைக்கப்படுகின்றது. இவையெல்லாம் நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்ளும் கற்பிதங்களே அன்றி, நியாயங்களாகத் தெரியவில்லை.
விளங்க வேண்டியது
இங்கு ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கோத்தாபயவுக்கு வாக்களிக்கவில்லையே தவிர முஸ்லிம்கள் வாக்களிக்கவே இல்லை என்பது பொய்யாகும். இப்படியிருக்க, முஸ்லிம்கள் யாரும் வாக்களிக்கவே இல்லை எனவே எந்த முகத்தை வைத்துக் கொண்டு அமைச்சை எதிர்பார்ப்பீர்கள் என்று நமக்குள்ளே வாதிடுவது அபத்தமானது.
அதேநேரம், பொதுஜன பெரமுன கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால், மொட்டுடன் இணைந்து செயற்பட்ட சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிக் காரர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுள் ஆறுமுகன், டக்ளஸ் தேவானந்தா, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச என உள்ளடங்குகின்றனர்.
எனவே, இங்கு ‘மொட்டுக் கட்சிக்காரர்கள்’ என்ற தகுதியின் அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை வழங்கவில்லை. மாறாக, கடந்த நான்கரை வருடங்களாக ராஜபக் ஷ அணியினர் அதிகாரமிழந்து அல்லல்பட்ட போது, ‘அந்தப் பக்கம்’ தாவாமல் பக்கபலமாக இருந்தவர்களுக்கே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஆகவே, அந்த வரையறைக்குள் எந்த முஸ்லிமும் இல்லை எனலாம்.
எவ்வாறிருப்பினும், முன்னர் அனுமானிக்கப்பட்ட போதிலும், பைஸர் முஸ்தபா மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கு கடைசி மட்டும் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சுப் பதவியை பைஸர் முஸ்தபா தனக்கு பதவி தேவையில்லை என்று சொல்லி விட்டார் என்றும், மஸ்தானுக்கு ஏதோ காரணத்தால் கொடுக்கப்படவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், விசாரித்துப் பார்த்ததில் உண்மைக் காரணங்கள் வேறுவிதமானவை என்று தெரியவருகின்றது.
முஸ்லிம்களுக்கு அமைச்சு கொடுக்கப்படாமை தற்செயலாகவே இடம்பெற்றிருக்கின்றது. அரசாங்கம் எதிர்பார்த்த தகுதிகளை பைஸரும், மஸ்தானும் கொண்டிருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. ஒருவேளை, கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பாரானால், அவருக்கு அமைச்சுப் பதவி கிடைத்திருக்கும். இதற்கப்பால் சொல்ல ஒன்றுமில்லை.
ஆனால், அமைச்சுப் பதவி கொடுக்காதது சரிதான் என்று சொல்வது அற்பத்தனமானது. அது, ஜனாதிபதிக்கு இம்முறை வாக்களித்த முஸ்லிம்களின் பங்களிப்பையும், அதாவுல்லா, பைஸர், மஸ்தான் தொடக்கம் பஸீர், ஹசனலி, அலிசப்ரி வரை முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் வழங்கிய ஒத்துழைப்பையும் குறைமதிப்பீடு செய்வது போலவே அர்த்தப்படுத்தப்படலாம்.
முஸ்லிம்களின் வகிபாகம்
அதேவேளை, கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அதன் கனதி உணர்ந்து மக்களுக்கு சேவையாற்றவில்லை. வெறுமனே கதிரைகளை சூடாக்கிவிட்டு, வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு காலத்தை வீணடித்தார்களே தவிர, முஸ்லிம்களின் உரிமைகளுக்காக அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. எனவே அமைச்சு தந்தாலும், தராவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.
இதையெல்லாம் தாண்டி, பல்லினங்கள் வாழும் நாடொன்றில் முஸ்லிம்களும் ஒரு தனியினம். அவர்களுக்கு என்று பிரத்தியேகமான அபிலாஷைகள் உள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபயவுக்கு பாரியளவில் வாக்களிக்காத தமிழ் சமூகத்திற்கு இரு அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருப்பது போல, முஸ்லிம்களுக்கும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை வழங்கியிருக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக, அரபு நாடுகளுக்கு காட்டுவதற்காக, முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் அதை செய்ய முன்வருமாயின், முஸ்லிம்கள் அதனை ஒரு நல்ல சமிக்ஞையாக நோக்குவார்கள். அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கான வகிபாகம் உறுதிப்படுத்தப்படும் அதேநேரத்தில், ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியும் குறையும்.
அந்த வகையில், இப்போது இரண்டும்கெட்டான் நிலையிலுள்ள முஸ்லிம் சமூகம் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்ல வேண்டும். அரசாங்கமும் கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் ராஜபக் ஷக்களுக்கு வழங்கிய ஆதரவை மனதிற் கொண்டும், நல்லெண்ண அடிப்படையிலும் உரியவற்றை வழங்கி முஸ்லிம்களை அணைத்துச் செல்வதே சிறப்பு.
அதைவிடுத்து, இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ‘அதிகாரம் கிடைக்கவில்லை’ என்ற கோதாவில் முஸ்லிம்களை கவனிக்காது விட நினைக்கின்ற சமகாலத்தில், தமக்கு ‘பெருவாரியாக முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை’ என்ற உள்மன ஓர்மத்தின் காரணமாக ஆட்சியாளர்களும் முஸ்லிம் சமூகத்தினை நட்டாற்றில் விட்டு விடக்கூடாது. இதுவே முஸ்லிம் சமூகத்தின் நிகழ்கால எதிர்பார்ப்பாகும். வேறொன்றுமில்லை !
-ஏ.எல்.நிப்றாஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM