“இப்போது தேர்தல்கள் முடிந்து விட்டன. நான் இப்பொழுது அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி. எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் - அவர்கள் எந்த இனத்தை அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்- நான் ஜனாதிபதி.
இப்போது எனக்குத் தேவையானது எல்லாம் - அனைவரும் மதிப்புடனும் கௌரவத்துடனும் வாழக்கூடிய - சுபீட்சமானதும் அமைதியானதுமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவும் மட்டுமே.”
இவ்வாறு நாட்டு மக்களுக்கு ஒரு அறிவித்தலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ. கடும்போக்காளர் என்று கடந்த காலங்களில் சித்திரிக்கப்பட்டிருந்த இவர் ஜனாதிபதியானவுடன் இவ்வாறு மென்போக்கு சுபாவத்துடன் ஒரு கருத்தை வெளியிட்டிருப்பதானது கடந்த கால சம்பவங்களின் கசப்பான அனுபவங்களின் பிரதிபலிப்பேயன்றி வேறொன்றுமில்லை.
தென்னிலங்கை பெரும்பான்மை மக்களால் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டவுடன் உருவான வெற்றிக் கொண்டாட்டங்களை சிறுபான்மையின மக்கள் ஒரு வித அச்சத்துடனேயே பார்க்கத் தலைப்பட்டனர். தாமும் இந்த நாட்டின் ஒரு பெரும்பான்மையின வேட்பாளருக்கே வாக்களித்தோம் என்ற உணர்வு அத்தருணத்தில் அவர்களிடம் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளன்று மேற்கொள்ளப்பட்ட வெற்றிக் கொண்டாட்டங்களை அது ஒத்திருந்தது.
எனினும் தனது வெற்றிக்குப்பிறகு மிகவும் அவதானமாகவும் அலட்டிக் கொள்ளாமலும் தனது நகர்வை மேற்கொண்டார் ஜனாதிபதி. இதே வேளை சமூக ஊடகங்களில் தேர்தல் வெற்றியை இனவாத நோக்கோடு பரப்பும் செயற்பாடுகளும் தாராளமாக இடம்பெற்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறுபான்மையினத்தவர்களும் இனவாத கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதில் போலி செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்தன.
தேசிய கீதத்தை இனி தமிழில் பாட முடியாது, யாழ் மிருசுவில் 8 தமிழர்கள் கொலை வழக்கு மரண தண்டனை கைதி மேஜர் சுனில் ரத்நாயக்க விடுதலை, தகவல் பரிமாற்றச் சட்டம் அமுல், அரசாங்கத்துக்கு எதிராக எவரும் கருத்துக்கள் கூற முடியாது என பலவாறான போலிச் செய்திகள் முகநூலில் உலாவின. இதை மேலும் தீவிரப்படுத்துவதற்கு அதை பலரும் ஏனையோருக்கு பகிர்ந்தனர்.
இது ஜனாதிபதி கோத்தாபயவின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பேசப்பட்டது. ஏனெனில் சமூக ஊடகங்களின் தீவிரத்தன்மை கடந்த அரசாங்கத்திலும் எதிரொலித்ததன் பயனாகவே ஜனாதிபதி மைத்திரிபால அதை சில வாரங்களுக்கு முடக்கினார். எனினும் தேர்தல் வெற்றிக்குப்பின்னர் மீண்டும் அச்செயற்பாடு தொடரும் என்று பேசப்பட்டாலும் கூட அதை தனது ஒரு அறிவித்தல் மூலம் நிறுத்தினார் ஜனாதிபதி கோத்தா. எந்த சமூக ஊடகப்பக்கங்களில் புதிய அரசாங்கம் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் வந்ததோ அதே சமூக ஊடகத்தில் தனது பக்கத்தில் தனது கொடியுடன் ஒரு அறிவித்தலை அவர் வெளியிட்டார்.
‘தற்போது சமூக ஊடகங்களில் என்னால் அறிவிக்கப்பட்ட ‘அரச தீர்மானங்கள் என்ற பெயரில் பல தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
எனது எந்தவொரு முடிவு தொடர்பான அறிவிப்பும் ஜனாதிபதி செயலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் அல்லது எனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு மும்மொழிகளிலும் ஒரு அறிவிப்பை செய்து தேவையற்ற போலிச் செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் ஜனாதிபதி. இது பலராலும் வரவேற்கப்பட்டிருந்தது. ஏனெனில் இவ்வாறான செய்திகள் பரவினால் முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகளை முடக்கி வைப்பதே கடந்த அரசாங்கத்தின் வேலையாக இருந்தது.
சிறைச்சாலை திணைக்களத்தின் மறுப்பு
இதேவேளை, யாழ் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவில்லை இது ஒரு போலியான செய்தி என சிறைச்சாலைகள் திணைக்களம் உடனடியாக மறுப்புத் தெரிவித்திருந்தது. மேற்படி திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவு ஆணையாளர் கே.டி.பந்துல ஜெயசிங்க இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் தமிழில் தேசிய கீதத்தை இனி பாடத் தடை என்ற செய்தியும் தவறானது என தன்னிடம் வாசுதேவ நாணயக்கார எம். பி தெரிவித்ததாக அரச கரும மொழிகள் நல்லிணக்க முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இது இவ்வாறிருக்க புதிய அரசாங்கத்தின் மீது சேறு பூசும் வகையிலும் இனங்களுக்கிடையில் வன்முறையை தூண்டும் வண்ணமும் குரோதப்பேச்சுக்கள் மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்திருக்கிறார்.
எந்தவொரு அரசியல் பழிவாங்கல்கள், கடத்தல்கள், குழப்பம் விளைவித்தல் தொடர்பாக பீதியெதுவும் இருக்கக் கூடாதென்றும் அவ்வாறு எவர் நடந்து கொண்டாலும் அவர்களின் அந்தஸ்து பாராது சட்டத்தை அமுல்படுத்த பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்குறித்த நகர்வுகள் காரணமாக தற்போது சமூக வலைத்தளங்களில் அவ்வாறான கருத்துக்கள் குறைவடைந்துள்ளன அல்லது முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன எனலாம். இதே வேளை எட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் நாட்டில் ஏனைய சிறுபான்மையினர் வாழ்ந்து வரும் பிரதேசங்களிலும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் புதிய அரசாங்கத்தின் உடனடி செயற்பாடுகளால் குறிப்பிட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அதை விட எட்டியாந்தோட்டை பிரதேசத்தைத் தவிர்த்துப்பார்த்தால் , தேர்தல் வெற்றியையடுத்து சிறுபான்மையினர் செறிவாக வாழ்ந்து வரும் பகுதிகளில் அவர்களுக்கெதிராக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இடம்பெறவில்லை எனும் போது புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு வெகு விரைவாக எந்தளவுக்கு சீர்செய்யப்பட்டிருக்கின்றது என்பதை உணரலாம். இதற்கு சிறந்த உதாரணமாக மற்றுமொரு சம்பவத்தையும் கூறலாம்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமையேற்பு
17 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மறுநாள் ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார். அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம்பெற்றதோடு 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க அவர் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் காலி வீதி எக்காரணங்கள் கொண்டும் மூடப்படவில்லை. வழமையான போக்கு வரத்து இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது. எனினும் இது குறித்து எந்த ஊடகங்களும் செய்தியாக்க ஆர்வம் காட்டவில்லை. தனது வாகனம் செல்லும் போது எந்த வீதியும் மூடப்படக்கூடாது என்றும் அதேவேளை தனது வாகனத்தொடரணியில் பாதுகாப்பு வாகனங்கள் மூன்றுக்கு மேல் செல்லக்கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகின்றது.
நம்பிக்கை தரும் அறிவிப்புகள்
இவ்வாறு தான் பதவியேற்றவுடன் ஏற்கனவே திட்டமிட்டு அல்லது தீர்மானிக்கப்பட்ட பல விடயங்களை ஜனாதிபதி கோத்தாபய அமுல்படுத்தியுள்ளார். அதேவேளை நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டிய நிலைமையும் இங்கு உருவாகியுள்ளது.
வீண் விரயம் மற்றும் ஊழல் மோசடி தனது ஆட்சியில் என்றும் இருக்காது என தனது பதவிப் பிரமாண உரையில் அழுத்தமாக கூறியிருந்த ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்கா விட்டாலும் அவர்களை அரவணைத்து செல்ல தான் தயாராக இருப்பதாகவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பே ‘என்னை கண்டு அச்சப்படாதீர்கள்’ என அவர் சிறுபான்மை மக்களின் ஆதரவை கோரியிருந்தார். தற்போது அதை செயற்படுத்தும் வகையில் பல விடயங்களை முன்னெடுப்பதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிகிறது.
எனினும் இனப்பிரச்சினை விடயத்தில் உடனடி தீர்வு காண முடியாவிட்டாலும் கூட சிறுபான்மையினர் ஆறுதலடையும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இராணுவத்தினர் வசமுள்ள மேலதிக காணிகளை விடுவித்தல் , தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்களை அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னராக ஓரளவேனும் முன்னெடுத்தால் சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் அதே வேளை அவர்கள் மத்தியில் தோன்றியுள்ள அச்சமும் களையப்படும் என்பது திண்ணம்.
- சிவலிங்கம் சிவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM