நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர்களாக வந்து மலையக மக்களுக்கான சேவையை முன்னெடுப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ.கே.வெள்ளையனின் 48 ஆவது சிரார்த்த தின நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று (01) அட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வீ.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.உதயகுமார், சோ.ஸ்ரீதரன், எம்.ராம் மற்றும் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நிதிச் செயலாளர் எஸ்.செபஸ்டியன், ஆலோசகர் வீ.புத்திரசிகாமணி, அட்டன் நகரசபை உறுப்பினரான அழகமுத்து நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட அமரர் வெள்ளையன் உருவாக்கிய கட்சியில் தலைவராக இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன். தோட்ட மக்கள் காணி, வீட்டு உரிமை பெற்றவர்களாக மாற வேண்டும் என்பதே அமரர் வெள்ளையனின் இலட்சியமாக இருந்தது. நான் கடந்த நான்கரை வருடங்களாக அமைச்சராக பதவி வகித்த போது எமது மக்களுக்கு சொந்த நிலத்தில் தனி வீடுகளைக் கட்டிக் கொடுத்து அவற்றை கிராமங்களாக மாற்றியதோடு, அரசியல் ரீதியில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களை அதிகரித்ததுடன் பிரதேச சபை சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து மலையகத்துக்கான தனியான அதிகார சபையை உருவாக்கிய பல அர்த்தமுள்ள சேவைகளை செய்து விட்டுத்தான் அமைச்சுப் பதவியை கையளித்து விடை பெற்றுள்ளேன்.
எனவேதான் தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு நுவரெலியா மாவட்ட மக்கள் வாக்களித்தார்கள். எனினும், சஜித் தோல்வி கண்டார். ஆனால், எமது மக்களோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியோ தொழிலாளர் தேசிய சங்கமோ தோல்வியடையவில்லை. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அளித்து புதிய ஜனநாயக முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2015ஆம் ஆண்டில் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்களிடம் வாக்குகளைக் கேட்டோம். அவர்களும் நம்பிக்கை வைத்து வாக்களித்திருந்தார்கள். அவர்களுக்கு வாக்கு கொடுத்தது போல நாம் அவற்றை நிறைவேற்றிக் காட்டினோம். இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளைக் கட்டி முடித்துள்ளதோடு மேலும் 10 ஆயிரம் வீடுகளில் 5ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான காணியையும் அடையாளம் கண்டிருந்தோம்.
நாம் இன்று அமைச்சுப் பதவியில் இல்லாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை செய்து காட்டியுள்ளோம். எதிர் காலத்துக்குத் தேவையான அடிப்படை அதிகாரங்களையும் பெற்றுக் கொடுத்துள் ளோம். அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். நாம் ஆரம்பித்த நல்ல திட்டங்களை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்க வேண்டும்.
நாம் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக நோர்வூட் மைதானத்தில் 8ஆயிரம் கூரைத் தகடுகளை வைத்திருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவற்றை மக்களுக்கு வழங்க முடியாமல் போய் விட்டது. இப்போது அவற்றை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் அவர்களின் ஆசை வார்த்தையில் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
நான் அமைச்சராக இருந்த போது எமது மக்களுக்காக "புதிய கிராமங்கள்" அமைச்சை கேட்டு வாங்கியிருந்தேன். இப்போது மீண்டும் பழைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுதான் கிடைத்துள்ளது. நான் தலா ஏழு பேர்ச் காணியில் 10 இலட்சம் ரூபா செலவில் வீடுகளைக் கட்டிக் கொடுத்த போது விமர்சனம் செய்தவர்கள் அது போதாது என்றும் தாங்கள் பதவிக்கு வரும் போது 20 பேர்ச் காணியில் 20 இலட்சம் ரூபா செலவில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கப் போவதாகவும் பிரசாரம் செய்தார்கள். இப்போது அவர்களுக்கு அமைச்சுப் பதவியும் கிடைத்துள்ளது.
நான் செய்து கொடுத்ததை விட இரண்டு மடங்கு செய்து கொடுத்தால் அதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்பவனாகத்தான் நான் இருப்பேன். நல்ல விடயங்கள் செய்யும் போது நிச்சயம் வாழ்த்துவேன். எமது சமூகத்துக்கு தேவையானதை செய்யத் தவறினால் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டேன்.
முன்னாள் அமைச்சர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எமது மக்களை இழிவு படுத்தி பேசியதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் எமது தலைவர் மனோ கணேசன் தகுந்த பாடத்தைப் புகட்டியிருந்தார். என்னைப் போன்றவர்கள் அந்த இடத்தில் அந்த சந்தர்ப்பத்தில் இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அதற்காக எமது மக்களும் அரசியல்வாதிகளும் சமூகப் பொறுப்போடு பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
அதேநேரம், எமது சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மலையகத்தில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள் இல்லை என்று கூறியுள்ளார். பட்டதாரிகள் மாத்திரம் தான் சமூகத்தில் படித்தவர்களா? அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், கிராமசேவகர்கள், இன்னும் பல துறைகளில் உள்ளவர்கள் எல்லாம் படித்தவர்கள் இல்லையா? எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே எம்மை கேவலப்படுத்தும் போது, ஏனைய சமூகங்களில் உள்ளவர்களும் எம்மை எள்ளி நகையாடத்தானே செய்வார்கள். எமது சமூகத்தை கேவலப் படுத்தும் செயல்களை இனிமேலும் நாம் அனுமதிக்கக் கூடாது.
அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். அதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சராகி மலையக மக்களுக்கான சேவையைத் தொடர்வோம். அதற்கு முன்ன தாக தோட்டம் தோட்டமாக வந்து மக்களை சந்தித்து தெளிவு படுத்தவுள்ளேன். எமது மக்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM