ஆர்.ராம்
ஜனாதிபதி வேட்பாளர் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் வகையில் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த இணக்கப்பாடு தொடர்பான ஆவணத்தை ஏற்றுக்கொள்வதில் இரு பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களும் பின்னடிப்பதாகத் தெரியவருகிறது.
13 அம்சக்கோரிக்கைகளை உள்ளடக்கிய குறித்த ஆவணத்தை மேற்படி பிரதான வேட்பாளர் இருவரிட மும் சமர்ப்பித்து பேச்சு நடத்த தமிழ்த்தரப்பு விரும்பிய போதிலும் குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பித்தால் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை அவை இழக்க நேரும் என அஞ்சுவதாகவும் அதுவே தமிழ் தலைவர்களை சந்திக்க தயக்கம் காட்டுவதற்கான பிரதான காரணம் என்றும் தெரியவருகிறது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களிடத்திலும் தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் உடனடிப் பிரச்சினைகளை உள்ளடக்கிய 13அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றும், அதனடிப்படையிலேயே தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாக அறிவிப்பு விடுக்கும் தீர்மானத்தினை எடுப்பதென்றும் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஐந்து தமிழ் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்ததோடு அக்கட்சிகளின் தலைவர்களும் கையொப்பம் இட்டிருந்தனர்.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ ஐந்து கட்சிகள் கூட்டிணைந்து முன்வைத்துள்ள 13அம்ச கோரிக்கைகளை ஏற்கப்போவதில்லை என்றும் நிபந்தனைகளுடன் அக்கட்சிகளின் தலைவர்கள் குழுவுடன் அமர்ந்து பேசுவதற்கு கூட தயாரில்லை என்றும் திட்டவட்டமாக அறிவிப்பினை விடுத்துள்ளார்.
பிரதமரின் கூற்றும் சஜித்தின் தாமதமும்
அடுத்த கட்டமாக மற்றொரு பிரதான அரசியல் தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஐந்து கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக சந்திப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக யாழிற்குச் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடனான சந்திப்பின்போது, தான் கொழும்பு திரும்பியதும் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி சந்திப்பை நடத்துவதற்கான நேர ஒதுக்கீட்டினை பெற்றுத்தருவதாகவும் தேசிய விடயங்களில் நீண்ட அனுபவங்களைக் கொண்ட அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன போன்றவர்களையும் அக்கலந்துரையாடலில் உள்ளீர்ப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் சஜித் பிரேமதாஸ பிரசாரப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளமையால் உடனடியாக கொழும்பில் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துவதற்கு நேரஒதுக்கீட்டை வழங்க முடியாத திரிசங்கு நிலையில் அவர் இருப்பதாக சஜித் தரப்பில் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பிரதமர் ரணிலிடம் நேர ஒதுக்கீட்டை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேர ஒதுக்கீடு குறித்த உறுதிப்பாடு இன்னமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மறுபக்கத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் அண்மைய நாட்களில் கொழும்பில் தங்கியிருப்பதோடு 23ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கொழும்புக்கு வருகை தரவுள்ளனர்.
சிங்கள வாக்குகள் இழக்கப்படும் அச்சம்
எவ்வாறாயினும், ஐந்து தமிழ் கட்சிகளும் இணைந்து முன்வைத்துள்ள 13அம்ச கோரிக்கைகள் நாட்டை பிளவுபடுத்துவதாகவும் இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதாகவும் அமைகின்றது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த நாட்டின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் ஆகவே அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனாலேயே நிபந்தனைகளை முன்வைத்துள்ள தமிழ்த் தரப்பினை கோத்தாபய சந்திக்கும் தீர்மானத்தினை கூட எடுக்கவில்லை என்று ராஜபக்ஷ தரப்பில் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சஜித் பிரேமதாஸ தமிழ்த் தரப்பினை சந்திப்பதற்கான நிலைமைகளை தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
சஜித் பிரேமதாஸ தமிழ்த் தரப்பின் 13அம்ச கோரிக்கைகளை ஏற்காது வெறுமனே சந்திப்பில் ஈடுபட்டாலே தென்னிலங்கையில் தமிழ்த் தரப்புடன் இரகசிய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுவிட்டார் என்று கடுமையான பிரசாரம் செய்யப்படும். இதனால் தென்னிலங்கை சிங்கள வாக்குகளை அவர் பெறமுடியாத நிலையொன்று தோற்றம்பெற்றுவிடும் என்றும் அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பில் தமிழ்த் தரப்புடன் சந்திப்புக்களை நடத்தவேண்டும் என்றும் தென்னிலங்கை மக்களுக்கு யதார்த்தத்தினை தெளிவு படுத்தவேண்டும் என்றும், கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்வதாக பிரசாரம் செய்யப்பட்டபோதும் நாடு இன்று வரையில் பிளவடையவில்லை என்பதையும் எடுத்துக்கூறவேண்டும் என்றும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்த் தரப்பினை சந்திப்பது குறித்து எவ்விதமான இறுதி முடிவுகளும் இச்செய்தி அச்சுக்கு செல்லும் வரையில் எடுக்கப்படவில்லை.
ஜே.வி.பியின் சமிக்ஞை
தமிழ்க் கட்சிகளின் 13அம்ச நிபந்தனைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கருத்துவெளியிடுகையில், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி கோரிக்கை போன்ற நடைமுறைச்சாத்தியமல்லாத விடயங்களை எம்மால் ஏற்க முடியாது என்றும் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் உடனடிப் பிரச்சினைகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தமது கட்சியின் நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போகின்றதும் நடைமுறை சாத்தியமான விடயங்களும் 13 அம்ச கோரிக்கைகளில் காணப்படுவதால் அவை தொடர்பில் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கால அவகாசமும் மாற்றுவழியும்
இவ்வாறிருக்க, 13அம்ச கோரிக்கைகளில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாட்டிற்கு வந்தபின்னர் இந்த நிபந்தனைகளை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்க மறுத்தால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் மூன்று தெரிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
தேர்தலை புறக்கணிப்பது இல்லையேல் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கத்தினை ஆதரிப்பது, மக்களின் சுயாதீன முடிவுக்கு விடுவது ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளன.
எனினும் தேர்தலை புறக்கணிப்பது அல்லது பொருத்தமற்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பன மேலும் தமிழ் மக்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால் மக்களை சுயாதீனமுடிவுக்கு விட்டுவிடுவதே சிறந்தது என்றும் தமிழ் தரப்புக்கள் விரும்பவதாகத் தெரியவருகிறது.
இந் நிலையில் 23ஆம் திகதி வரையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் போக்கினை அவதானித்து அதன் பின்னர் அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலை ஐந்துகட்சிகளுக்கும் இடையில் முன்னெடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாக சிவில் சமுக பிரதிநிதி கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM