இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளையினை இந்திய அரசு நினைவூட்ட வேண்டும் என தமிழகத்தின் இயக்குனரும் தமிழ் தேசிய உணர்வாளருமான மு.களஞ்சியம் தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இவர் நேற்று அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தேன். பத்து ஆண்டுகள் போர் முடிந்து இலங்கை மண் எப்படி இருக்கின்றது என்று பார்ப்பதற்காக பயணம் மேற்கொண்டேன். போரின் பின்னர் அதன் வலியால் துன்புற்றுக்கொண்டிருக்கக்கூடிய மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். போர் நடைபெற்ற பகுதி என்ன சூழலில் இருக்கின்றது என்று நேரடியாக காணவேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளேன்.
இங்கு வந்து மக்களைச் சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறித்து பேசுகின்றபொழுது பல்வேறு உண்மைகளை நான் அறிந்துகொள்ள முடிந்தது. கொழும்பில் இருந்து பலாலி விமான நிலையம் வந்து அங்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதற்காக பல்கலைக்கழகத்தினை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.
பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது மாணவர்கள் வீதியில் நின்றிருந்தார்கள். மாணவர்கள் மாவீரர்கள் நிகழ்வினை கொண்டாடக்கூடாது என்பதற்காக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. சிறப்பு அனுமதி வாங்கி நான் பல்கலைக்கழகத்துக்குள் சென்று அங்கு இருக்கக்கூடிய பல்துறைகளையும் தெரிந்துகொண்டேன். அதனைத்தொடர்ந்து நான் முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டேன் அங்கு போர் நடந்த பகுதிகளை பார்வையிட்டதுடன் மக்களை சந்தித்து பேசினேன்.
கோப்பாய் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கெடுத்தேன் வெறும்தொலைக்காட்சிகளில் இதனைப்பார்த்திருந்த நான் நேற்றுத்தான் உணர்வுபூர்வமாக மக்கள் மாவீரர் தினத்தினை எவ்வாறு கொண்டாடுகின்றார்கள் என்பதை நேரடியாகக் கண்டு அனுபவப்பட்டேன். இன்று ஸ்ரீலங்காவில் புதியதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய கோத்தபாய ராஜபக் ஷ இன்று இந்தியாவுக்கு முதல் முறையாக செல்லுகின்றார்.
அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு செல்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்திய அரசாங்கம் போர்க்காலகட்டத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரினை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்று இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசாங்கம் செயற்பட்டபோது அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவிற்கு பல வாக்குறுதிகளைக்கொடுத்திருந்தார்.
அதில் ஒன்று 13ஆம் சட்டப்பிரிவிற்கும் மேலதிகமான அதிகாரத்தினை தமிழர்களுக்கு நாம் வழங்குவோம் என்று சொன்னார். சிவசங்கர்மேனன், ஆர்.கே.நாராயணன் போன்றவர்கள் எல்லாம் அந்த வாக்குறுதியினை பெற்று இந்தியதலைமை அமைச்சருக்கு சொன்னார்கள் தமிழகத்தினை ஆண்ட கருணாநிதிக்கும் அந்த செய்தி சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அன்று கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றியதா என்று கேட்டால் நிறைவேற்றவில்லை என்பதை நான் அறிந்திருக்கின்றேன். இன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளையினை இந்திய அரசு நினைவூட்டவேண்டும்.
இங்கு போரிற்கு பின்னர் மனவலியில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஈழத்தமிழர்களுக்கு ஒரு மருந்திடுகின்ற ஆறுதலான செய்தியாக அது இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது எந்தெந்த வாக்குறுதிகளை இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கொடுத்தாரோ அந்த வாக்குறுதிகளை இன்று பதவியில் இருக்கக்கூடிய கோத்தபாய ராஜபக் ஷ நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழர்கள் சார்பில் முன்வைக்கின்றோம்.
இங்கு இருக்கக்கூடிய மக்கள் பெரும் அச்சத்துக்கு உட்பட்டு இருக்கின்றார்கள். போர்க்காலத்தில் இராணுவ பொறுப்பில் இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்திருப்பதால் அந்த அச்சம் எல்லோரின் மனதிலும் படர்ந்திருக்கின்றது. இலங்கை இராணுவம் போரிட்டது விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே அன்றி ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு எதிராக இல்லை என்கின்ற உணர்வினை இந்த அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இந்த மக்கள் அச்சத்தில் இருந்து விடுபட்டு அரசுடன் இணைந்து அச்சமற்ற வாழ்க்கையினை வாழ முடியும் என்று நான் கருதுகின்றேன்.
அதேபோல் நில ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அவரவருக்கு உரிய நிலங்களை இந்த அரசு கொடுக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் குறித்த விபரங்கள் வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருப்பதை நான் அறிகின்றேன். அதற்கான முறையான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் ஏற்பட்ட சறுக்கல்களை எல்லாம் சரிசெய்து புதிய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவார் என்று நான் நம்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM