ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் சிறுபான்மையினத் தலைவர்கள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இனவாதத்தை கிளப்பும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி பிரசாரங்களை மேற்கொண்டு அரசியல் ரீதியில் நன்மைகளைப் பெறுவதற்கு இனவாத சக்திகள் முயன்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து முஸ்லிம் மக்களை இலக்குவைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களை இலக்குவைத்தும் பெரும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டதுடன் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் காரணமாக ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியிருந்தனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் இவரைத் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இத்தகைய இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் மக்கள் மீது வன்முறையாக கட்டவிழ்த்துவிடப்படலாம் என்று கருதிய முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட்டதுடன் அரசாங்கத்தில் அங்கம் வகித்த சகல முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை துறந்திருந்தனர். இவ்வாறு பெரும் சகிப்புத்தன்மையுடன் முஸ்லிம் தலைமைகள் அந்த வேளையில் செயற்பட்டிருந்தன.
தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மையின கட்சிகளையும் தலைவர்களையும் இலக்கு வைக்கும் வகையில் இனவாத பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதன்மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
அண்மையில் வடக்கு, கிழக்கை சேர்ந்த ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளை பிரதான வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்கு முடிவு செய்திருந்ன. இதற்காக 13 அம்சங்கள் அடங்கிய பொதுத் திட்டமொன்றையும் அவர்கள் தயாரித்திருந்தனர். ஒருமித்த நாட்டுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த பொது ஆவணம் தொடர்பிலும் தற்போது தென்பகுதியில் பெரும் சர்ச்சை கிளப்பப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய ஐந்து கட்சிகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து அந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் கலந்துரையாடி தேர்தல் தொடர்பில் முடிவொன்றினை எடுப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்த கட்சிகளின் பொதுவான நிலைப்பாடு தொடர்பில் இனவாதப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த 13 அம்ச திட்டமானது நாட்டை பிளவுபடுத்தும் என்றும் மிகப்பாரதூரமான யோசனைகள் இதில் அடங்கியுள்ளதாகவும் தென்பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் அடைய முடியாததை ஆவணரீதியில் அடைவதற்கு இந்த ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் முயன்று வருவதாக பிரசாரப்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கைகளை விடுக்கின்றபோது அதனை இனவாத கண்ணோட்டத்துடன் அணுகி அதன்மூலம் தென்பகுதியில் அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளே இடம்பெற்று வருகின்றன.
இதேபோன்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தொடர்பிலும் பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் பங்குபற்றிய நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொண்டிருந்தார். அந்த ஒளிப்பதிவை வைத்து சஹ்ரானுடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்பை வைத்திருந்ததாக பிரசாரங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் விளக்கமளித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அவ்வாறு தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த மக்களை தான் பார்வையிட சென்றிருந்த சமயம் அங்கு சஹ்ரானும் சகோதரரும் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் யார் என்பது கூட எனக்குத் தெரியாது. அவ்வாறிருக்கையில் அந்த நிகழ்வை வைத்து எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இனவாதத்தைப் பரப்பும் வகையில் செயற்பாடு இடம்பெறுகின்றது என்று அமைச்சர் ஹக்கீம் விளக்கிக்கூறியுள்ளார்.
இதனைவிட மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கள தேரரை நேற்றுமுன்தினம் சந்தித்து ஆசிபெற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீமினது கருத்துக்களை செவிமடுத்த மல்வத்து மாநாயக்க தேரர் இத்தகைய நிலைமை தொடர்பில் கவலை அடைவதாக தெரிவித்திருக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இனவாதத்தை பரப்பி அரசியல் நலன்களை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தலைவரான ஹக்கீம் மீது இனவாத சக்திகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் அதனை சில ஊடகங்கள் பிரசாரப்படுத்துவதும் இனங்களுக்கிடையேயான முறுகல் நிலையை உருவாக்குவதற்கும் வழிவகுத்துவிடும்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் தொடர்ச்சியாகவே முஸ்லிம் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களும் அமைந்திருக்கின்றன. தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்திலும் விளக்கமளித்திருக்கின்றார்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் அரசியல் சுயநலன்களுக்காக இன, மதவாத செயற்பாடுகளை தூண்டிவிடும் நடைமுறையானது தொடர்ந்து வருகின்றது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் அரசியலில் நலன்களைப் பெறுவதற்காகவும் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகள் இத்தகைய செயற்பாடுகளை தொடர்ந்து வருகின்றன. எமது வரலாற்றை எடுத்து நோக்கினால் அது நன்கு புலப்படும்.
சிறுபான்மையினருக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கதையாகவே மாறிவருகின்றது. தற்போதைய நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து பேசினாலோ, அல்லது அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினாலோ அந்த அரசியல் தலைவர்களை துரோகிகளாக பார்க்கும் நிலைமையே தென்பகுதியில் மேலோங்கி வருகின்றது.
இனவாத, மதவாத பிரசாரங்களே நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்திருந்தது. பேரிழப்புக்களை சந்தித்த பின்னரும்கூட இன்னமும் பேரினவாத சக்திகள் இந்த வரலாற்றைப் பாடமாகக் கொள்ளாது மீண்டும் மீண்டும் தமது செயற்பாடுகளை தொடர்ந்து வருவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாது.
எனவே இனியாவது அரசியல் சுயநலன்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்குவதையோ, அல்லது மதங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதையோ அரசியல் தலைமைகள் கைவிடவேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல் தலைமைகள் இதனை உணர்ந்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM