வடக்கு, கிழக்கில் தேசியக் கட்சிகளின் எல்லையற்ற பிரசன்னத்தால் தமிழ்த் தேசியக் கட்சிகளின் இருப்பும் எதிர் காலமும் கேள்விக்குள்ளாகும் போக்கு ஏற்பட்டுள்ளது. பரம்பரை ரீதியான இடைவெளி ஏற்படுவதால் தமிழ்த் தேசியம் பற்றி உரையாடலும் காணாமலாக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்வதற்கான தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவர் கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகளின் இணைவையும் அவ்இணைவு வெறுமனே தேர்தலுக்கானது மட்டுமே என்று விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- 2002ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும், அதற்குப் பின்னரான காலத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு அவற்றின் அடிப்படையில் மாற்றங்கள் நிகழ்ந்ததோடு வெளியேற்றங்களும் இடம்பெற்றிருந்தன.
2009இன் பின்னர் இந்த நிலைமைகள் மோசமடைந்திருந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே கூட்டுத்தேவை என்ற மனநிலை கருத்தியல் தளத்தில் இருந்தவர்களிடத்திலும், தமிழ் மக்களிடத்திலும் ஏற்பட்டது.
கூட்டை உருவாக்குவதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு நடைமுறைச் சாத்தியமற்ற சூழலில் தான், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தருணத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது மிகுந்த நன்மையான விடயமாகும்.
வெளியிலிருந்து இந்த அரசியல் கூட்டைப் பார்த்து விமர்சனங்களை முன்வைப்பவர்கள் முக்கிய விடயத்தினை கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழரின் அரசியல் வடிவமானது அரசியல் கட்சிகளை சார்ந்ததாகவே பார்க்கப்படுகின்றது. காரணம், முழுநேர அரசியல் செயற்பாடுகளை கட்சிகளே முன்னெடுக்கின்றன. தமிழர்களிடத்தில் மக்கள் இயக்கங்களோ, தேசிய இயக்கங்களோ, ஆரோக்கியமான சிவில் அமைப்புகளோ இல்லை.
இவ்வாறான நிலைமையானது, தனித்துவத்தினையும் பாரம்பரியங்களையும் கொண்டிருக்கும் தேசிய இனத்தினை மோசமான நிலைமைக்கே இட்டுச் செல்வதாக இருக்கின்றது. ஆகவே அத்தகைய நிலையிலிருந்து தேசிய இனமொன்றை மீட்பதற்கு இவ்வாறான கூட்டுக்கள் அவசியமாகின்றன. மேலும் தேர்தல்களே தமிழர்களின் இருப்பு பற்றிய அரசியல் உரையாடலை உருவாக்குவதோடு அதனை அடிப்படையாக வைத்தே கூட்டுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
கொள்கை ரீதியான கூட்டுக்களை ஏற்படுத்துவதென்றால், கொள்கை ரீதியான தரப்புக்கள் நடைமுறைசார்ந்த தளத்திற்குள் பிரவேசிப்பதற்கு மறுதலிக்கின்றன. இலங்கையில் இடதுசாரித்துவ கொள்கைக் கூட்டுக்களின் போக்கினை அனுபவ ரீதியாக நாம் கண்டிருக்கின்றோம்.
அதே நிலைமை தான் தமிழர்களின் கொள்கை கட்டமைப்புக்கும் ஏற்படுகின்றது. அந்நிலைமை கொள்கையை நிராகரிப்பது என்றாகிவிடாது. ஆனால் கொள்கைகளை வளைத்துக்கொண்டு நடைமுறைச் சாத்தியமாக செயற்படுதல் வேண்டும் என்ற விடயம் இங்கு பிரதிபலித்துள்ளது.
கேள்வி:- தமிழ்த் தேசிய முன்னணி பொது இணக்கப்பாட்டில் கையொப்பமிட மறுதலித்தமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அரசியல் கட்சிகள் தமக்குள்ள நியதிகளின் பிரகாரம் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றமையானது பிழையான விடயமொன்றல்ல. அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீர்மானம் தவறென்று கூறமுடியாது. ஆனால் மக்கள் நலன்சார்ந்து ஐக்கியப்படும் விடயத்தில் விட்டுக் கொடுத்தல் அவசியமான செயன்முறையாகின்றது.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்க கோரியமை ஏற்றுக்கொள்ளப்படாமைக்காக கூட்டை புறக்கணிக்க வேண்டியதில்லை. 2ஆம் உலகப் போரின்போது லெனின் ஹிட்லருடன் கூட்டை ஏற்படுத்தினார். பாரிய விமர்சனம் செய்யப்பட்டபோதும் ஜேர்மனின் தோல்வி ரஷ்யாவுக்கு வெற்றியாக முடிந்தது.
சந்தை வாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பொறி முறைகள் உள்ள தற்காலச் சூழலில் மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமரும் சீனப்பிரதமரும் சந்திக்கின்றார்கள். இதுபற்றிய புரிதல் இந்த உலகத்திடம் எவ்வாறுள்ளது என்பதே இங்குள்ள முக்கிய விடயமாகும்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொள்கை ரீதியான முரண்பாடுகளை வெளிப்படுத்தி கடும் விமர்சனங்களுடன் அதிலிருந்து வெளியேறியிருந்த விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்புகள் மீண்டும் ஒன்றுபட்டிருந்தாலும் நடைமுறைச் சாத்தியமான நகர்வுகள் தொடரும் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா?
பதில்:- இறுதிமுடிவுகளை எடுப்பதற்காக நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும் நான் பங்கேற்றிருந்தேன். இதன்போது அரசியல் கட்சிகளின் அனைத்து தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இடையில் தமிழர் சார்ந்து ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிந்தது.
விட்டுக்கொடுப்புக்கள், தெளிவு படுத்தல்கள், பரஸ்பர உரையாடல்கள், மகிழ்ச்சியான தருணங்கள், குரு- – சிஷ்ய உறவுகள் கூட இதன்போது காணப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
மேலும், இந்த அரசியல் கட்சியினரை வெ வ்வேறு தூரத்தில் யாரோ கையாளுகின்றார்களே தவிர ஒரே இடத்தில் அவர்கள் இருக்கின்றபோது ஒரே மாதிரியாக சிந்திக்கின்ற நிலைமை தான் அவர்களிடத்தில் உள்ளதை நான் கண்டிருந்தேன். அத்துடன் தமிழர் தாயகத்தில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்தாகிவிட்டது.
இந்த அரசியல் கட்சிகளின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகின்ற நிலைமையை நோக்கிய போக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், பரம்பரை இடைவெளி ஏற்படுவதால் தமிழ்த் தேசியம் பற்றி உரையாடலும் காணாமலாக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்வதற்கான தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
கேள்வி:- தமிழ்த் தரப்பின் நிபந்தனைகள் ஜனாதிபதி வேட்பாளர்களால் ஏற்படாது போனால் அடுத்தகட்டம் என்ன?
பதில்:- தமிழர்கள் முன்வைத்துள்ள நியாயமான விடயங்களை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான சூழல் இருக்குமா என்பது எம்முன்னுள்ள கேள்வியாகின்றது. அவ்வாறு சாத்தியமற்ற நிலை ஏற்படுகின்றபோது, முதலாவதாக தேர்தலை முழுமையாக பகிஷ்கரிப்பது பற்றி சிந்திக்கலாம். பகிஷ்கரிக்கின்ற முடிவினை எடுக்கின்றபோது தமிழர்
தாயகத்தில் முழுமையாக அதனை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியுள்ளது. இரண்டாவதாக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தமுடியாது போயுள்ள நிலையில் தேர்தல் களத்தில் உள்ள சிவாஜிலிங்கத்தினை முன்னிலைப்படுத்துவது பற்றி கவனம் செலுத்தினோம்.
மூன்றாவதாக தமிழ் மக்கள் சுயாதீனமாக தமது ஜனநாயக கடமையை முன்னெடுப்பதற்கும் விடுவதுபற்றியும் ஆராய்ந்துள்ளோம். இருப்பினும் அரசியல் கட்சியானது தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு நிலைப்பாட்டினை கூறவேண்டும் என்ற நிலைப்பாட்டினை அரசியல் தரப்பினர் முன்வைத்தார்கள்.
இந்நிலையில், வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் மீண்டும் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காமைக்கான காரணமென்ன? இந்த முயற்சி வெற்றியளித்திருந்தால் பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்திருக்குமல்லவா?
பதில்:- தென்னிலங்கையில் பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனை வடக்கின் நிலைமைகளை மையப்படுத்தியே எழும் என்பது இரண்டாவது பட்சமான பார்வையாகும். ஆரம்பத்திலிருந்து தென்னிலங்கையின் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கவில்லை.
அவ்வாறிருக்க, தமிழ்த்தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தும் விடயத்தினை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருந்தபோதும் அதற்கான கால அவகாசம் சம்பந்தமாகவே அதிக கரிசனை கொண்டிருந்தார்கள். மு.திருநாவுக்கரசு 2010இலிருந்து இதுபற்றிய கருத்தாடல்களை ஆரம்பித்திருந்தார். 2015இலும் இந்த விடயத்தினை அவர் முதன் மைபடுத்தியிருக்கின்றார்.
எனவே முழுநேர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இவ்விடயத்தினை கையிலெடுத்து செயற்படுவார்கள் என்று காத்திருந்து ஈற்றில் அதனை சிவில் தரப்பினைச்சேர்ந்த சுயாதீனக்குழுவினர் கையிலெடுத்தார்கள்.
மேலும், தமிழர்கள் தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலை உணர்ந்துள்ளதோடு தாம் எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருக்கின்றார்கள் என்பதை புவிசார் அரசியல் தளத்தில் இலங்கைத்தீவினை பயன்படுத்துகின்ற, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு தெளிவூட்டலை செய்வதற்கான உத்தியாகவும் இந்த விடயத்தினைக் கருதினோம்.
நேர்காணல்கள் : ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM