(ஆர்.விதுஷா)
பொதுத்தேர்தல் தொடர்பான திகதி அறிவிக்கப்பட்டால் அதில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்த முன்னிலை சோஷலிச கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் குணரட்ணம் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையிலேயே போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் எமது கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அவ்வாறான அச்சுறுத்தல்களைக்கண்டு மீண்டும் நாம் பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிச கட்சி சார்பில் துமிந்த நாகமுவ போட்டியிட்டிருந்தார். புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவாகியுள்ளதையடுத்து கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் கேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
பொதுத்தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில், அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான தீர்மானம் பொதுத்தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்ட பின்னர் எடுக்கப்படும். அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையிலேயே தேர்தலில் களமிறங்குவோம். ஜனாதிபதி தேர்தலின் போது எமது கட்சியின் ஆதரவாளர்களே வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு மேலதிகமாக கணிசமான வாக்குகள் கிடைக்கப்பெறவில்லை. இனவாத ரீதியில் சமூகம் பிரிந்துள்ளது. அந்த வகையிலேயே கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு மாறாகவே வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு இடம் பெற்றுள்ளது. அதன் ஊடாக ஜனநாயக விரோத நிலைமை உருவாகலாம். ஆகவே, அதற்கு எதிராக மக்கள் சக்தியை ஒன்று திரட்ட வேண்டியது அவசியமானதாகும். அவ்வாறான இனவாத சூழ்நிலையில் சோஷலிசத்தை ஏற்படுத்துவதென்பது கடினமான விடயமாகும். ஆகவே சோசலிசத்தின் ஊடாக மக்கள் மத்தியில் ஏற்படும் இனவாதத்தை இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளோம். கடந்த காலங்களில் முதலாளித்துவ கட்சிகள் பல நாட்டை ஆட்சி செய்துள்ளன. அந்த கட்சிகளுக்கு தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளன.
30 வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் கூட இன்னமும் இனவாத நிலை சமூகங்களின் மத்தியில் காணப்படுகின்றது.அந்த இனவாத சக்திகள் ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் வலுப்பெற்றுள்ளன. ஆகவே இனவாதம் மற்றும் முதலாளித்துவத்தை இல்லாதொழிப்பதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து போராடுவதனூடாக சோஷலிசத்தை ஏற்படுத்த போராட வேண்டும்.
2012 இல் எமது கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எமக்கு எதிரான பல சக்திகளுடன் போராடவேண்டிய நிலைமை காணப்பட்டது. எமது கட்சியை சேர்ந்தோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுடைய ஆட்சியே மீண்டும் வந்துள்ளது. ஆயினும் அந்த சக்திகளை எதிர்கொண்டு இப்போது உறுதியான நிலையை அடைந்துள்ளோம். இந்நிலையில் மீண்டும் கோத்தபாய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் நிலைகள் ஏற்படினும் அதனைக் கண்டு பின்வாங்கப்போவதில்லை.
தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எதிராக எழும் பிரச்சினைகளின் போது அவர்களுக்காக குரல்கொடுக்கவும் அவர்களுடன் இணைந்து போராடுவதற்கும் தயாராகவுள்ளோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM