பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் நாட்கூலிகளாக இருந்து வருவதை அனுமதிக்க முடியாது. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு இம்மக்கள் நிலவுடைமைச் சமூகமாக மேலெழும்புவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வலுச்சேர்க்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்தல்களின் ஊடாக மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அரசியலுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த வகையில் கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இத்தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகி இருக்கின்றார். இத்தேர்தலில் பெரும்பான்மையினரின் வாக்குகள் ஒரு புறமாகவும் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்னொரு புறமாகவும் என்று பிரிந்து நிற்பதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. மலையக மக்களும் சஜித்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கி இருந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றிபெற்றிருக்கின்றார்.
ஜனாதிபதி கோத்தபாய சிறுபான்மை மக்கள் தமக்கு உரியவாறு வாக்களிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளபோதும் தமக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சமமான சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். மலையக மக்களின் பிரச்சினைகள் இந்நாட்டில் அதிகமுள்ளன. காணியுரிமை, வீட்டுரிமை, பொருளாதாரம், சுகாதாரம், அரச தொழில் வாய்ப்பு என்று இம்மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் கடந்த காலத்தில் கவனம் செலுத்தி இம்மக்களின் எழுச்சிக்கு உதவியது. இம்மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி மேலும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தது. இவ்வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க மலையக அரசியல்வாதிகள் உறுதிபூண வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் நாட்கூலிகளாகவே இருந்து வருகின்றனர். இது மிகவும் வேதனைமிக்க விடயம் என்பதோடு இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு இம்மக்கள் நிலவுடைமைச் சமூகமாக மேலெழும்புவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வலுச்சேர்க்க வேண்டும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளும், நாட்டு மக்களின் பிரச்சினைகளும் ஜனநாயக ரீதியில் தீர்த்து வைக்கப்படுதல் வேண்டும். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் அமைதிச் சூழலுக்கு வித்திடப்பட்டபோதும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதில் இன்னும் இழுபறி நிலைமைகளே இருந்து வருகின்றன. ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கும் இவ்விடயத்தில் பிரதிபலிக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது பதவிக் காலத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முற்படுதல் வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் நிலையில் மலையக மக்களுக்கும் உரியவாறு அதிகாரப் பகிர்வு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும். முறையான அதிகாரப் பகிர்வு இல்லாமை, நிர்வாக ரீதியான புறக்கணிப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தேசிய நீரோட்டத்தில் இம்மக்கள் இணைந்து கொள்வதில் சிக்கல் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதையும் மறந்து விடுதலாகாது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றும் விடயம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இவ்விடயம் குறித்தும் கவனம் செலுத்தி மலையக மக்களின் அபிவிருத்திக்கு வித்திட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM