களனி கங்கையின் நீர் மட்டம் 23 அடி உயரத்தை எட்டினால் மட்டுமே அம்பத்தலே புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூடவேண்டிய நிலை ஏற்படுமென நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.
எனினும் களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதன் காரணமாக அம்பத்தலே புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் ஹக்கீம் உறுதிபடத் தெரிவித்தார்.
களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பதாக வெளியாகும் தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த பாதிப்புகளால் தேசிய நீர் விநியோக த்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை விளக்கத்தை வழங்கி விசேட உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழை மற்றும் வெள்ள நிலைமையினால் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ள தோடு மேலும் பல நிலையங்கள் சேற்றால் நிரம்பியுள்ளன. மின்விநியோக தடை மற்றும் மண்சரிவு நிலைமைகளால் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு பெரும்பாலான நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நாம் புனரமைத்துள்ளோம். அத்தோடு தேவையான சந்தர்ப்பங்களில் சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளின் போது கடற்படையினரின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
குறைந்த பட்சமான நீர் விநியோகத்தை பேணுவதற்காக டீசல் மூலம் இயங்கும் மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலைகள் ஏனைய அத்தியாவசிய நிறுவனங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முகாம்களுக்கு தற்காலிக நீர் சேமிப்பு தாங்கிகளை வழங்கவும் பவுசர்கள் மூலம் நீர் விநியோகத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியமான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ளுவதற்கும் குறைந்தபட்ச நீர் விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் எமது அனைத்து பிராந்திய அதிகாரிகளும் மாகாண உதவி
நிலையங்கள் அனர்த்த முகாமைத்துவ அலுவலகங்கள் மாவட்ட செயலகங்கள் ஆகியதரப்பினர் பிரதேச செயலகங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுக்கின்றனர்.
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களைக் குறைப்பதன் மூலம் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையானது நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றிவருகின்றது. எந்தவொரு அவசர நிலைமையையும் முகங்கொடுக்கும் வகையில் பராமரிப்பு மற்றும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
களனி கங்கையின் வெள்ள நீர் அதிகரிப்பின் காரணமாக அம்பத்தலே புதிய சுத்திகரிப்பு நிலையமானது கடந்த சில நாட்களாக அதீத கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. களனி கங்கையின் நீர் மட்டம் 23 அடியை அடைந்தால் மட்டுமே அந்த நிலையத்தை முற்றாக மூடவேண்டிய நிலை ஏற்படும்.
எனினும் வியாழக்கிழமை முதல் நிலையான நீர்மட்டக்குறைவை அவதானிக்க முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையானபோது 19 அடி 11 அங்குலமாக நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. அத்துடன் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு கடற்படையினரின் உதவிகளும் பாராட்டுக்குரியவை.
போயா தினத்திற்கு முன்னதான இரு நாட்களிலும் பின்னரான இரு நாட்களிலும் கடல் மட்டம் வழமையாகவே உயர்வடையும். அதேநேரம் கடல் மட்டத்தின் நீர்மட்டத்தையும் அவதானித்து வருகின்றோம். வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கும் 4 மணிக்குமிடையில் கடல் மட்டம் 0.4 மீற்றர் உயர்வடைந்துள்ளது. எனினும் இன்று சனிக்கிழமை போயாதினம் என்பதால் கடல் மட்டமானது 0.5 மீற்றர் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் ஆற்றின் நீர் வேகம் குறைவடைவதோடு நீர் மட்டம் உயர்வதை அவதானிக்க முடியும்.
எனினும் வெள்ள நீர்மட்டம் குறைவடைவதால் களனிகங்கையில் நீர்மட்டம் 23 அடிகளை அடையாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். ஆகவே அம்பத்தலே புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படாது.
அதேநேரம் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது என்பது தவறான தகவலாகும். நாம் தொடர்ச்சியாக அந்த நீரை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM