(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப் பதிவுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில், தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த பணிகளில் 60 ஆயிரத்து 175 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் நேற்று, குறித்த பகுதிகளுக்கு கடமைக்காக சென்றுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
60175 பொலிஸாருக்கு மேலதிகமாக 3500 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேரடியாகவே பாதுகாப்பு உள்ளிட்ட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், எண்ணாயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம், வாக்கெண்ணும் பணிகளில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதனைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் வாக்களிப்பு நிலைய பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலன்புரி மற்றும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 8 அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் வாக்களிப்பு நிலையத்தின் தேவைக்கேற்ப அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லல் மற்றும் அங்கிருந்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லல், அதுசார்ந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்கு வரத்து போன்ற பணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5800 பஸ் வண்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
'இம்முறை 12856 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்துக்கும் இரு ஆயுதம் தரித்த பொலிஸார் வீதம் பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் அனைவரும் ஆண் உத்தியோகத்தர்களாவர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாக்களிப்பு நிலையங்களில் மட்டும் ஒரு ஆண் பொலிஸ் உத்தியோகத்தரும் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அதன்படி வாக்களிப்பு நிலையத்தின் பாதுகாப்புக்கு மட்டும் 25 ஆயிரத்து 712 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அனைத்து வக்களிப்பு நிலையங்களையும் கண்காணிக்கும் வண்ணம் 3043 ரோந்து குழுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஒரு பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரியும் ஒரு சார்ஜன்ட் அல்லது கான்ஸ்டபிலும் இரு சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்கியிருப்பர். அதன்படி ரோந்துப் பணியில் 6086 பொலிஸாரும் சிவில் பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் 43 வாக்கெண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்தினதும் பாதுகாப்புக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அல்லது பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு வாக்கெண்ணும் நிலையத்தில் 5 பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரிகள், 5 சார்ஜன்கள், 40 கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அதன்படி வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்புக்கு மட்டும் மொத்தமாக 2193 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களை மையப்படுத்தி 153 கலகத் தடுப்புக் குழுக்கள் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளன. இதில் 54 குழுக்கள் பூரண கலகத் தடுப்புக் குழுக்களாகவும் 99 குழுக்கள் அரை கலகத் தடுப்பு குழுக்களாகவும் செயற்படும்.
பூரண கலகத் தடுப்பு குழுவொன்றில் ஒரு பொலிஸ் பரிசோதகர், ஒரு சார்ஜன்ட், 8 கான்ஸ்டபிள்கள் இருப்பர். அரை கலகத் தடுப்பு குழுவில் ஒரு பரிசோதகர், ஒரு சார்ஜன்ட் மற்றும் 5 கான்ஸ்டபிள்கள் இருப்பர். அதன்படி கலகத் தடுப்பு பணிகளில் மட்டும் 1233 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது நாட்டில் 137 நிரந்தர வீதிச் சோதனை சாவடிகளை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றுக்கு மேலதிகமாக புதிதாக 190 வீதிச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி வீதிச் சோதனை சாவடி கடமைகளில் மட்டும் 1688 பொலிஸாரும் 190 சிவில் பாதுகாப்பு படையினரும் கடமையாற்றவுள்ளனர்.
இதனைவிட பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமையில் இருக்கும் பொலிஸாரின் நலன்புரி நடவடிக்கைகளை கண்காணிக்க தனியான குழுவும் தேர்தல்கள் முறைப்பாடுகளை பெற, விசாரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தனியான உத்தியோகத்தர்களும் உளவுத் தகவல்களை சேகரிக்க தனியான படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM