எனக்கு தனியானதொரு அரசியல் கனவு இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்ற எனது முடிவில் மாற்றமில்லை
நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் பிரிவினைகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தி ஆட்சியை முன்னெடுக்க முடியாது. ஜனநாயகத்தினை மறுதலித்த ஆட்சியின் அனுபவத்தினை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
ஆகவே மீண்டும் இந்த நாட்டில் இருண்ட யுகம் ஏற்படுவதற்கு இடமளிக்காது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாக்கார் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பணிகளுக்கான செயற்பாட்டதிகாரியுமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருக்கும் நீங்கள் சொற்பகாலமாக கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- நான் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து என்றுமே விலகியிருக்கவில்லை. இருப்பினும் கட்சியினுடைய நிலைப்பாடுகள் ரீதியாக சில மாறுபட்ட நிலைமைகள் காணப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து இரண்டு தடவைகள் இடைநிறுத்தப்பட்டும் இருந்தேன். பிரதி தவிசாளர் பதவிலிருந்தும் என்னை நீக்கினார்கள். ஆனால், இந்த செயற்பாடுகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் கட்சியை விட்டுச் செல்லவில்லை. தேர்தல்களின்போதும், நெருக்கடியான சூழலிலும் கட்சியுடனேயே இணைந்திருந்தேன்.
ஐக்கிய தேசியக் கட்சியானது, இந்த நாட்டில் உள்ள மூவின மக்களின் தலைமைகளின் இணைவுடன் உருவாக்கப்பட்ட கட்சியாகும். கட்சியை உருவாக்குவதற்காக டி.எஸ்.சேனாநாயக்க, டி.பி.ஜாயா, நடேசன், பரீட் போன்றவர்கள் அளப்பரிய பணிகளை ஆற்றினார்கள். கட்சி உருவாக்கப்பட்டபோது, டி.எஸ்.சேனாநாயக்க, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அடையாளங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று கூறினார். இந்த விடயம் என்னை வெகுவாக பாதித்தது. ஆகவே தான் அக்கட்சிக்கும் எனக்கும் கொள்கை ரீதியான பிணைப்பு ஏற்பட்டது. கடந்த காலத்தில் நிலைப்பாடு ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டபோதும் என்மீது கட்சி சில கசப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும் நான் கட்சியுடன் கோபதாபங்களைக் கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- தற்போது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் சார்பிலான பிரசாரப் பணிகள் உள்ளிட்ட கட்சி செயற்பாடுகளை எந்த அடிப்படையில் பொறுப்பேற்றிருக்கின்றீர்கள்?
பதில்:- பிரித்தானியர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெறவேண்டும் என்ற கருத்து வெகுவாக எழுந்தபோது, இலங்கையில் பல்லினங்கள் காணப்படுவதால் அவை ஒருபோதும் ஒற்றுமையாக இருக்காது. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு பிரிவினைகள் அதிகரிக்கும் என்று பிரித்தானியர்கள் குறிப்பிட்டனர். இருப்பினும் டி.எஸ்.சேனாநாயக்க போன்ற தலைவர்கள் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஏனைய தலைவர்களையும் இணைத்து சுதந்திரத்தினைப் பெற்றுக்கொடுத்தனர். டி.எஸ்.சேனாநாயக்க முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தலைவர்களிடத்திலும் நாட்டின் நலன்கள் மற்றும் பல்லின சமூகத்தினை அரவணைக்கும் மனப்பாங்கு இருந்து வருகின்றது.
கட்சியினுள் ஏற்பட்ட நிலைப்பாட்டு ரீதியான வேறுபாடுகளால் நான் சற்று விலகியிருந்தேன். தற்போது சஜித் பிரேமதாஸ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நான் முன்வந்து செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனநாயகப் பண்புகளை கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸ, சமூக ஜனநாயக கொள்கைகளை மையப்படுத்திய முற்போக்கான செயற்றிட்டத்தினை முன்னெடுக்கும் நபராக உள்ளார். அப்பணியை முன்னெடுக்கும் ஒருவரை இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அடுத்த பரம்பரையினருக்காகவும் வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காகவே அவரை ஆட்சிப்பீடத்தில் அமர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணியில் இணைந்துள்ளேன்.
கேள்வி:- இலங்கை அரசியலில் பழம்பெரும் கட்சியான ஐ.தே.கவிற்கு 25வருடங்களாக தலைமைவகிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை 2005இற்கு பின்னரான காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிய முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- இந்த விடயம் சம்பந்தமான கருத்துப் பகிர்வினை நான் தற்போதைய சூழலில் தவிர்க்கின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகி விட்டோம். ஆகவே அந்த இலக்கு நோக்கிய பயணத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. இத்தகைய விடயங்கள் தொடர்பான கருத்துப்பகிர்வினால் எமது எதிரணியினர் இலாபத்தினை ஈட்டுவதற்கு இடமளிக்க முடியாதல்லவா?
கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதான போட்டியாளர்களாக இருக்கும் கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரிடையே முற்போக்கான செயற்பாடுகளில் எத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன?
பதில்:- சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரையில் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதையே இலக்காக கொண்டுள்ளார். எமது நாடு, எமது மக்கள் என்றே அவருடைய கருத்தாடல்கள் இருக்கின்றன. கோத்தாபயவை பொறுத்தவரையில் புறநிலையில் நின்றே நாடு தொடர்பில் சிந்திக்கின்றார். உங்களது நாடு, நீங்கள் சிந்தியுங்கள் என்றே அவரது கருத்தாடல்கள் உள்ளன. இவை இரண்டுக்குமான வேறுபாடுகளை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
தேசியக் கட்சியொன்றானது தேசிய ரீதியிலேயே அனைத்தினத்தவர்களையும் உள்ளடக்கியதாக செயற்பட வேண்டும். குறித்தவொரு இனத்தவர்களை மட்டும் மையப்படுத்தியதாக தேசியக் கட்சியொன்றால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுகின்ற போது உள்ளகப் பிரச்சினைகள் மென்மேலும் வலுவாகும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது நாட்டின் எதிர்காலம் சூன்யமாகும். உள்ளக பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளைக் காண்பதன் மூலம் அயல் நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடனான இருதரப்பு உறவுகளை வெகுவாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.
அடுத்து, நபர்களின் பின்னணியும், குணாம்சங்களும் இங்கு முக்கியமாகின்றது. சஜித்துக்கு 25வருடங்களுக்கும் மேலான அரசியல் அனுபவம் காணப்படுகின்றது. கோத்தாபயவைப் பொறுத்தவரையில் பாதுகாப்புச் செயலாளராகவே பணியாற்றியுள்ளார். அப்பதவி கொள்கையளவில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பொன்று அல்ல. மேலும் எந்தவொரு நபருக்கும் அதிகாரங்களை வழங்கும்போது அவரின் குணாம்சங்களை அறிய முடியும். பாதுகாப்புச் செயலாளராக கோத்தாபய இருந்தபோது அவருக்கு இருந்த சொற்ப அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை நான் கூறவேண்டியதில்லை. அந்த யுகத்திலிருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னமும் மீளாதிருக்கின்றனர்.
ராஜபக் ஷ தரப்பினர், முள்ளிவாய்க்கால், தர்கா நகர், திகன போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்களை இன்னமும் கைவிடவில்லை. இனக்குழுக்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு விளைகின்றார்கள். அவற்றை தமது தேர்தல் வெற்றிக்கான உபாயங்களாக பயன்படுத்துகின்றார்கள். ஆனால் தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப்புரட்சிகள் ஏற்பட்டபோது, நாட்டின் தலைமைத்துவத்தினைக் கொண்டிருந்த ரணசிங்க பிரேமதாஸ புரட்சியேற்படுத்திய இளைஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருந்தார். தேவையேற்பட்டால் கண்களை கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு இளைஞர் குழுக்கள் அழைக்கும் பகுதிக்கு வருகை தரவும் தயார் என்றே அறிவித்தார். ஆகவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தூரநோக்குடன் மக்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
கேள்வி:- தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற நபர்கள் தம்மை முன்னிலைப்படுத்துவதற்காக நாட்டுத்தலைவர் ஒருவருக்கான கடப்பாடுகளான தேசிய பாதுகாப்பை உறுதிசெய்தல், வாழ்விடங்களை வழங்குதல் போன்றவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றார்களே தவிர, அவற்றைத் தாண்டி நாட்டில் காணப்படும் பிரதான விடயங்களில் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை பிரதிபலிப்பதை அவதானிக்க முடியவில்லையே?
பதில்:- சஜித் பிரேமதாஸவின் கொள்கைத்திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தினை தயாரிக்கும் பணிகள் ஏரான் விக்கிரமரட்ன தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வார இறுதிக்குள் அது வெளியிடப்படும். இந்த விஞ்ஞாபனத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் அனைத்து பங்காளிக்கட்களின் தலைவர்களின் முன்மொழிவுகளும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அனைத்து மக்களின் விடயங்களையும் கொண்டதாகவே அந்த விஞ்ஞாபனம் அமைகின்றது.
அத்துடன், தேசிய பிரச்சினை, தேசிய பாதுகாப்பு தொடர்பில் சஜித் பிரேமதாஸ தனது நிலைப்பாடுகளை பகிரங்கப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இராணுவம், ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதோடு பௌத்த சித்தாந்தத்திற்கு அமைவாக, பிரச்சினைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதை விடவும் பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வளிப்பதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.
கேள்வி:- ஐ.தே.க அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்து பாரிய விமர்சனங்கள் காணப்படுகின்ற நிலையில் அது குறித்து சஜித் பிரேமதாஸவின் நிலைப்பாடுகள் எவ்வாறுள்ளன?
பதில்:- சில தினங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். இதன்போது, தனது தலைமையின் கீழ் உருவாகும் அரசாங்கம் நாட்டின் பகுதியினையும், வளங்களையும் விற்பனை செய்யப்போவதில்லை. அரச, தனியார் கூட்டு நிருவாக நிறுவனங்களில் 51 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை அரசாங்கமே கொண்டிருக்கும் என்று தெளிவாக கூறியுள்ளார். இதனை வாக்குகளைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் கூறவில்லை. சர்வதேச மற்றும் அயல் பிராந்திய பிரதிநிதிகளிடத்திலேயே வெளிப்படையாக கூறியுள்ளார்.
கேள்வி:- இலங்கை பூகோளப்போட்டிக்குள் சிக்கியிருப்பதால் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தி
களாக வெளிநாடுகளே காணப்படுகின்றதாகவும், இவை தேர்தல்களின் போது பின்னணியில் நின்று செயற்படுவதாகவும் கூறப்படுகின்றதே?
பதில்:- சஜித் பிரேமதாஸ மிகவும் வெளிப்படையானவர். எந்தவொரு தரப்பினரின் நிபந்தனைகளுக்கோ, உடன்படிக்கைகளுக்கோ செல்லமாட்டேன் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும் ரணசிங்க பிரேமதாஸ, இந்திய அமைதிகாக்கும் படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மக்களின் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தினை எடுத்தார். எந்தவொரு வெளிநாட்டுச் சக்திக்கும் கட்டுப்பட்டு அவர் செயற்பட்டிருக்கவில்லை. இஸ்ரேல் விடயத்திலும் சர்வதேச அரங்கில் தனது நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவித்திருந்தார். அவ்வாறானவரின் புதல்வரே சஜித் பிரேமதாஸ ஆவார். எனவே நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவாரே தவிர வெளியாரின் தலையீட்டுக்கு இடமளிக்கமாட்டார்.
கேள்வி:- தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழ் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாத 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதாக சஜித்தும், கோத்தாபயவும் கூறினாலும் அதில் கூட தெளிவற்ற நிலைமையொன்றல்லவா இருக்கின்றது?
பதில்:- இந்த நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலமாக தீர்வளிப்பேன் என்று சஜித் கூறியுள்ளார். கோத்தாபய பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன போன்று ஐ.தே.கவும் சிங்கள, பௌத்த மக்களை மையப்படுத்தியதாக இருந்திருந்தால் இறுக்கமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்க முடியும்.
ஆனால் ஐ.தே.க அவ்வாறானதொரு கட்சியல்ல. மேலும் நாட்டின் யதார்த்த நிலைமைகள் தொடர்பில் அவருக்கு பரந்துபட்ட அனுபவம் உள்ளது. அந்த வகையில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளீர்த்து கலந்துரையாடல்கள் மூலம் உரிய நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கே அவர் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார். ஆகவே மக்கள் நம்பிக்கையை ஒருபோதும் சீர்குலைக்கமாட்டார். இந்த அடிப்படையில் தான் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகளான, மனோகணேசன், ஹக்கீம், ரிஷாத் போன்ற தலைவர்கள் முன்வந்து தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
கேள்வி:- 2015ஆம் ஆண்டு தமிழ்தரப்புக்கள் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி ஆட்சிமாற்றத்திற்கான பங்களிப்பினைச் செய்திருந்தபோதும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும், பொதுநிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான உறுதிப்பாட்டினை பெறவேண்டும் என்றும் தமிழ் தரப்பு மேற்கொள்ளும் முயற்சிகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- சஜித் பிரேமதாஸ வடக்கிற்கு ஒருகதையையும், தெற்கிற்கு ஒருகதையையும் கூறவில்லை. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கைவிடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். இன, மத வாதங்கள் விதைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மிகப்பெரும் சவால் உள்ளது. இருப்பினும் அப்பணிகளை அவர் முன்னெடுப்பார். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராலேயே தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க முடியும்.
கோத்தாபயவைப் பொறுத்தவரையில் சிங்கள, பௌத்த வாக்குகளை மையப்படுத்தியே செயற்படுகின்றார். அவருடைய வெற்றிக்கு 15சதவீதம் முதல் 20சதவீதமான சிறுபான்மை வாக்குகளே தேவையாக உள்ளன. பிரச்சினைகளை, பிரிவினையை ஏற்படுத்தி அவ்வாக்குகளை பெறவே அவர் முயற்சிக்கின்றார்.
இவ்வாறான நிலையில், வாக்களிப்பினை புறக்கணிக்கும் செயற்பாடும் அல்லது நிபந்தனைகளை முன்வைக்கும் செயற்பாடும் தவறான அரசியல் நகர்வுகளாகவே இருக்கும். இத்தகைய நகர்வுகள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்தினை ஏற்படுத்தவல்லவர்களை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தி விடும். ஆகவே ஜனநாயகத்தினை நிலைநிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணும் தலைமைத்துவத்தினை உருவாக்குவதற்கான தீர்மானத்தினையே மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி:- எதிர்காலத்தில் உங்களின் அரசியல் பயணம் எவ்வாறு அமையப்போகின்றது?
பதில்:- எனது தந்தையார் இந்த நாட்டின் மூன்றாவது பதவிநிலையான சபாநாயகர் பதவியை வகித்தவர். நான் அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியிருக்கின்றேன். ஆகவே எனக்கு தனியானதொரு அரசியல் கனவு இல்லை. தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற எனது முடிவில் மாற்றமில்லை. ஆனால் நாட்டினதும், இளைய சமூகத்தினதும் எதிர்காலத்திற்காக தேவையான பங்களிப்பினை வழங்குவேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM