தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அச்சுறுத்துகின்ற செயற்பாட்டைநீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கஃபே) வன்மையாக கண்டிக்கின்றது.
கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (31.10.2019) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
''அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே மற்றும் வைத்தியர் நவீன் டி சொய்சா ஆகிய இருவரும் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எந்தவகையிலும் பக்கச்சார்பாக செயற்படாத அமைப்புகளாகவே உள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கின்றபோது அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் முன்வருகின்றன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகத்தர்கள், ஆளுநர்கள் உட்பட பல அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபடுவதாக எங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
அவ்வாறான முறைப்பாடுகளை நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மீள முறைப்பாடு செய்து வருகின்றோம். ஆளுநர் உட்பட சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுவான தேர்தல் சட்டதிட்டங்களிலிருந்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மாத்திரம் விலகிச் செல்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.
தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உரிமை இருந்தாலும், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வதற்கு தேர்தல் சட்டத்தில் இடமில்லை. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஒருபோதும் முன்வர மாட்டாதென்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பதே தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பொறுப்பாக இருக்கின்றது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரையான காலப்பகுதியில் கஃபே அமைப்பிற்கு 554 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM