இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தவிடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமென்று சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாடல் பியர் அலைன் எல்ட்சிங்கர் சம்பவத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு சுவிற்சர்லாந்து கோருகின்றது. தீவிரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமாக இது திகழ்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.
கடந்த திங்கட்கிழமை சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் இனந்தெரியாத நபர்களினால் வெள்ளைவேனில் கடத்திச் செல்லப்பட்டு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவரது கையடக்க தொலைபேசியை அவர்கள் பார்வையிட்டு அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இச்சம்பவத்தை அடுத்து இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்புக்களில் பேசப்பட்ட விடயம் வெளிவராதபோதிலும் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தூதுவர் சுட்டிக்காட்டியிருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. திங்கட்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் செய்திகள் கசிந்திருந்தபோதிலும் தூதரகமானது இதனை உடனடியாக உறுதிப்படுத்தியிருக்கவில்லை. நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் இந்த விடயம் தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சம்பவம் தொடர்பில் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் அது தொடர்பில் தேடிப்பார்த்து பதிலளிப்பதாக கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்ற சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவிடமும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அவர் சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை என்றும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவமானது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையும் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. தேர்தல் முடிவடைந்து சில நாட்களுக்குள்ளேயே அரசியல் ரீதியான ஒடுக்கு முறைகள் ஆரம்பமாகிவிட்டதோ என்ற அச்சம் அதிகரித்துள்ளதாக அந்தப் பத்திரிகையின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரியும் பல குற்றச்செயல்களை துப்புத்துலக்கி சந்தேக நபர்களை கைதுசெய்தவருமான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தனது குடும்பத்தாருடன் அடைக்கலம் கோரி சுவிற்சர்லாந்துக்கு சென்றிருந்தார். இதற்கு சில தினங்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்தே நிஷாந்த சில்வா தனது மனைவி மூன்று மகள்மாருடன் சுவிற்சர்லாந்துக்கு அடைக்கலம்கோரி சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பிலேயே சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினரே விசாரணைகளை நடத்தி வந்தனர். லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு, பிரகீத் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையிலேயே ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஷானி அபேசேகர இடமாற்றப்பட்டிருந்தார். பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியதை அடுத்து அது தொடர்பிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த திங்கட்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணையாளர்களாக சேவையாற்றும் 704 பேருக்கு அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அவர்களது பெயர், விபரங்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை கடத்திய இனந்தெரியாத நபர்கள் நிஷாந்த டி சில்வாவுக்கு விசா வழங்கப்பட்டமை தொடர்பிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவை சேர்ந்த வேறு யாராவது அடைக்கலம் கோரி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனரா என்ற விடயம் தொடர்பிலும் விசாரித்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதிலிருந்து தூதரகப் பெண் ஊழியர் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டமைக்கு காரணம் என்ன என்பதை ஓரளவிற்கு ஊகித்துக்கொள்ள முடிகின்றது. இந்த விவகாரம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் விசாரிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சறுத்தப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயமாகும். இத்தகைய செயற்பாடு இராஜதந்திர ரீதியான உறவுகளைக்கூட பாதிக்கும் விடயமாக மாறக்கூடிய தன்மை காணப்படுகின்றது. தூதரகத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை இல்லை. அதுவும் தூதரகத்தில் அடைக்கலம் கோருவோர் தொடர்பில் தகவல்களை பெறுவது என்பது அடிப்படையில் மனித உரிமை மீறலாகவே அமைந்திருக்கின்றது.
நாட்டில் ஒருவருக்கு அச்சுறுத்தல் காணப்படுமானால் அவர் வெளிநாட்டுத் தூதரகங்களிடம் தஞ்சம் கோரமுடியும். இறுதி யுத்த காலத்திலும் அதன் பின்னரும் சுவிற்சர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகள் பலருக்கு இத்தகைய அரசியல் தஞ்சம் வழங்கியிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கூட யுத்தகாலப்பகுதியில் இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரி புலம்பெயர்ந்திருக்கின்றனர். எனவே இது அடிப்படை மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இந்த விடயத்தில் தவறுகாண முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதி யுத்த காலத்தில் கடத்தல்கள், கைதுகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்கதையாக இடம்பெற்று வந்தன. அப்போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வெளிநாட்டு தூதரக பெண் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவமானது அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடர்வதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. புதிய அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் கூட இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடக்கூடும்.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பொலிஸார் விசேட குழுவை அமைத்து விசாரணை நடத்தவேண்டும். உண்மை யிலேயே யார் இத்தகைய செயலில் ஈடுபட்டனர் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் இந்த சம்பவமானது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
சர்வதேசத்துடனான இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் கட்டிக் காக்கப்படவேண்டும். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமது நாட்டுக்கு இன்றியமையாததாகும். எனவே அத்தகைய ஒத்துழைப்புக்களை பெறும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
(29.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM