(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 21 மாவட்டங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் சேதமடைந்துள்ள வீடுகளின் நிர்மாணப்பணிகளுக்காக அரசாங்கத்தால் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 25 மாவட்டங்களிலும் முப்படையினரை உள்ளடக்கிய அவசர அனர்த்த முகாமைத்துவக் குழு பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவின் மூலம் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
காலநிலை
இதன்போது காலநிலை அவதான நிலைய எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் அனோஷ வர்ணகுலசூரிய தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களாக தெற்கிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எதிர்வரும் தினங்களில் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும். மேலும் அநுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். எனினும் இன்றிலிருந்து தெற்கில் மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
தற்போதுள்ள நிலைவரத்தின் அடிப்படை யில் தேர்தல் காலத்தில் அடை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனினும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையுடனான காலநிலை நீடிக்கலாம்.
நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் மழையுடனான காலநிலை குறைவடையக் கூடும். காலநிலையானது 24 மணித்தியாலங்களிலும் மாற்றமடையலாம். எனவே தேர்தல் காலத்தில் எவ்வாறான காலநிலை நிலவும் என தற்போது உறுதியாகக் கூற முடியாது.
கங்கைகளின் நீர்மட்டம்
கங்கைகளின் நீர் மட்டத்தை அவதானிக்கும் போது நில்வள கங்கையின் நீர்மட்டம் மாத்திரமே அதிகரித்த போக்கைக் காண்பிக்கிறது(நேற்றுப் புதன்கிழமை மாலை வரை). அம்பாந்தோட்டை, அநுராதபுரம், பதுளை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சில ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
மண்சரிவு
பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டங்களில் மணி சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்கள் தற்காலிகமாக பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம்
தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதிராஜ தெரிவிக்கையில்,
இம்மாதம் 10ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் வெள்ளம், அடை மழை, பலத்த காற்று மற்றும் மண் சரிவால் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம் மாவட்டங்களில் 13,135 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இது வரையில் 9 உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் 20 வீடுகள் முற்றாகவும், 1193 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
9101 பேர் 30 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கம்பஹா, புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு அவசர நிவாரணம் அல்லது உதவிகளை வழங்குவதற்காக 3.8 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
குருணாகல், புத்தளம், களுத்துறை, மாத்தறை, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக ரூ. 5.2 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
சுகாதார ஏற்பாடுகள்
சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் எச்.டி.பி.ஹேரத் தெரிவிக்கையில்,
சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து மாவட்ட, பிரதேச சுகாதார பணிப்பாளர்களால் மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் எந்த மாவட்டத்திலும் இது வரையில் பாரியளவிலான சுகாதாரப் பிரச்சினைகள் எவையும் பதிவாகவில்லை. எம்மால் இனங்காணப்படாமல் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் 117 என்ற எமது அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை மேற்கொண்டு தெரிவிக்க முடியும்.
அத்தோடு தற்போது டெங்கு நோய் பரவலும் அதிகரித்து வருகிறது. எனவே டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்க வேண்டாம் என்று மக்களிடம் கோருகின்றோம். சிறியளவில் சுகவீனம் ஏற்பட்டாலும் வைத்தியசாலை சென்று உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்தலின் போது
தேர்தலின் போது எதிர்பாராத விதமாக மக்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்திருக்கிறது. அதற்கமைய வாக்களிப்பு நிலையங்கள் வெள்ளம் அல்லது ஏதேனுமோர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கான முன்னாயத் தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM