இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்குகின்றமை முக்கிய விடயமாகும். வடக்கு மக்கள் சஜித்துக்கு முழுமையாக வாக்களிப்பார்கள் என்று அந்த தரப்பு நம்புகின்றது. ஆனால் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள். தமிழ்க் கூட்டமைப்பு என்ன கூறினாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆதரிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய குறுகிய நேர செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
செவ்வி வருமாறு,
பிரசாரப் பணிகள் எவ்வாறு அமைந்தன? உங்கள் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கின்றது?
பதில்: எமது வேட்பாளருக்காக பலரும் பல வழிகளில் உழைத்து வருகின்றனர். நான் 24 மணிநேரமும் பதுளை மாவட்டத்தில் கோத்தாவின் வெற்றிக்காக செயற்பட்டு வருகின்றேன். என்னை பொறுத்தவரையில் பதுளை மாவட்டத்தில் கோத்தாவின் வெற்றி உறுதியாகிவிட்டது. பதுளை மாவட்டம் தொடர்பில் வழமையாக வித்தியாசமான பார்வை இருக்கும். ஆனால் இம்முறை பதுளை மாவட்டத்தில் கோத்தாவின் வெற்றி உறுதி என்பதனை நான் கூறுகின்றேன்.
சுதந்திரக் கட்சி கோத்தாவுக்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானம் மக்களினால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது?
பதில்: அதுவொரு சிறந்த தீர்மானமாகும். அதனை நான் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தேன். இது வெற்றிகரமாக அமையும். அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்குகின்றமை முக்கிய விடயமாகும். வடக்கு மக்கள் சஜித்துக்கு முழுமையாக வாக்களிப்பார்கள் என்று அந்த தரப்பு நம்புகின்றது. ஆனால் மக்கள் அவர்களை புறக்கணிப்பார்கள். வடக்கில் பலர் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு என்ன கூறினாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆதரிக்கமாட்டார்கள்.
கிழக்கின் நிலை?
பதில்: கிழக்கு மாகாணத்தில் நான் மூன்று கூட்டங்களில் பங்கேற்றேன். அங்கு மக்கள் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக எனக்கு தெரியவில்லை. மிக முக்கியமாக கிழக்கில் உள்ள தமிழ் கத்தோலிக்க மக்கள் கோத்தபாயவுக்கே வாக்களிப்பார்கள்.
சுதந்திரக் கட்சி கோத்தாவை ஆதரித்தாலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சஜித்தை ஆதரிக்கின்றாரே?
பதில்: அந்த ஆதரவு ஒரு சதம் கூட தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதனை தெளிவாக கூறுகின்றேன்.
கோத்தபாய வேட்பாளராக வருவதில் ஆரம்பத்தில் உங்களுக்கு தயக்கம் இருந்தது. இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: கோத்தபாய ராஜபக் ஷ சிறந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராக வலம் வருவதை நான் காண்கின்றேன். அவர் மிக விரைவாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். நான் கூட ஆரம்பத்தில் சமல் ராஜபக் ஷ வந்தால் சிறந்ததாக இருக்கும் என்று கருதினேன். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் கோத்தபாய ஒரு சிறந்த ஜனாதிபதி வேட்பாளராக செயற்பட்டிருக்கின்றார்.
கோத்தபாய ஒரு இராணுவ அதிகாரியாக இருந்தவர். பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். எனினும், அவர் மிக விரைவாக ஒரு ஜனாதிபதி வேட்பாளராக மாறியிருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் இவ்வாறான மாற்றம் ஒன்றை காணவில்லை. அந்தத் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர் எவ்வாறு பேசினார் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய வெற்றிபெற்றதும் ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும். அந்த இடைப்பட்ட காலத்துக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் கோத்தபாயவை நன்றாக புரிந்துகொள்வார்கள். இம்முறை தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரைப்போன்று கோத்தபாய ஆவேசமாக பேசவில்லை. அவர் தனது திட்டங்கள் பற்றியே பேசுகின்றார்.
கோத்தபாய வென்றால் அரசியல் தீர்வு கிடைக்குமா?
பதில்: புதிய அரசியலமைப்பு மற்றும் மாற்றங்கள் குறித்து கோத்தபாய தனது கொள்கை பிரகடனத்தில் பேசியிருக்கின்றார். அதாவது பாராளுமன்றத்துக்கு உள்ளே வெளியே இருக்கும் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களைக்கொண்டு அரசியலமைப்பை தயாரிப்பதாக கோத்தபாய கூறியுள்ளார். இதனையே தான் கூட்டமைப்பும் கேட்கிறது. ஆனால் கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவளிப்பதாக கூறுகிறது.
கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில்?
பதில்: இம்முறை தேர்தலில் கோத்தா வெற்றிபெற்ற பின்னர் வடக்கு மக்கள் தமிழ்க் கூட்டமைப்பை நிராகரிப்பார்கள். அதன்பின்னர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாற்று கட்சி ஒன்றை தமிழ் மக்கள் நாடுவார்கள். அந்த மாற்றுக் கட்சி மிதவாத கட்சியாக இருக்கவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக செயற்படவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்காகவே செயற்படுகிறது. இது மக்களுக்கு விளங்கிக்கொண்டு வருகின்றது. அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் எதிர்காலம்?
பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வகிபாகம் தொடரும். கோத்தபாய ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன அங்கம் வகிப்பார்.
உங்களுடைய எம்.பி. பதவி அவருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றதே? அப்படி ஏதாவது டீல் பேசப்பட்டுள்ளதா?
பதில்: நான் எந்தவொரு டீல் பேசும் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என்று கருதினால் அதற்காக சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வந்தால் எனது இடத்தை அவருக்கு வழங்க நான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM