(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தினார் என்பதை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர ஜனநாயக முன்னணி என்ற புதுவழியில் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ஜி.எச். புத்ததாஸ தெரிவித்தார்.
ராஜகிரியவில் உள்ள சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் காரியாலயத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுனவுடன் இன்று சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கைகோர்த்துள்ளமை கவலைக்குரியது.கட்சியின் கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று கருத்துரைத்தவர்கள் இன்று எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஆதரவு கோருவது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயற்பாடாகவே காணப்படுகின்றது.
தங்களின் எதிர்கால அரசியல் கேள்விக்குறியாக்கப்படும் என்று கருதியே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்கு துரோகமிழைத்துள்ளார்கள். ஒரு சிலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமையினால் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று கருத முடியாது.
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் கட்சிக்கு துரோகமிழைத்தவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். வரலாற்று பின்னணியை கொண்டுள்ள சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு உண்டு.
ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர ஜனநாயக முன்னணியின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் வெகுவிரைவில் முன்னெடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியை பலவீனப்படுத்தினார் என்பதை வரலாற்றிலிருந்து ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. கட்சிக்கு துரோகமிழைத்தவர்கள் அனைவருக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் ரஜித கொடித்துவக்கு குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளமை தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்விதமான கருத்தினையும் தெரிவிக்கவில்லை. விருப்பமானவர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டமையினை தொடர்ந்தே இரு தரப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சியை இணைக்க வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியின் 181 தொகுதி அமைப்பாளர்களில் இருவரை தவிர்த்து ஏனையோர் அனைவரும் குறிப்பிட்டு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்கள். இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து ஒரு தீர்வினை எடுப்பதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடு தழுவிய ரீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கினை மீண்டும் பெறுவோம். பொதுஜன பெரமுனவை வீழ்த்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM