புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி எடுத்துள்ள முடிவினை வழமைபோன்றே இனவாத கண்ணோட்டத்துடன் பிரசாரப்படுத்துவதற்கு எதிரணியினர் முனைந்து வருகின்றமை கண்கூடாக தெரிகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளான புௌாட், ரெலோ ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டமைப்பில் இறுதி முடிவினை அறிவிப்பதற்கான பொறுப்பு அதன் தலைவர் இரா. சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில்தான் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை இனவாத சாயம் பூசி விமர்சிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அந்த முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க உட்பட பலரும் இந்த தீர்மானம் தொடர்பில் இனவாத பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு என்று மிகத் தெளிவாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு திடீரென சஜித்தை ஆதரிக்க ஏகமனதாக தீர்மானித்துள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு சஜித் பிரேமதாஸ அடிபணிந்துவிட்டதாக மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருக்கின்றார்.
தமிழரசுக்கட்சியினர் அவர்களுக்கு சாதகமான விடயங்கள் ஏதாவது இல்லாவிட்டால் சஜித்தை ஆதரித்திருக்கமாட்டார்கள் என்று மஹிந்த சமரசிங்கவும் கூறியிருக்கின்றார்.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் இனவாத பிரசாரத்தை மேற்கொண்டு அரசியல் சுயலாபத்தை அடையலாம் என்ற வகையிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவே தெரிகின்றது. எமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கடந்த கால தேர்தல்களின் போதும் இத்தகைய செயற்பாடுகளில் இனவாத சக்திகள் ஈடுபட்டு வந்தமையே வரலாறாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் முயன்று வந்தனர். பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.யுடன் கோத்தபாய ராஜபக் ஷ இருதடவைகள் கலந்துரையாடியிருந்தார். பழையனவற்றை மறந்து தமக்கு ஆதரவு தரவேண்டியதன் அவசியம் குறித்து இவர்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தார்.
இதேபோன்றே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட பலரையும் சந்தித்து பேசியிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அங்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இவ்வாறு இரு தரப்பினருமே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சி எடுத்திருந்தனர். தமிழ் கட்சிகள் தமக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதில் இருதரப்புமே பேரவா கொண்டிருந்தது. ஆனாலும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானித்தவுடன் அந்த தீர்மானத்தை இனவாத பிரசாரத்திற்கு உட்படுத்த முயல்வது அரசியல் சுயநலத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. எட்டாத பழம் புளிக்கும் என்ற நிலைப்பாட்டிலேயே எதிரணி உள்ளதாகவே கருதவேண்டியிருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் கட்சிகள் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டும் என்ற வலியுறுத்தல் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு தமிழ் கட்சிகள் வந்து அதனடிப்படையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுக்களை நடத்தி தீர்மானம் எடுக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆறு தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதுடன் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் 13 அம்ச திட்டவரைபொன்றையும் தயாரித்திருந்தனர். அந்த வரைபு தொடர்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்திற்கு வருவது என்றும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டவரைபு தொடர்பான செய்திகள் வெளியானவுடன் அதனை இனவாத கண்ணோட்டத்துடன் பிரசாரப்படுத்த தென்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எதிரணியின் முக்கியஸ்தர்கள் இந்த செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் 13 அம்ச திட்டங்கள் தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாரில்லை என்றும் அந்த திட்டங்கள் நாட்டை பிளவுபடுத்தும் என்றும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் அறிவித்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் மௌனம் காத்துவந்தார். எவரது நிபந்தனைகளுக்கும் தான் அடிபணியப்போவதில்லை என்று அவர் பொதுப்பட கூட்டங்களில் உரையாற்றி வந்தார். ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளும் எதிர்பார்த்ததைப் போன்று இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட முன்வராததையடுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையினை எடுப்பது என்பது குறித்து ஐந்து தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஆராய்ந்திருந்தனர். ஆனால் அந்த விடயத்தில் இவர்களுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி. விக்கினேஸ்வரன் தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத்தில் கொண்டும் வேட்பாளர்களின் செயற்பாடுகளை கருத்தில் எடுத்தும் இந்த முடிவுக்கு தாம் வந்துள்ளதாக தமிழரசுக்கட்சி அறிவித்திருக்கின்றது.
உண்மையிலேயே தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து பேச்சுக்களை நடத்த முயன்றபோது அதனை இனவாத கண்ணோட்டத்துடன் அணுகியவர்கள் இன்று தமிழரசுக்கட்சி தீர்மானத்தை எடுத்தவுடன் அதனையும் இனவாத பிரசாரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை இத்தகையவர்கள் எதிர்காலத்திலாவது தீர்த்து வைப்பார்களா என்ற சந்தேகம் மேலெழுகின்றது.
இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கோதாவில் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளமை கவலைக்குரிய விடயமாக உள்ளது. கடந்த பல தேர்தல்களிலும் இத்தகைய இனவாதமும் மதவாதமும் தலைவிரித் தாடியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து வருவது நாட்டில் நல்லிணக்கத்திற்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை. தேர்தல்களில் வேண்டுமானால் இனவாதத்தை கிளப்பி குறுகிய கால நன்மைகளை அடைய முடியுமே தவிர அது எந்தவகையிலும் நாட்டுக்கு நன்மை அளிக்கப்போவதில்லை.
எனவே இதனை உணர்ந்து தென்பகுதி அரசியல் கட்சிகள் இனியாவது செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பு கின்றோம்.
(06.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM