(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்றவராக இருந்துள்ளார்.
இந்த தவறை திருத்தும் முகமாகவேனும் அவரை நீதிமன்றுக்கு அழைக்கும் அழைப்பாணை ஒன்றினை அச்சமற்ற நீதிவான் என்ற வகையில் பிறப்பிக்க வேண்டும்' என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று கோட்டை நீதிமன்றில் கோரினார்.
எவ்வாறாயினும் கரன்னாகொடவை கைது செய்வதை உயர் நீதிமன்றம் தடுத்திருந்த நிலையில், அந்த தடை உத்தரவை மீறி தன்னால் செயற்பட முடியாது என சுட்டிக்காட்டிய நீதிவான், அவரை நீதிமன்றுக்கு அழைப்பாணை ஊடாக இந்த சந்தர்ப்பத்தில் அழைக்க சட்டத்தில் நேரடியாக எந்த வசதிகளும் இல்லை என்பதால் அக்கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்தார். எனினும் குற்றப் பத்திரிகையை கையளிக்க வசந்த கரன்னாகொடவை மேல் நீதிமன்றுக்கு அழைக்கும் போது அவருக்கு எதிராக அச்சமற்ற தீர்மானம் ஒன்றினை எடுக்க முடியும் எனவும் அந்த பொறுப்பை மேல் நீதிமன்றத்திடமே விடுவது சிறந்தது என தான் கருதுவதாகவும் கோட்டை நீதிவான் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கொழும்பில் 5 மாணவர் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கடற்படை உறுப்பினர்களுக்கு எதிராக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா விஷேட ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று அறிவித்தார்.
பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இந்த ஆலோசனை நேற்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த விவகாரம் குறித்த நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நேற்று கோட்டை நீதிமன்றில் இடம்பெற்றது.இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆஜரானதுடன், அவர் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக அறிக்கையினை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரசிக பாலசூரிய உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகினர்.சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவும் ஆஜராகினர்.
இந் நிலையில் மன்றில் ஆஜராகிய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,
'இந்த விவகாரத்தில் நீதிவான் நீதிமன்றைப் பொறுத்தவரை கைதானோர் 17 பேர். அதில் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூவர் கொண்ட ட்ரயல் அட்பார் ஒன்றினை நிறுவவும் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே 17ஆவது சந்தேகநபரான உபுல் பண்டாரவுக்கு நிபந்தனை மன்னிப்பளித்து அவரை அரச சாட்சியாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மூன்றாவது சந்தேகநபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேகநபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார். அது குறித்து அவர்களது விருப்பத்தை பெற விஷேட விண்ணப்பம் வழங்கப்படுவதுடன் அதனை அவர்கள் பூர்த்தி செய்து இன்றே (நேற்று) சட்ட மா அதிபருக்கு வழங்க வேண்டும்.
இதேவேளை தற்போது 14 பேரை பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் கருதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள பின்னணியில் அவர்களுக்கு எதிராக மேல் நீதிமன்ற வழக்கின் ஆரம்பத்தின் போது, அவர்களது பிணை தொடர்பில் கடுமையான நடவடிக்கையை எடுக்க சட்ட மா அதிபர் தற்போதும் தீர்மானித்துள்ளார்.
விஷேடமாக இங்கு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாெகாட இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராவார். அவருக்கு படுகொலை, பலாத்காரமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட பிரபல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனைவிட அவருக்கு எதிராக சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் விஷேட குற்றச்சாட்டும் உள்ளது. அப்படிப்பட்ட அவரை கைது செய்ய முடியவில்லை. அவர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் வழங்கப்பட்ட, அவரை கைது செய்வதற்கான தடை உத்தரவால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு பொலிஸாருக்கானது. அப்போது அவர் சந்தேகநபர். எனினும் இப்போது நிலைமை வேறு. அவர் பிரதிவாதி. அவருக்கு எதிராக செயற்பட சட்ட மா அதிபருக்கு எந்த தடையும் இல்லை. அதனால் அவரை மன்றில் ஆஜராக அழைப்பாணை விடுக்கவும்' என்றார். இதன்போது நீதிவான் ரங்க திஸாநாயக்க, எந்த சட்டப் பிரிவின் கீழ் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுப்பது என கேள்வி எழுப்பினார் அத்துடன், 'உயர் நீதிமன்றின் கைதை தடை செய்த உத்தரவின் நோக்கம் அவர் கைதானால் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்பதாகும். அப்படியானால் நான் அழைப்பாணை விடுத்து அவர் மன்றுக்கு வந்தாலும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதை தவிர எனக்கு வேறு உத்தரவு கொடுக்க முடியாது. அப்படியானால் உயர் நீதிமன்றின் தடை உத்தரவை நான் வேறு ஒரு வகையில் மீறுவதாக அது அமையும் அல்லவா? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சட்டத்தை அமுல் செய்வதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு மட்டும் சட்டத்துக்கு அப்பால் சென்று விஷேட சலுகையை அனுபவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுவதை ஏற்க முடியாது என்றார்.இதன்போது நீதிவான் அவரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவு சட்டத்துக்கு உட்பட்டதே எனவும் அதை உயர் நீதிமன்றம் விடுத்துள்ளதையும் ஞாபகப்படுத்தினார்.எவ்வாறாயினும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கரன்னாகொடவுக்கு மட்டும் சிறப்பு சலுகை இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ளதாகவும், தவறான அந்த நடவடிக்கை திருத்தப்பட வேண்டும் என்பதற்காக அவரை மன்றுக்கு அழைக்குமாறும் கோரினார்.இந் நிலையிலேயே அவரை மன்றுக்கு அழைக்க சட்ட ஏற்பாடுகள் தற்போதைய சூழலில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அக்கோரிக்கையை நீதிவான் நிராகரித்து, மேல் நீதிமன்றம் ஊடாக அதனை சரி செய்ய ஆலோசனை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM