எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொது ஜன பெரமுனவுக்கு தனிப்பெரும்பான்மை வழங்க வேண்டுமென சிங்கள மக்கள் முடிவெடுத்தால், அதுவும் நடக்கலாம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் மட்டும் கூடிப் பேசுவது, வாக்குகளை சுவீகரிப்பது என்றுதான் இருக்கிறார்கள். அதற்கு அப்பால் கூட்டு முடிவுகளை எடுக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.
2002 முதல் 2015 வரை ஒன்றாக பயணித்து, இந்த விடயங்களை நாம் வலியுறுத்தி வந்தோம். அப்படியொன்றை செய்ய முடியாதென திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.
இவர்களின் நடவடிக்கையில் தமிழ் மக்கள் விரக்தி, வெறுப்பு ஏற்பட்டு பல வழிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், 50 வீதத்துக்கும் மேலான வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஏற்கனவே தீர்மானத்தை எடுத்திருந்தனர். கடந்த காலத்தில் மக்கள் கொல்லப்படவும், காணாமல் போகவும் காரணமாக இருந்தவர் ஜனாதிபதியாக வரக்கூடாதென உறுதியாக இருந்தார்கள். அதனால் மாற்று தெரிவுக்கு வாக்களித்தனர். நாங்கள்- மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என கூறினோம். ஏனெனில், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது எமக்கு தெரியும்.
பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் தமிழர்களுக்கு எதிராக செயற்படுமென சொல்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் விகிதாசாரமுறைப்படி நடக்கும். அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பதெல்லாம் தெரியாது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வருமென தெரிகிறது.
தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். சுமந்திரன், சம்பந்தன், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மாற்று அணி வரக்கூடாது, பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க விடக் கூடாது என சொல்வதற்கு தேவையில்லை. அதை மக்கள் தீர்மானிக்கும் காலம் வந்துள்ளது. மாற்று அணி தேவையில்லை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரவிடக்கூடாது என சுமந்திரன் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலிலும் சிங்கள மக்களின் வாக்கிலேயே வெற்றிபெற்றார்கள். அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டுமென சிங்கள மக்கள் முடிவெடுத்தால், அதுவும் நடக்கலாம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவர்கள் வெற்றிபெற்றால், அதை பயன்படுத்தி இனப்பிரச்சினையை தீர்க்க ஏன் முயற்சிக்கக்கூடாது என்பது அடுத்த கேள்வி. ஏற்கனவே ஐ.தே.கவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தும் உங்களால் தீர்க்க முடியவில்லை. இப்பொழுது இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தால், நாம் சிறிய தேசிய இனமென்ற அடிப்படையில் அவர்களுடன் பேசி தீர்வுக்கு வரமுடியுமா என்பதை பார்க்க வேண்டும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தால், 19ஆவது திருத்தச்சட்டத்தை சில சமயங்கள் அவர்கள் மாற்றலாம். அதைமாற்றினால் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, உறுதிப்படுத்தப்பட்ட சில விடயங்கள் மாற்றப்படலாம். பலமுறை ஒருவர் ஜனாதிபதியாகலாம். 19ஆவது திருத்தத்தினால் பாதிக்கப்படப் போவது பெரும்பான்மையான சிங்கள மக்களே.
தமிழ் மக்கள் ஏற்கனவே பலவிதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தம்மைத்தாமே நிர்வகிக்க, தமது பாதுகாப்பை பலப்படுத்த எப்படியான உபாயங்களை வகுப்பதென நாங்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுமந்திரன் ஒருவர் திடீரென மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடாது, மாற்று அணி வரக்கூடாது என்பது தமிழ் மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் நடவடிக்கையை அவர் செய்கிறார் என்றார்.--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM