நவம்பர் 17 ம் திகதி சிறையிலுள்ள படைவீரர்கள் அனைவரையும் உடனடியா விடுதலை செய்வேன் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அனுராதபுர பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளமை குறித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கவலையும் அச்சமும் வெளியிட்டுள்ளனர்.
கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தனது கணவர் குறித்த விசாரணைகள் முற்றாக கைவிடப்படலாம் என காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சண்டே ஒப்சேவரிற்கு தெரிவித்துள்ளார்.
நான் நேரடியாக ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராகவே போராடுகின்றேன் என்பதால் எனக்கும் எனது குழந்தைகளிற்கும் ஆபத்து என தெரிவித்துள்ள அவர் படையினர் எந்த குற்றத்தையும் செய்யலாம் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டியதில்லை என்ற அபிப்பிராயத்தை கோத்தபாய ராஜபக்ச உருவாக்குகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட டிலான் ஜலாம்டீனின் தாய் ஜெனீபர் வீரசிங்கவும் கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார அறிவிப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச விடுதலை செய்ய முயல்பவர்களே எனது மகனை கடத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் அறிவிப்பு இலங்கையின் உண்மையான படைவீரர்களை அவமதிக்கும் ஒரு நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ள ஜெனீபர் வீரசிங்க கோத்தபாய ராஜபக்ச தனது தேர்தல் அறிவிப்பின் மூலம் படையினர் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறவருகின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதி அவர் நீதித்துறையை மதிக்கவில்லை அதற்கு அஞ்சவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் ஜெனிவர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
படையினரை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்ககூடிய பாதுகாவலர் ஒருவர் இருப்பதால் படையினர் ஆள்கடத்தலில் கொலைகளில் ஈடுபடலாம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவிக்க முயல்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது மகனை கடத்தியவர்கள் குறித்து சிஐடியினரிடம் தான் வெளிப்படையாக தகவல்களை வெளியிட்டுள்ளதால் எதிர்காலத்தில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னால் இந்த நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியுமா என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தான் சட்டத்தையும் நீதித்துறையின் நடவடிக்கைகளையும் தனது கரங்களில் எடுத்துக்கொள்வேன் என்பதையே கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியொருவர் நீதித்துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது,இது மிகவும் ஆபத்தான அறிக்கை,இதன் மூலம் ஜனாதிபதியானால் தான் எப்படி நாட்டை ஆளுவேன் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM