புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெற்றிகரமான இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார். வரலாற்று காலம் தொடக்கமே இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வலுவான மற்றும் பல்வேறு வழிகளிலான தொடர்பினை கொண்டுள்ள நாடுகள் என்ற வகையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய விஜயத்தின்போது அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், வெ ளிவிவகார அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நாட்டின் தலைவராக பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்திய விஜயம் அமைந்துள்ளமையும் விசேட அம்சமாகும். இது தொடர்பில் இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் பிரஸ்தாபித்த ஜனாதிபதி, தனது பதவிக்காலத்தில் முதலில் இலங்கை வரும் வெளிநாட்டு தலைவராக இந்தியப் பிரதமர் மோடி இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமருடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், சமத்துவம் மற்றும் சுதந்திரம் குறித்து மிக முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக இருதரப்பு சந்திப்பின் பின்னர் கருத்து வெ ளியிட்ட இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் நல்லிணக்கச் செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றும் அந்தச் செயன்முறைகளில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்துவதும் உள்ளடங்குகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான எமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து சகல தரப்புக்களையும் அரவணைக்கும் தனது அரசியல் கருத்துக்களை என்னிடம் ஜனாதிபதி கூறினார். பலம் வாய்ந்ததொரு இலங்கை, இந்தியாவின் நலன்களுக்கு மாத்திரமல்ல மாறாக இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கே நன்மையளிப்பதாகும். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு மக்கள் அளித்த ஆணை ஒரு பலம்வாய்ந்த நாடொன்றுக்கான இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாகும். இலங்கையும் இந்தியாவும் வலிமையான பிணைப்பைக் கொண்டிருக்கின்றது என்றும் இருதரப்பு சந்திப்பின் பின்னர் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி தமிழ்ப் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் முக்கியத்துவமிக்க கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்தியப் பிரதமரின் கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றிருந்தது. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம், சமத்துவம், நீதி மற்றும் கௌரவம் என்பன தொடர்பில் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளமை முக்கிய அம்சமாகும்.
இதேவேளை இருதரப்பு சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, ஜனாதிபதி என்ற வகையில் எனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மிகவும் உயர்ந்த மட்டத்துக்கு எடுத்துச் செல்ல நான் விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாம் நீண்ட கால நட்புறவை கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் பாதுகாப்புக்காகவும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. நீண்டகால நட்புறவை கொண்டுள்ள இரு நாடுகளும் அவற்றின் பொருளாதார, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்தும் ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார்.
அதாவது தமிழ்மக்களுக்கு அபிவிருத்தியையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் வழங்குவதே எனது அணுகுமுறையாகும். சுதந்திரம், அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அவை ஏற்கனவே எங்கள் அரசமைப்பில் இடம்பெற்றுள்ளன. வேலைவாய்ப்பு மூலமும் மீன்பிடித்துறை, விவசாயம் போன்றவற்றினை ஊக்குவிப்பதன் மூலமும் நேரடியாக மக்களுக்கு நன்மைகள் சென்றடைவதற்கான வழிவகைகளை காணவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராயலாம். ஆனால், கடந்த 70 வருடங்களாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஒரு விடயம் குறித்து மாத்திரமே வாக்குறுதியளித்து வந்துள்ளனர், அதிகாரப்பகிர்வே அதுவாகும். ஆனால் இறுதியில் எதுவும் இடம்பெறவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் நான் கருதுகின்றேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்துக்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதியளித்தால் அது பொய்யாகும். எந்த பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யவேண்டாம், வேலைவாய்ப்பை வழங்கவேண்டாம் என எந்த சிங்களவரும் தெரிவிக்க மாட்டார். ஆனால் அரசியல் விவகாரங்கள் வேறு மாதிரியானவை. 13 ஆவது திருத்தம் இலங்கையின் அரசமைப்பின் ஒரு பகுதி என்பதுடன் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பொலிஸ் அதிகாரம் போன்றவை மாத்திரம் வழங்கப்படவில்லை, இதனை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது. நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், புதிய ஜனாதிபதியை பொறுத்தவரையில் இந்த இந்திய விஜயம் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது. அத்துடன் இந்தியத் தரப்பும் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்தல் உள்ளிட்ட விடயங்களில் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துள்ளது.
உண்மையில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கு தார்மிகக் கடமை உள்ளது என்பதனை மறுக்க முடியாது. கடந்த காலங்களில் இந்தியா இந்த விடயத்தில் பாரிய தலையீடுகளை செய்திருந்த போதிலும் இதுவரை தமிழ்ப் பேசும் மக்களுக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைப் பெற முடியவில்லை. எப்படியிருப்பினும் 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டுடனேயே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டபோதிலும் இதுவரை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைய முடியவில்லை என்பதே யதார்த்தமாகும். எனவே இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஆராயவேண்டும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக எதனையும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆனால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பெரும்பான்மை மக்களுக்கு தெளிவுபடுத்தி தீர்வுக்கான அவசியத்தை ஏற்படுத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். இது தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும். தமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா ஆரோக்கியமான பங்களிப்பை செலுத்தும் என்று தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதன் காரணமாகவே மோடியின் அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.
எனவே, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவது குறித்து இந்தியா முழுமையான ஈடுபாட்டுடன் செயற்படும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இந்த விடயத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை இந்தியா வழங்கவேண்டிய தார்மிகக் கடமையை கொண்டுள்ளது என்பதனை மறுக்க முடியாது. எனவே அரசாங்கமும் தமிழ்த் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைக் காண இந்தியா தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த வேண்டும். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இந்தியா இந்த விடயத்தில் மிக முக்கியமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து வலியுறுத்தியுள்ளமை தீர்க்கமான நிலைமையாக அமைந்துள்ளது. எனவே விரைந்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முதன்மையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் இந்தியா அதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.
(12.12.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரியத் தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM