(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம் )
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பதவிக்காலம் முடிவடைந்ததும் தான் வசிப்பதற்காக உத்தியோகபூர்வ இல்லமொன்றை அமைச்சரவையின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார். அவருக்கு சொந்தமாக ஒரு வீடில்லையா? அந்தளவுக்கு அவர் பிச்சைக்காரராவென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தவறானதாகும். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல், ஆட்சிக்கவிழ்ப்பு என பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில் இடைக்கால கணக்குகள் மூலம் நாட்டு மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது, அதேபோல் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்ல முடியாது. தேர்தலை மையப்படுத்தி இவர்கள் செய்துவரும் சமுர்த்தி மற்றும் ஏனைய விடயங்களுக்கே இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அதேவேளை, எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பார்கள். அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மே மாதம் முதல் வாரமளவில்தான் புதிய பாராளுமன்றம் அமையும். அவ்வாறெனின் 2020ஆம் ஆண்டு முழுவதும் இடைக்கால கணக்குகள் மூலம்தான் பொருளாதாரத்தை கொண்டுசெல்ல முடியும். அப்படிச் சென்றால் பாரிய பொருளாதார வீழ்ச்சிகளுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடும்.
மேலும் தற்போது வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு எவ்வித தடைகளும் இல்லை. இந்த அரசுக்கு இன்னமும் காலம் உள்ளது. இடைக்கால கணக்கு வாக்கெடுப்பில் ஜனாதிபதிக்கு மூலனதனச் செலவுக்காக 2405 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு 2 கோடி ரூபா செலவு செய்யும் வகையில் இவ்வாறு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 300 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத இலட்சக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் ஜனாதிபதி ஒருவரின் செலவுக்கு ஒருநாளுக்கு 2 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பணத்தை நாசமாக்கும் வேலையாகும். இதேவேளை, அமைச்சரவையின் அனுமதியுடன் தற்போதைய ஜனாதிபதி வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று பல கோடி ரூபா செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கு சில சலுகைகள் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் எதிர்ப்பில்லை.
ஆனால், நாட்டு மக்கள் 300 ரூபா சம்பளத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் வாழும்போது இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு மக்கள் பணத்தில் வீடுகள் தேவையா? அந்தளவுக்கு தற்போதைய ஜனாதிபதி பிச்சைக்காரனா? இவர்களுக்கு சொந்தமாக வீடொன்று இல்லையா? இது பிச்சையெடுக்கும் வேலை. இந்த ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா? இவர்களது வாழ்நாள் முழுவதும் வசிக்க நாம் கப்பம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த விடயங்கள் கோப் குழுவுக்கு கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் பிமல் ரத்னாயக்கவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி அப்படி எந்த கோரிக்கையையும் விடவில்லை. நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குத்தகை அடிப்படையில் வீட்டை கொடுக்கவில்லை. அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சலுகைகளை மாத்திரமே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கியுள்ள சலுகைகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விசேட அதிரடிப்படையின் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையே புதிய விடயம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM