இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென்று தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் பேரழிவுகளுக்கு மத்தியில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததுடன் பேரழிவுகளும் ஏற்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயிருந்தனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். 90 ஆயிரம் பெண்கள் வடக்கு, கிழக்கில் விதவைகளாக்கப்பட்டனர்.
இவ்வாறு பேரிழப்புக்களை சந்தித்த மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் அன்றைய செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் பொறுப்புக்கூறும் விடயத்திற்கான உறுதிமொழி அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் வழங்கப்பட்டிருந்தது.
யுத்தம் முடிவடைந்து தற்போது பத்துவருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னமும் யுத்தப்பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. காணாமல்போன உறவுகளுக்கு நேர்ந்த கதி தொடர்பில் அறியமுடியாது பத்துவருடங்கள் கடந்த நிலையிலும் அவர்களது உறவினர்கள் பெரும் அல்லல்பட்டு வருகின்றனர். தொடர்ந்தும் தமது உறவுகள் மீள திரும்பும் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுக்கள் முன்னிலையில் காணாமல்போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி அவர்களது ஆயிரக்கணக்கான உறவினர்கள் அழுதுபுலம்பி சாட்சியமளித்திருந்தனர். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆயிரக்கணக்கான உறவுகள் சாட்சியங்கள் அளித்தபோதும் உரிய பயன்கிடைக்கவில்லை. இதனையடுத்து பரணகம ஆணைக்குழு முன்னிலையிலும் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி இந்த மக்கள் அவலக்குரல் எழுப்பினர். சாட்சியங்களை அளித்தனர். எழுத்துமூலமாகவும் முறைப்பாடுகளை கையளித்தனர்.
காணாமல்போன 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களது முறைப்பாடுகள் இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. காணாமல்போனோர் விவகாரத்திற்கு உரிய தீர்வு காணவேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்த ஆணைக்குழுவும் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் காணாமல்போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளோ அல்லது அதுதொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கான செயற்பாடுகளோ இடம்பெறவேயில்லை.
காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி உறவினர்கள் போராட்டம் நடத்த முடியாத நிலைமை அன்றைய ஆட்சிக்காலத்தில் நிலவியிருந்தது. அன்றைய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரது கவனத்தையீர்க்கும் வகையில் கொழும்பில் காணாமல்போனோரது உறவினர்கள் போராட்டத்தை நடத்த முற்பட்டபோது அதற்கும் அச்சுறுத்தல்களும் தடைகளும் விதிக்கப்பட்டன. வடக்கிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த காணாமல்போனோரது உறவினர்கள் வவுனியாவுக்கும் அநுராதபுரத்திற்குமிடையில் இறக்கி திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறான அச்சுறுத்தலான நிலைமை அன்று நிலவியபோதிலும் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி அடக்குமுறைக்கு மத்தியிலும் மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் மற்றும் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டபோது கைது செய்தவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். தமது உறவினர்களை எங்கு எப்போது யாரிடம் கையளித்தோம் என்று உறுதியான தகவல்கள் வழங்கப்பட்டபோதிலும் அத்தகையவர்களுக்குக்கூட என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை விசாரிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில்தான் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று காணாமல்போனோரது உறவுகள் எதிர்பார்த்திருந்தனர். இதற்கிணங்க இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணையைக் கோரிய பிரேரணை 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டது. அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் உரிய வகையில் எடுக்கப்படவில்லை.
காணாமல்போனோர் விவகாரம் தொடர் பில் ஆராயப்பட்டு தீர்வுகாணப்படும் என்று உறுதி வழங்கப்பட்டபோதிலும் அவ்விடயம் தொடர்பிலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனாலும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. சாலிய பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு தற்போதும் செயற்பட்டு வருகின்றது. ஆனால் காணாமல் போனோரை மீட்பதற்கோ அல்லது அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பது தொடர்பில் அறிவிப்பதற்கோ அந்தக்குழுவும் இன்னமும் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.
இவ்வாறு பிரச்சினைகள் தொடர்ந்துவரும் நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் நேற்று முன்தினம் கொழும்பில் கூட்டுக்கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றினையும் நடத்தியிருந்தார்.
இந்த மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் இறுதி யுத்த காலத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அனைவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாக எவரும் கூறலாம். ஆனால் அவை அனைத்துமே குற்றச்சாட்டுக்கள் மட்டுமேயாகும். யுத்தத்தின்போது இராணுவத்தை நான் வழிநடத்தவில்லை. இராணுவத்தளபதியே வழிநடத்தியிருந்தார் என்று தெரிவித்திருக்கின்றார்.
இதனைவிட ஐ.நா. மனித உரிமை பேரவையின் 2015ஆம் ஆண்டு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அதனை நிராகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக் ஷவின் இத்தகைய கருத்துக்கள் காணாமல்போனோரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை நிச்சயமாக ஏற்படுத்தும்.
ஏனெனில் காணாமல்போன உறவுகளுக்கு நேர்ந்த கதி என்ன என்பது தொடர்பில் அறிய வேண்டும் என்றும் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் கோரிவரும் இந்த மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமக்கு தீர்வு வரும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கான முழுமையான தீர்வு இன்னமும் காணப்படவில்லை. இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக் ஷ காணாமல்போனோர் விவகாரம் என்பது குற்றச்சாட்டு மட்டுமே என்றும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளமை அந்த மக்களை கவலைக்குட்படுத்தியுள்ளது.
இதேபோன்று பொறுப்புக்கூறும் விடயத்திலும் முன்னைய நிலைப்பாட்டிலேயே தான் உள்ளமையை அவர் எடுத்துக் கூறியிருக்கின்றார். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியம் சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் அதற்கான ஜெனிவா தீர்மானத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இதனைவிட இராணுவத்தை தான் வழிநடத்தவில்லை என்று அவர் கூறியதன் மூலம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விலகிக்கொள்ளும் தன்மை தெளிவாக தெரிகின்றது. எனவே பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின் இத்தகைய நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியமாக உள்ளது. தமிழ் மக்களின் துன்ப துயரங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவகையில் இனியாவது நிலைப்பாடுகளை மாற்று வதற்கு பொதுஜன முன்னணியினர் முயலவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி ஆசிரிய தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM