வினா - 1
ஏழு வருடங்கள் கணவன் மனைவியாக வாழாமல் பிரிந்து இருந்தால் அவர்களுடைய விவாகம் தானாகவே குலைந்துவிடுமா?
விடை:
இல்லை, இலங்கையில் விவாகம் ஒன்று குலையவேண்டுமானால் விவாகம் செய்தவரில் ஒருவர் இறந்தால் அல்லது நீதிமன்றத்தினால் விவாகரத்து கட்டளை வழங்கப்பட்டிருந்தால் ஒழிய வேறு எந்தவழியிலும் விவாகம் முடிவிற்கு வரமாட்டாது. ஆகவே ஏழு வருடம் மட்டுமல்ல அதற்கு மேற்பட்ட காலத்திற்கு இணைந்து வாழாமல் பிரிந்து வாழ்ந்தாலும் விவாகம் ரத்தாகாது.
வினா - 2
எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கணவன் மனைவிபோல் பல வருடம் வாழ்ந்து வருகிறார். 15 வயது, 10 வயது பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். தற்போது நீதிவான் நீதிமன்ற கட்டளைப்படி கணவன் எனக்கும் பிள்ளைகளுக்கும் மாதா மாதம் பராமரிப்பு பணம் செலுத்தி வருகிறார். நான் அவருக்கு விரோதமாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து விவாகரத்தை பெற்றால் அதன் பின்னர் அவர் எனக்கும் பிள்ளைகளுக்கும் செலுத்திவரும் மாதாந்த பராமரிப்பு பணத்தை அவர் செலுத்த வேண்டுமா?
விடை:
விவாகம் ஒன்று நடைபெற்று அதன்மூலம் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்வது சட்டத்தின் கீழாகும். ஆகவே நீதிமன்றம் விவாகரத்தை வழங்கினால் அதன் பின்னர் அவர் உங்களுக்கு பராமரிப்பு பணம் வழங்கத் தேவையில்லை. ஆனால் அதற்கு புறநடையுண்டு. அவை என்னவெனில் விவாகரத்து வழக்கில் கணவனின் சோர வாழ்க்கையின் காரணத்தால் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தால் மனைவிக்கு விவாகம் சம்பந்தமான நிரந்தர பிரிமனைப் பணத்தை நீதிமன்றம் வழங்கலாம். இதனை (PERMANENT ALIMONY) என அழைப்பர். ஆனால் பிள்ளைகளுக்கு அவர் தொடர்ந்தும் பிள்ளைகளின் படிப்புக்காக மற்றும் தேவைகளுக்காக மாதாமாதம் பராமரிப்பு பணத்தைச் செலுத்தவேண்டும்.
இதற்கு காரணம் என்னவெனில் மனைவி கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றாலும் பிள்ளைகளின் தகப்பன் அவரே. அவர் அந்த நிலையில் இருந்து என்றும் விடுபட முடியாது.
இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் கூறவேண்டும். விவாகரத்து பெற்ற தாய் வேறு ஒருவரை விவாகம் செய்திருந்தாலும் அவளுக்கு விவாகரத்துப் பெற்றவரால் குழந்தைகள் கிடைத்திருப்பின் அக்குழந்தைகளுக்கு மட்டும் தொடர்ந்தும் பராமரிப்பு பணத்தை கோரலாம். ஆனால் அவளுக்கு பராமரிப்பு கோரமுடியாது.
விவாகரத்தை எதிர்த்து கணவன் மேன்முறையீடு செய்துள்ளபோதும் மேன்முறையீடு நடைபெறும் காலத்திலும் பிள்ளைகளுக்கு பராமரிப்பு பணம் செலுத்த வேண்டும்.
வினா - 3
மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பராமரிப்பு செலுத்தாமல் தவிர்க்கும் சந்தர்ப்பங்கள் சட்டத்தில் உண்டா?
விடை:
1999 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பராமரிப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றம் வழங்குகின்ற பராமரிப்பு தொகையை ஒருவர் தொழில் ஒன்றில் இருக்கும் போதே செலுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதற்கு பதிலாக தொழில் புரியக்கூடிய சக்தி இருப்பின் அவர் கட்டாயம் பராமரிப்பு செலுத்தவேண்டும். எனவே வருமானம் இல்லை என்பது பராமரிப்பு கட்டளையை பாதிக்காது கட்டாயம் செலுத்தவேண்டும்.
வினா - 4
மனைவி சோர வாழ்க்கை வாழ்கிறார் என்பதை நீதிமன்றத்திற்கு நான் நிரூபித்தால் அவளுடன் வாழும் எனது குழந்தைகளின் பராமரிப்பை (CUSTODY) நான் நீதிமன்றத்திடம் கோரலாமா?
விடை:
மனைவி சோர வாழ்க்கை வாழ்வதை நிரூபித்தால் அவளிடம் இருந்து விவாகரத்தைக் கோர புருஷனுக்கு உரிமையுண்டு. அவர் அதனை நீதிமன்றத்தில் நிரூபித்தால் நீதிமன்றம் அவளுக்கு பராமரிப்பு பணம் செலுத்துமாறு கட்டளையிடாது. ஆனாலும் குழந்தைகளை தனது பராமரிப்பில் வைத்திருக்க நீதிமன்றத்தை தகப்பன் கேட்கலாம். நீதிமன்றம் நன்கு ஆராய்ந்து அதனை வழங்குவது உண்டு. அலரம்மா எதிர் நடராசா வழக்கில் பெண் குழந்தை தகப்பனது பாதுகாப்பில் வைத்திருக்க இடம் கொடுக்கப்பட்டது.
இன்னுமொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும்.
பராமரிப்பு பணத்தை பெறும் வழக்கு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பிள்ளை ஒன்றின் பாதுகாப்பை (Custody) மாவட்ட நீதிமன்றத்திலேயே கேட்க வேண்டும். ஆயினும் இரு பகுதியாரும் இணங்கிக் கொண்டால் பாதுகாப்பு வழக்கை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யாமல் நீதிவான் நீதிமன்றத்திற்கு இதனை எடுத்துக்கூறி சமாதானமான முறையில் இதனைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
இன்னும் சிலர் கேட்கின்ற வினா என்னவெனில், மாதா மாதம் பராமரிப்பு பணத்தை செலுத்தாமல் ஒரே தடவையில் சில இலட்சத்தைச் செலுத்தி மனைவியின் பராமரிப்பு வழக்கில் இருந்து தப்பலாமா? என்பதாகும். இருபகுதியாரும் நீதிமன்றமும் உடன்பட்டால் அதனைச் செய்யலாம். ஆனால் பிள்ளைகளுக்கு மாதம் தோறும் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு தொகையாக கொடுத்து தப்ப நீதிமன்றங்கள் இடம் கொடுப்பதில்லை. ஏனெனில் ஒரு குழந்தை பிள்ளையின் பராமரிப்பு பல வருட காலம் தகப்பனில் தங்கியுள்ளது. மேற்கல்வி கற்பதற்கு கூட தகப்பனே பணம் செலுத்தவேண்டும்.
சிலர் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற மனைவியின் குறையைச் சுட்டிக்காட்டி குழந்தைகளை பார்வையிட அனுமதிப்பதில்லை என்றும் நீதிமன்ற கட்டளைப்படி அவர்களை தான் அழைத்துவர இடம் கொடுப்பதில்லை என்றும் கூறி பிள்ளைகளுக்கு பராமரிப்பு பணத்தை ரத்துச்செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்பதுண்டு.
நீதிமன்றங்கள் இதற்கு ஒருபோதும் இணங்குவதில்லை. ஏனெனில் அம்மா செய்யும் தவறுக்கு பிள்ளைகள் தண்டனைக்கு ஆளாகக்கூடாது என்ற கொள்கையும் பராமரிப்பு சட்டத்தில் அடக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் இக்கோரிக்கையை பரிசீலிப்பதில்லை.
மேலும் கூறவேண்டியது என்னவெனில், கர்ப்பிணியாக இருக்கும் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை தனது சம்பந்தத்தால் உருவாகிய குழந்தை இல்லை என்று கூறி தாய்க்கும் குழந்தைக்கும் பராமரிப்பு பணத்தை செலுத்தமுடியாது என்று சிலர் கூறுவது உண்டு. பிறந்த குழந்தைக்கே பராமரிப்புப் பணம் கோரலாம். பிறக்கப் போகும் குழந்தைக்கு கோரமுடியாது.
சாட்சியல் சட்டத்தின் எடுகோளின்படி (114) ஒரு பெண் விவாகரத்து பெறாமல் இருக்கும்போது 280 நாட்களுக்கிடையில் குழந்தை பெற்றெடுத்தால் அக்குழந்தையின் தகப்பன் அவளது கணவன் என்றே சட்டம் ஊகம் கொள்ளும். ஆகவே மேலேயுள்ள இரண்டு காரணங்களையும் சலாலுக்கு உட்படுத்தி வெற்றி பெறுவது கஷ்டம்.
கணவனால் மனைவியின் பெயருக்கு மாற்றப்பட்ட காணி ஒன்றை மீண்டும் மனைவியினால் பெறமுடியுமா?
வினா - 5 சில பெண்கள் விவாகத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட காணி (சீதனமல்லாத) ஒன்றை கணவனின் வேண்டுகோளின் படி கணவனுக்கு மாற்றிக் கொடுக்கிறாள். பின்னர் கணவன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் வெளியே துரத்தி விடுகிறான். இச்சந்தர்ப்பத்தில் மனைவி அவ்வாறு மாற்றிக்கொடுக்கப்பட்ட காணியை கணவனிடம் இருந்து மீளப்பெறலாமா?
விடை:
மனைவியானவள் தனது சொந்தக் காணியை புருஷனுக்கு கொடை அளிக்கும்போது மிகக் கவனமாக அதனைச் செய்யவேண்டும். கட்டாயம் மனைவியின் சீவிய உரித்துக்குட்பட்டதாகவே கூறி அக்காணியை கையளிக்கவேண்டும். வங்கியில் இருந்து கடன்பெற வேண்டுமானால் அதற்கு சீவிய உரித்தை வைத்துக்கொண்டு காணியை எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற நியதி இல்லை. அதற்குப் பதிலாக அவள் கணவனின் கடனுக்கு பிணையாளியாக உறுதியைக் கொடுக்காமல் எழுத்திலான அனுமதியை வங்கிக்குக் கொடுக்கலாம்.
கடனைப் பெற்ற புருஷன் பின்னர் மனைவிக்குக் கொடுமை செய்து அல்லது வஞ்சித்து செயற்பட்டால் புருஷனுக்கு விரோதமான அன்பு, பட்சம், கருணை காரணமாகக் கொடுக்கப்பட்ட கொடை உறுதியை மீளப்பெற்றுத் தருமாறு வழக்கை தாக்கல் செய்யலாம். சீவிய உரித்துக்கு உட்பட்ட உறுதியை இவ்வாறு மீளப்பெற முடியாது.
தற்போது கொடையளித்த காணியை மீளப்பெறுதல் சம்பந்தமாக 2017 ஆம் ஆண்டு 5
ஆம் இலக்க சட்டம் என்ற ஒரு சட்டம் அமுலில் உள்ளது. “Revocation of irrevocable Deeds of gift on the Ground of Gross Ingratitude” என்பது அச்சட்டத்தின் பெயராகும்.
இச்சட்டத்தின் கீழ் நன்றியற்ற செயல் Ingratitude என்ற வழக்கெழு காரணத்தின் கீழ் இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இதற்கு பின்வரும் நிபந்தனைகள் உண்டு. “மீளப் பெறும் உறுதியான கொடை உறுதி கொடை பெற்ற வருக்கு 10 வருடங்களுக்கிடையில் எழுதப்பட்டு இருக்கவேண்டும்” மேலும் நன்றி கெட்ட செயல் வழக்கெழ காரணம் இரண்டு வருடங்களுக்கிடையில் ஏற்பட்டும் இருக்கவேண்டும்.” இந்நிபந்தனை முக்கியமாகும்.
ஆகவே கணவன் ஒருவருக்கு கொடை அளிக்கப்படும் காணியில் மனைவியின் சீவிய உரித்துக்கு என எழுதப்படாமல் மேலே கூறியபடி கொடை உறுதியை மனைவி எழுதிக்கொடுக்கலாம்.
வினா - 6. ஒரு காணி இரண்டு பகுதியாருக்கு வெவ்வேறு நாட்களில் விற்கப்படுகிறது. இக்காணிகளின் செல்லுபடியாகும் தன்மை பற்றி பின்னர் போட்டி ஏற்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வழக்கில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?
விடை: காணி ஒன்றை வாங்குபவர் தான் வாங்கிய அல்லது தனக்களிக்கப்பட்ட கொடையை காணிக் கந்தோரில் பதிவு செய்ய வேண்டும். அவ்வுறுதிகளில் சட்ட வலுக்கொண்டது எது? என்பது எவற்றைக் கொண்டு கவனிக்கப்படுகிறது? என்பதை முதலில் அறிய வேண்டும்.
போட்டிபோடும் உறுதிகளில் எந்த உறுதி சட்ட வலுக்கொண்டது என்பதைக் காண பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்.
1) உறுதிகள் இரண்டும் பெறுமதிமிக்க மதி பலனுக்கு விற்ற உறுதியாக இருக்க வேண்டும்.
2) அக்காணியின் மூல உறுதி பதியப்பட்ட இதழில் காணிக் கந்தோரில் பதியப்பட்டிருக்க வேண்டும்.
3) எதிர் உரித்து கொண்டு இருக்க வேண்டும்.
மேற்படி நிபந்தனைகளில் இரண்டு உறுதிகளில் எந்த உறுதி முதன் முதலாக காணிக் கந்தோரில் உரிய இதழில் பதியப்பட்டதோ அவ்வுறுதியே முன்னுரிமை கொண்டு விளங்கும்.
இரண்டு உறுதிகளில் ஒன்று மதிபலனுக்கும் (விற்றல் உறுதியாகவும்) மற்றையது கொடை (Gift) உறுதியாகவும் இருப்பின் நீதிமன்றம் ஏனைய விடயங்களையும் கவனித்து அவை எதிர் உரித்து கொண்டவையா? என பார்க்க வேண்டும்.
சில வேளைகளில் முதன் நிலை நீதிமன்றங்கள் இவற்றைக் கவனிப்பதில் தவறி விடுகின்றன. ஆகவே மேன்முறையீட்டில் இவற்றை திருத்தலாம். அதற்குரிய வழக்கை ஆராய்ந்தே தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்விடத்தில் ஒரு வினா எழுகிறது என்னவெனில், கட்டாயம் ஓர் உறுதி காணிக் கந்தோரில் பதிவு செய்யப்படவேண்டுமா? என்பதே அதுவாகும். இது கட்டாயம் அல்ல.
ஆனால், ஒரு காணிக்கு இரண்டு உறுதிகள் இருக்கும்போது அவற்றில் எந்த உறுதி பெறுமதியான மதிபலனுக்கும் உரிய இதழில் பதியப்பட்டும் இருந்தது எனக் காண்பது அவசியமாகிறது. அப்போதுதான் உரிய இதழில் பதிவு செய்யப்படாத உறுதியை ரத்துச்செய்யலாம் என்பதற்குத்தான் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
ஒரு காணிக்கு இரண்டு உறுதி
எப்படி எழுதப்படுகிறது?
பண்டா எதிர் அலித்தம்பி வழக்கில் (I5 NLR 177) ஆராயப்பட்டது. இவ்வழக்கில் தீர்க்கப்பட்டது என்னவெனில் மூலஉறுதியை பரீட்சிக்காமல் எழுதுவதாலும் பணத்திற்காக எழுவதும் நடைபெறுவதால் இந்நிலை ஏற்படுகிறது என்பது அவதானிக்கப்பட்டது.
ஜேம்ஸ் எதிர் கரோலிஸ் (17 NLR 76) ஆம் வழக்கில் நீதிமன்றம் பின்வரும் உதாரணத்தைக் காட்டியுள்ளது.
“இந்த வழக்கில் X என்பவர் தனது காணியை Y என்பவருக்கு விற்றார். X இறந்ததும் X ன் வழியுரிமையாளரான Z அந்தக் காணியை A என்பவருக்கு விற்றார். ஆனால் Y அந்த உறுதியை உரிய முறைப்படி காணிக் கந்தோரில் பதியவில்லை. உண்மையில் Z அந்தக் காணியை A என்பவருக்கு விற்பதற்கு முன்பே X என்பவர் அக்காணியை Y க்கு விற்று இருந்தார். ஆயினும் நீதிமன்றத் தீர்ப்பு பின்வருமாறு இருந்தது.
மேற்படி காணி X ன் வழியில் வந்தது. ஆகவே Y யின் உறுதியும் A யின் உறுதியும் உதிர் உரித்துக் கொண்டவையாக விளங்குகின்றன. A பெறுமதியான மதிபலனுக்கே காணியைப் பெற்றார் என்றும் Y யின் உறுதி முறைப்படி பதிவுசெய்யப்படவில்லையென்றும் A யின் உறுதி முறைப்படி உரிய இதழில் பதிவு செய்யப்பட்டபடியால் காணி A க்கு சொந்தம் என்றது.
மேல் உள்ள வழக்கின் தீர்ப்பில் இருந்து காணியை வாங்குபவர்கள் ஒரு விடயத்தைக் கவனத்தில் எடுக்கவேண்டும். உறுதியின் ஆரம்ப முதல் காணியை வாங்கும் வரையும் நடைபெற்ற உறுதிகளின் மாற்றத்தை ஆராய்ந்து பார்த்தே காணியை வாங்கவேண்டும். இல்லையேல் சிலவேளை காணியின் உரித்து இல்லாமல் போய்விடும்.
தொகுப்புரை
இன்று சாதாரணமாக சமூக வாழ்க்கையில் காணப்படும் பராமரிப்பு பற்றிய ஒரு சிறு கட்டுரையும் காணி சம்பந்தமான சிறு கட்டுரையும் எழுதியுள்ளேன். இவ்விரண்டு விடயமும் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் முக்கிய இடம்பெறுகின்றன. ஆகவே விவாகத்தையும் காணி வாங்குதலையும் மிக கவனமாகப் பரிசீலித்தே வாங்கவேண்டும். இல்லையேல் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும்.
- கே.ஜீ. ஜோன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM