(நா.தனுஜா)
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி மாத்திரமல்ல, மாறாக முழு நாட்டினதும் வெற்றியாகும். ஆனால் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்றால் அது அவருடையதும், மஹிந்த ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ மற்றும் நாமல் ராஜபக் ஷ உள்ளடங்கிய தனியொரு குடும்பத்தின் வெற்றியாக மாத்திரமே அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாலத்துறை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அலுவலகத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகக் களமிறங்கவில்லை. மாறாக புதிய ஜனநாயக முன்னணியின் ஊடாகவே களமிறங்கியிருக்கின்றார். எனவே இத்தேர்தல் எமக்கு மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புபடாதோருக்கும் மிகவும் முக்கியமானதாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து மஹிந்த ராஜபக்ஷவையும், அவருடைய குடும்பத்தையும் புறக்கணித்தவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் அல்ல. அதில் பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்கள் உள்ளடங்கியிருந்தார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த போதிலும் எம்மால் சிறுபான்மை தேசிய அரசாங்கம் ஒன்றையே அமைத்துக்கொள்ள முடிந்தது. அந்த அரசாங்கம் உடைந்து அழிந்து போகும் என்றும், மீண்டும் மஹிந்தவின் கைகளுக்கே ஆட்சி போய்விடும் என்றும் பலர் கூறினார்கள். ஆனால் அந்த அரசாங்கத்தில் காணப்பட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாம் நாட்டை முன்நிறுத்திப பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தோம்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தினோம். தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கினோம். உள்ளுராட்சிமன்றங்களில் 25 சதவீத பெண் பிரிதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கினோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவினோம். அதனூடாக பொலிஸார் அரசியல்வாதிகளின் கட்டளைகளின் பிரகாரமன்றி, சட்டத்தின் பிரகாரம் செயற்படக்கூடிய நிலையேற்பட்டிருக்கிறது. அதேபோன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினர் சில நியமனங்களை தேர்தல் முடிவடைந்த பின்னர் வழங்குமாறு எம்மிடம் கூறுமளவிற்கு அவர்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இத்தகைய ஜனநாயகமும், சுயாதீனத்துவமும், சுதந்திரமும் கடந்த காலத்தில் இருந்ததா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வீடுகளுக்கு வெள்ளை வான் வந்தது. ஆரோக்கியமாக இருப்பவர்களை அதிலே ஏற்றிச்சென்று உயிரைப் பறிக்கும் நிலையிருந்தது. ஆனால் தற்போது எமது ஆட்சியில் 'சுவசரிய' என்ற வெள்ளை வான் வருகின்ற போதிலும், அது ஆரோக்கியமற்றவர்களை ஏற்றிச்சென்று உயிரைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றது. எனவே உயிரைப் பறிக்கும் வான் வேண்டுமா அல்லது உயிரைப் பாதுகாக்கும் வான் வேண்டுமா என்ற தீர்மானம் மக்கள்வசமே உள்ளது.
அதைவிட வேறெந்த அரசாங்கத்தை விடவும் சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை எமது அரசாங்கமே பல்வேறு புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், உயர் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது. அதேபோன்று கல்வித்துறையைப் பொறுத்தவரை 'அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை', சுரக்ஷா காப்புறுதித் திட்டம் போன்றவற்றின் ஊடாக மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கியது. 'கம்பெரலிய' ஊடாக கிராம அபிவிருத்தி, வீதிகளின் நிர்மாணம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் எமது அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டன. எம்மிடமும் குறைகள் காணப்பட்டன. ஆனால் கடந்த அரசாங்கத்தை விட நாம் முன்னேற்றகரமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருக்கும் அதேவேளை, நாட்டுமக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தியிருக்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விரைந்து செயற்பட்டு சில வாரகாலத்திற்குள் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தோம். எனினும் முன்கூட்டியே புலனாய்வுத்தகவல்கள் கிடைத்திருந்தும் ஏன் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது? நாங்கள் நினைத்திருந்தால் அதனை மறைத்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. மாறாக ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் விசாரணை செய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்தோம். அந்தத் தெரிவுக்குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாம் அனைத்து செயற்பாடுகளிலும் உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் பேணினோம். இந்நிலையில் கடந்தகாலத்தில் எம்மிடம் காணப்பட்ட குறைகளைக் களைந்து முன்நோக்கிப் பயணிக்கும் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியிருக்கின்றோம். அவருடைய வெற்றி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி மாத்திரமல்ல, மாறாக முழு நாட்டினதும் வெற்றியாகும். ஆனால் கோதபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் அது அவருடையதும், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினதும் வெற்றியாக மாத்திரமே அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM