(நா.தனுஜா)
ஜனநாயகத்தை முன்நிறுத்தி 2015 ஆம் ஆண்டில் நாங்கள் ஆரம்பித்த போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. அப்போது எம்மால் தேசிய அரசாங்கம் ஒன்றையே அமைத்துக்கொள்ள முடியுமாக இருந்தது. எனவே அதனூடாக எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. ஆகவே எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து சாதாரண மக்களின் துன்பங்களை நன்கறிந்த சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச்செய்து, எமது அந்தப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போகின்றோம் என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆதரவளிப்பதற்கு முன்வந்திருக்கும் நிலையில், அதனை அறிவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
எமது நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2015 இற்கு முன்னரான கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே ஊடகவியலாளர்கள் மீது கடுமையான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டன. அதற்கு முன்னரும் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பிரபல பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் மீது எவரும் கைவைத்ததில்லை. எனினும் கடந்த ஆட்சியில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் தர்மரத்னம் சிவராம் போன்ற பலர் கொல்லப்பட்டனர். பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டார். கீத் நொயார், உபாலி தென்னகோன், போத்தல ஜயந்த போன்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். தெற்கில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது போன்று, வடக்கிலும் 39 ஊடகவியலளார்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று உதயன் பத்திரிகை காரியாலயத்திற்கு 3 முறை தீவைக்கப்பட்டிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவையும், அவருடைய குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு யார் குறித்தும் ஊடகவியலாளர்கள் எழுதலாம் என்ற நிலையே அப்போது காணப்பட்டது. கடந்த ஆட்சியில் காணப்பட்ட இத்தகைய மோசமான செயற்பாடுகளே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் நான் அந்த அரசாங்கத்தைவிட்டு வெளியேறத் தீர்மானித்ததுடன், அதனை அறிவிக்கும் விதமாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தேன். எனினும் தொலைபேசியின் ஊடாக என்னைத் தொடர்புகொண்ட மஹிந்த ராஜபக்ஷ, உடனடியாக இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் யார் கொலையாளிகள் என்பதைக் கண்டறிவதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிலையிலேயே 2015 ஆம் ஆண்டு நாமனைவரும் ஒன்றிணைந்து வெளியேறி, ஜனநாயகத்தை முன்நிறுத்திய எமது போராட்டத்தை ஆரம்பித்தோம்.
அவ்வாறு வெளியேறிய போது பலரும் என்னைத் தொடர்புகொண்டு, 'மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும் என்று கருதுகின்றீர்களா? ஏன் அவருடைய தரப்பிலிருந்து வெளியேறினீர்கள்?' என்றே பலரும் வினவினார்கள். எனினும் நாம் ஒன்றிணைந்து போராடினோம். அப்போது தேர்தல் பிரசாரங்களுக்கான மேற்கொண்ட செலவுகளை விட அவர்களின் தாக்குதல்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அதிகளவில் திட்டமிட்டு செயற்பட்டோம். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டில் நாங்கள் அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக அனைத்தையும் விட முதன்மையான ஒவ்வொரு பிரஜையினதும் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தினோம். நாம் பெற்றுக்கொடுத்த ஊடக சுதந்திரத்தை இன்று எமக்கு சேறு பூசுவதற்கே பயன்படுத்துகின்றார்கள்.
இன்றளவில் சில ஊடகங்கள் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படுகின்றன. அதன்போது கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அவர்களின் நினைவிற்கு வரவில்லையா என்று கேட்க விரும்புகிறேன். எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை முன்நிறுத்தி நாங்கள் ஆரம்பித்த போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. எமது நோக்கங்களில் இன்னும் சிலவற்றை அடைந்துகொள்ள முடியவில்லை. அப்போது எம்மால் தேசிய அரசாங்கம் ஒன்றையே அமைத்துக்கொள்ள முடியுமாக இருந்தது. எனவே அதனூடாக எதிர்பார்த்த அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. ஆகவே எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து சாதாரண மக்களின் துன்பங்களை நன்கறிந்த சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச்செய்து, எமது அந்தப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM