மலையக சமூகத்தவராகிய நாம் நாட்டுக்காகவும் அபிவிருத்திக்காகவும் உச்சக்கட்ட பங்களிப்பை வழங்கி வருகின்றோம். எமது மக்களின் சக்தி மிகப்பாரியது. எமது சமூகம் கொச்சைப்படுத்தப்படுவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். நாம் அமைதியாக இருக்கிறோம் என்பதற்காக எவரும் சீண்டிப்பார்க்க முனைய வேண்டாம். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதனை சகலரும் புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்று பராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இந்நாட்டு மக்களிடையே இணக்கப்பாடற்ற ஒரு சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கின்றன. சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற அடையாளங்கள் தெளிவாக வெளித்தெரிவதற்கு தேர்தல் முடிவுகள் உந்துசக்தியாகி இருக்கின்றன. தேர்தலின் பின்னர் சிறுபான்மையினர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் ஓரணியில் நின்று வாக்களித்தமை தொடர்பிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சில புல்லுருவிகள் இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு இம்மக்களைக் கூறு போடும் அல்லது வேரறுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஆனால் ஒரு விடயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்த லில் பிரதான கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் சிங்களப் பௌத்தர்களே. இவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே எமது மக்கள் வாக்களித்தனர். பொது மக்கள் இனவாத ரீதியில் வாக்களிக்கவில்லை என்பதே உண்மையாகும். இதனை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும். மலையக மக்கள் இந்நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுப்பவர்கள். இந்நாட்டின் தேசிய வருமானத்தில் கணிசமான வகிபாகம் இம்மக்களுடையதாகும். இந்நிலையில் அம்மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இம்மக்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்றும் திறமையற்றவர்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 'தோட்டக்காட்டான்' என்று தொழிலாளர்களை இழிவுபடுத்தி அரசியல்வாதி ஒருவர் கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
மலையக மக்கள் இன்று பல்வேறு வழிகளிலும் முன்னேறிச் சென்றுள்ளனர். பட்டதாரிகள் பலர் மலையகத்தில் உள்ளனர். அரச தொழில் துறைகளில் மலையக இளைஞர், யுவதிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். அபிவிருத்தியடைய வேண்டும் என்ற உற்சாகம் மலையகத்தவர்களிடையே காணப்படுகின்றது. இளைஞர்கள் விழிப்படைந்திருக்கின்றார்கள். இளைஞர் சக்தி மேலோங்கி வருகின்றது. மலையக சமூகம் கல்வி மைய சமூகமாக உருவெடுத்து வருவதாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலையக மக்களின் சமகால வாழ்க்கை நிலைமைகளை அறியாதவர்கள், மழைக்குக் கூட லயத்தில் ஒதுங்க வெட்கப்படுபவர்கள் மலையக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
இம்மக்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இவர்களுக்கு அருகதை இல்லை. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே மலையக மக்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது விந்தையிலும் விந்தையாகும். மலையக மக்களை யாரும் கிள்ளுக்கீரையாக நினைத்து விடக்கூடாது. இம்மக்களின் சக்தி மிக மிக அதிகமாகும். இம்மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என்பதற்காக இவர்களை எவரும் சீண்டிப்பார்க்க முனைதல் கூடாது. ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதனை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். மலையக சமூகம் தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டு இப்போது முன்னேறிச் செல்கின்றது.
சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய ஆளுமை இச்சமூகத்துக்கு இருக்கின்றது. அரசியல் வாதிகள் என்ற ரீதியில் நாங்களும் எங்களால் முடிந்த உச்சகட்ட பங்களிப்பை மலையக சமூக அபிவிருத்தி கருதி வழங்கி வருகின்றோம். எமது சமூகம் கொச்சைபடுத்தப்படுவதை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். மலையக சமூகத்தின் ஒன்றி ணைந்த சக்தியைக்கொண்டு இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM