தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண தயாராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன். எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும் பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவு வழங்க முன்வருவார். 99.9 வீதம் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. மலையகத்தில் முரளிதரன் குறித்தும் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினர்.
தமிழ் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கட்டியம் கூறும் வகையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. சஜித் பிரேமதாச வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் முதல் முதலாக அங்கு சென்று பிரசாரக் கூட்டத்தை நடத்தியிருந்தார். எல்பிடிய தேர்தல் முடிவுகளுக்கு அமையவே ஜனாதிபதி தேர்தல் முடிவும் வரவுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண நாம் நடவடிக்கை எடுப்போம். இவ்விடயம் தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நாட்டில் அரசியல் பிரச்சினையை தவிர ஏனைய பிரச்சினைகள் சகல மக்களுக்கும் பொதுவானதாகவே காணப்படுகின்றது. விவசாயிகளின் பிரச்சினை, பட்டதாரிகளின் பிரச்சினை உட்பட அணைத்து பிரச்சினைகளையும் எல்லோருக்கும் பொதுவானதாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளமை சகலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் அரசியல் பிரச்சினை என்பது தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதற்கு நாம் தீர்வு வழங்க வேண்டும். அதற்கான யோசனை நிச்சயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறும்.
தற்போது பம்பாய் வெங்காயம் 350 ரூபாவை எட்டியுள்ளது. அண்மையில் தமிழ் வர்த்தகர்கள் நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறு பொருளாதர ரீதியில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பேசுவதற்கு யாருமில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நாம் எமது கொள்கைத் திட்டங்களை வெளியிட்ட பின்னரே அவர்களுடன் பேசுவதற்கு எண்ணியுள்ளேன். 18 ஆம் திகதி எமது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும். அதன் பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
தொண்டமான் ஆதரவு
மலையக அரசியலை பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிப்பார். 99.9 வீதம் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. மலையகத்தை பொறுத்த வரையில் தற்போது முத்தையா முரளிதரனுக்கு நல்ல கேள்வி எழுந்துள்ளது. அவரை அங்கு பேசுவதற்கு அனுப்புமாறு என்னிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
புதிய அரசியல் யாப்பு
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நாம் ஆட்சி அமைத்ததும் சிந்திக்க முடியும். 19 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் அதிகாரம் இரு தலைமைகளிடம் பகிரப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் இருக்க முடியாது. யாராவது ஒரு தரப்பிடம் அதிகாரம் இருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் நாம் 19 ஆம் திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவருவோம். இவை அனைத்திற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாக உள்ளது.
அதிகாரம் குறித்து தற்போது பேசுபவர்கள் மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு கோருவதில்லை. ரணில் விக்கிரமசிங்க தேர்தல்களை நடத்தாது ஒத்திவைத்துள்ளார். சர்வாதிகாரி என குற்றம் சாட்டப்படும் நான் சகல தேர்தல்களையும் நடத்தியிருந்தேன். நான் தோல்வியடைவேன் என்று தெரிந்தும் கூட தேர்தல்களை நடத்தியிருந்தேன். மாகாண சபைகளுக்கான தேர்தலே நடைபெறாத நிலையில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. இந்த செயற்பாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது.
தற்போது ரிஷாத் பதியுதீனை எடுத்துப்பாருங்கள். அவர் தனது மக்களின் நலன் குறித்தும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கத்துடன் இணைந்து இந்த செயற்பாடுகளை மேற்கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அவ்வாறு செயற்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அமைச்சுக்கள் வழங்குவது குறித்தோ அல்லது பதவிகள் வழங்குவது குறித்தோ எந்தவித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. வடக்கு கிழக்கில் பிரசாரக் கூட்டங்களை நாங்கள் நடத்தவுள்ளோம். பசில் ராஜபக் ஷ இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷ நாளை வடக்குக்கு சென்று ஐந்து தினங்கள் தங்கியிருக்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM