ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பாரிய வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற சூழலில் தற்போது தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க களமிறங்கியுள்ள தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
அடுத்த ஐந்து வருடங்களுக்கு தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லப்படும் என்றும் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும் என்றும் பிரதான வேட்பாளர்கள் தமது விஞ்ஞாபனங்களில் வாக்குறுதி வழங்குவார்கள். வேட்பாளர்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார கொள்கைத் திட்டங்கள் இந்த விஞ்ஞாபனங்களூடாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.
இந்தநிலையில் இந்த நாட்டில் புரையோடிப் போய்க் காணப்படுகின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பிரதான கட்சிகளின் அணுகுமுறை என்ன என்பது தொடர்பான தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. தமிழ் பேசும் மக்கள் இந்த தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் பிரதான வேட்பாளர்களிடம் தெளிவானதொரு நிலைப்பாட்டை எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையிலேயே முன்வைக்கப்படவுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த அரசியல் தீர்வு தொடர்பான விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது தொடர்பில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் முன்வைக்கின்ற யோசனைகள், அணுகுமுறைகள், கொள்கைத் திட்டங்கள் என்பன தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் நேரடி யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மாறாக புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்று அதில் வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பத்துறை, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக் ஷவின் கொள்கைப் பிரகடனம் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது. எனினும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெளிவான விடயம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதாவது நாட்டின் ஒற்றையாட்சி முறை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் அனைத்து கட்சிகளினதும் உள்ளடக்கத்துடனான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை, மத சுதந்திரம், அடிப்படை மனித உரிமை ஆகியவை அரசியலமைப்பின் முக்கிய பகுதிகளாக இருக்கும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகாணசபை முறைமை மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று கோத்தபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தனது ஆட்சிக் காலத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும். அதற்கான பொறிமுறை என்ன, எந்தத் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் போன்ற விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை ஆளும் கட்சியின் பிரதான ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் புதன்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வாறான அணுகுமுறையை முன்வைப்பார் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனங்களில் அரசியல் தீர்வு தொடர்பாக முன் வைக்கப்படும் யோசனைகள் மிகவும் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.
விசேடமாக இரண்டு பிரதான கட்சிகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டே யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதான தமிழ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான ஐந்து தமிழ் கட்சிகளும் இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆரய்ந்து பார்த்துவிட்டு விரைவில் தமது தீர்மானங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு அணுகுமுறையைப் பின்பற்றி நியாயமான மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய ஒரு தீர்வுத் திட்டம் காணப்படவேண்டியது அவசியமாகும். தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று அவசியம் இல்லை என்று எந்தவொரு வேட்பாளரும் கருதிவிடக் கூடாது. தமிழ் பேசும் மக்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து தமக்கான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
வடக்கு, கிழக்கில் தமது அரசியல் அபிலாஷைகள் பூர்த்திசெய்யக்கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவுள்ளது. கடந்த காலங்களில் இந்த அரசியல் தீர்வை வலியுறுத்திய போராட்டங்கள் பல வடிவங்களைப் பெற்ற போதிலும் அவை சரிவுகளை சந்தித்தபோதிலும் தமிழ் மக்களின் அந்த கோரிக்கை நீடித்து வருகின்றது. இதனை இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அபிவிருத்தி மற்றும் பௌதீக வளப் பிரச்சினைகளை மட்டும் தீர்த்துவிட்டால் போதும், அரசியல் தீர்வு அவசியமில்லை என்று எந்த வேட்பாளரும் கருதிவிடக்கூடாது. இரண்டு வேட்பாளர்களில் யார் வெற்றிபெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியானாலும் அரசியல் தீர்வுத் திட்டத்தை காணும் விடயத்தில் தமது பொறுப்பிலிருந்து விலகி செயற்பட முடியாது. யார் வெற்றி பெற்றாலும் யார் அடுத்த 5 வருடங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியானாலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை புறக்கணிக்க முடியாது. அதற்கான தீர்வு யோசனைகள் முன்னெடுக்கப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
மாறாக வரலாறு முழுவதும் இடம்பெற்றதைப் போன்று தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினையை இழுத்தடித்துக்கொண்டு செல்லலாம் என யாரும் எதிர்பார்க்க முடியாது. தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் என பரவலாக நம்பப்பட்டது. அதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவை வழங்கி வந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தைக் காப்பாற்றி தூக்கி நிறுத்தியது. எனினும் இறுதியில் கூட்டமைப்பின் அந்த விட்டுக்கொடுப்புகளும் முயற்சிகளும் வீணாகிப் போனதே தவிர தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே அடுத்த ஆட்சியிலும் இவ்வாறான பாதக நிலைமைகள் நீடிக்கக்கூடாது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நியாயமான மற்றும் அவர்களது அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யக்கூடிய அரசி யல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியது மிகவும் அவசி யமானதும் பொறுப்புமிக்கதுமாகும் என்பதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் புரிந்துகொண்டு செயற்படுவது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(28.10.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM