ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் கெஹெலியரம்புக்வெலவும் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறும்வரை இடைக்கால அரசாங்கத்தின் 16 பேர் கொண்ட அமைச்சரவை கடந்தவாரம் பதவியேற்றிருந்தது.
இதில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்த்தன நேற்று முன்தினம் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேபோன்றே ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதியின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலியரம்புக்வெல ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும். இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்வரும் வாரங்களில் ஐ.நா. மனித உரிமை பேரவையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனிப்பட்ட முறையில் அனுசரணை வழங்கியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச நீதிபதிகளை விசாரணையில் உட்படுத்துவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்று தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டு சில தினங்களிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அன்றைய இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வோம்.
அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசாங்க முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அன்றைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு இந்த விடயம் தொடர்பில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உறுதிமொழி வழங்கியிருந்தார். பொறுப்புக்கூறும் விடயத்தில் உரிய அக்கறை செலுத்தப்படும் என்று அவர் வாக்குறுதி வழங்கியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் இருவருக்குமிடையில் கூட்டு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படாமையினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. யுத்தக்குற்றச்சாட்டுக்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியம் இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டது.
இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டபோதிலும் விசாரணைகளில் அன்றைய அரசாங்கம் அக்கறை காண்பிக்காமையினால் 2013ஆம் ஆண்டு மீண்டும் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கும் அன்றயை அரசாங்கம் உடன்படவில்லை, ஒத்துழைக்கவில்லை. இதன்காரணமாக ஐ.நா. மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணையை நடத்தும் நிலைமை உருவாகியிருந்தது. இதன்பின்னர் 2014ஆம் ஆண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் அன்றைய அரசாங்கம் இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்காமையின் காரணமாக பெரும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில்தான் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவியேற்றது.
இதனையடுத்து புதிய அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமை பேரவையானது ஆறுமாதகால அவகாசத்தை வழங்கியதுடன் பொறுப்புக்கூறும் விடயத்தில் ஒத்துழைத்து செயற்படுமாறு அழைப்புவிடுத்திருந்தது.
இதற்கிணங்கவே 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்டவேண்டும் எனக்கோரும் 30/1 பிரேரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு அன்றைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொண்டு இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தார். பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியபோதிலும் இதனை அமுல்படுத்தும் விடயத்தில் உரிய அக்கறையினை நல்லாட்சி அரசாங்கமும் காண்பிக்கவில்லை. அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணையில் ஒருபோதும் ஈடுபடுத்த முடியாது என்று ஆணித்தரமாக கூறியிருந்தார். அத்துடன் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.
உள்ளக விசாரணைக்கான பொறிமுறை கூட ஒழுங்கான முறையில் அமைக்கப்படவில்லை. ஆனாலும் அன்றைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து சர்வதேச சமூகம் முதலில் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கியிருந்தது.அதன்பின்னர் மேலும் இரண்டு வருடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசத்திற்குள் பிரேரணையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டன. காணாமல் போனோருக்கான ஆணைக்குழு பெரும் இழுபறிக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பணிகள் ஆரம்பிப்பதற்கே பலமாதங்கள் சென்றிருந்தன.
இதேபோன்று உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தபோதும் அந்த விடயம் கூட நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு நல்லாட்சி அரசாங்கமானது ஜெனிவா பிரேரணையை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்திருந்தபோதிலும் உள்ளக விசாரணைக்கான நடவடிக்கைகள் கூட உரிய வகையில் எடுக்கப்படவில்லை.
அன்றைய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருதரப்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒருதரப்பாகவும் செயற்பட்டமையினால் அதனை ஒரு சாட்டாக வைத்து இழுபறிநிலைமை தொடர்ந்து வந்தது.
தற்போது மீண்டும் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக் ஷவும் பதவியேற்று புதிய அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோன்ற செயற்பாடு இடம்பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இறுதி யுத்தகாலத்தின்போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த விசாரணைகளுக்கும் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறு விசாரணைகளில் ஈடுபட்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூட தற்போது அச்சமடையும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
இந்த நிலையில் ஜெனிவா தீர்மானத்தையும் மீள் பரிசீலனை செய்யப்போவதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதோ ஒருவகையில் நீதி வழங்கப்பட வேண்டும். அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என்று கூறியபடி எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கு புதிய அரசாங்கம் முயல்வதாகவே தெரிகின்றது. இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணைகளுக்கு மதிப்பளித்து சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதற்கு ஏற்றவகையில் அமையாவிட்டால் மீண்டும் சர்வதேசத்தின் அழுத்தங்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். இதனைவிட பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்வதற்கு எதிர்காலத்திலும் சந்தர்ப்பம் ஏற்படாமல் போகும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
(27.11.2019 வீரகேசரி நாளிதழ் ஆசிரியத் தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM