(எம்.மனோசித்ரா)
தீபாவளி முற்பணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிகமாக 5000 ரூபாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தும், தேர்தல்கள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்திருந்தும் இன்னமும் அந்த கொடுப்பனவு வழங்கப்படாமல் தாமதமாகின்றமைக்கான காரணம் என்ன என்று தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கேள்வியெழுப்பியிருக்கிறது.
அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் இயலாமையின் வெளிப்பாடே இலங்கை தொழிலாளர் மீது சாட்டப்படும் பொய் குற்றச்சாட்டு என்றும் இ.தொ.க விசனம் தெரிவித்திருக்கிறது.
கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிலாளர் காங்ரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தீபாவளி முற்பணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படவிருந்த 5000 ரூபாவை வழங்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்ரஸ் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த மக்களுக்கு உடனடியாக மேலதி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாவை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வந்த போது , மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் 15,000 ரூபாவினைப் பெற்றுத் தருவதாகக் கூறினார். இதற்கான நடவடிக்கைகள் பெருந்தோட்டத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டது. தேயிலை சபையின் ஊக்குவிப்பு மற்றும் விற்பனை நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு மேலதிகமாக 5000 ரூபாவினை வழங்குவதற்கு 500 மில்லியன் ரூபா கடனாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த தொகையை வட்டியுடன் பெற்றுக் கொள்வதற்கு எந்தெந்த கம்பனிகள் விண்ணப்பிக்கின்றனவோ அவற்றுக்கு இந்த தொகையை பகிர்ந்தளிக்க கூடிய வகையில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டிருந்தது. எனினும் முதலில் அந்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 21 ஆம் திகதி நிபந்தனைகளுடன் மீண்டுமொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டு அதற்கு 22 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது.
தற்போது இலங்கை தொழிலாளர் காங்ரஸ் , சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி , மேலதிகமாக வழங்கப்படவிருந்த 5000 ரூபாவை வழங்கவிடாமல் தடுத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பானதாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வாறு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணக்கம் தெரிவித்திருக்கிறது.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் , ' இம் மாதம் 21 ஆம் திகதி பெருந்தோட்டத்துறை அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு தெரிவிக்காது ' என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எமது கட்சி தொழிலாளர்களுக்கு யார் நன்மை செய்தாலும் பேதமின்றி அதனை வரவேற்கும். எனவே இந்த 5000 ரூபா தீபாவளி முற்பண மேலதிக கொடுப்பனவிற்கு எந்த சந்தர்ப்பத்திலும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
கடந்த 21 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் இன்னும் குறித்த தொகை வழங்கப்படாமல் தாமதமாக்கிக் கொண்டிருக்கின்றமைக்கு என்ன காரணம் என்பதே எமது கேள்வியாகும். எவ்வாறிருப்பினும் வாழ்வாதாரத்தில் வறுமையிலிருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபா உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையுமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM