(ஆர்.யசி)
கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக் கூடாது. இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் எமக்குள்ள வாக்குரிமை என்பதை மறந்துவிடக் கூடாது என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்தும் வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது குறித்தும் நாம் தீர்மானமெடுக்க காலம் உள்ளது. இப்போது பிரதான வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக முன்வைத்து வருகின்றனர்.
ஆகவே இன்னமும் சிறிது நாட்களில் தமிழ் மக்களின் தலைமைகள் என்ற வகையில் நாம் மக்களுக்கு ஏற்ற தீர்மானம் ஒன்றை எடுப்போம்.
தமிழ் மக்கள் எம்மை பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து அரசியல் களத்தில் இறக்கியுள்ள நிலையில் எமது மக்களைக் கைவிட்டு சுயநல அரசியல் செய்ய எம்மால் முடியாது. நாம் எப்போதும் எமது மக்கள் நலன்கள் சார் விடயங்களையே முன்னெடுப்போம்.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளில் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் எந்த வேட்பாளர் வாக்குறுதிகளை வழங்குகின்றார் என்பதை நாம் அவதானித்துக்கொண்டுள்ளோம்.
எமக்குத் தீர்வு வேண்டும். இதில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனநாயகத்தை ஆதரிக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் உள்ளது. அது மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் ஒரு வழிமுறை முடிவுக்கு வந்தாலும் ஜனநாயக ரீதியாக இன்றும் நாம் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டே வருகின்றோம்.
இதில் எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமையாகும். அதனை கைவிடக் கூடாது.
யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து ஆராய முடியும். ஆனால் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தக் கூடாது. அவ்வாறு கூறும் நபர்களின் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
கடந்த 2005ஆம் ஆண்டு தமிழர் தரப்பு தேர்தலைப் புறக்கணிக்க ஒரு நியாயமான காரணி இருந்தது. ஆனால் இப்போது தேர்தலைப் புறக்கணிக்க எந்த அவசியமும் இல்லை. ஆகவே தமிழ் மக்கள் தேர்தலில் தமது முழுமையான பங்களிப்பை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM