(ஆர்.யசி)
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்னர்.
இந்நிலையில் மஹிந்த, கோத்தபாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபாய ராஜபக்ஷ கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூட்டமைப்பின் பேச்சசாளர் சுமந்திரனிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது,
கோத்தபாய ராஜபக் ஷ எனக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க முடியுமா என கேட்டார். "தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த விருப்பம் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்னிடம் தெரிவித்தார். அதற்கமையவே நான் உங்களை தொடர்புகொண்டேன். எப்போது நாம் பேசலாம்" என கோத்தாபய ராஜபக் ஷ என்னிடம் கேட்டார்.
எனினும் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து சில விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இதில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை எமக்கு பெற்றுகொடுக்க முடியுமா என்ற கோரிக்கையை என்னிடம் முன்வைத்தார். எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை நான் அவருக்கு எடுத்துக்கூறியிருந்தேன்.
அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே எமது ஒரே நிலைப்பாடு. இதில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க உங்களால் என்ன செய்ய முடியும், புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன? அதிகார பகிர்வில் உங்களின் நிலைப்பாடு என்ன. என்ற விடயங்களை நான் கேட்டேன். எனினும் அவரிடம் இருந்து ஆரோக்கியமான பதில் வரவில்லை. எனினும் அரசியல் கட்சிகள் அனைத்தையும் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைக்க நாம் தயாராகவே உள்ளோம். அந்த அடிப்படையில் உங்களுடன் பேசவும் நான் தயராகவே உள்ளோம் என்ற காரணியை நான் கூறினேன்.
அதற்கமையவே கோத்தபாய ராஜபக் ஷ என்னை தொடர்புகொண்டு பேசினார். தானும் மஹிந்த ராஜபக் ஷவும், பஸில் ராஜபக் ஷவும் இணைந்து மூவருமாக எங்களை சந்திக்க தயாராக உள்ளதாக கூறினார். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. எங்களின் கூட்டணியில் மூன்று கட்சிகள் உள்ளன.அவர்களுடனும் பேசி நாம் ஒன்றாக உங்களை சந்திக்க முடியும் என்றேன்.
அத்துடன் எப்போது சந்திப்பை நடத்த முடியும் என்ற கேள்வியையும் கேட்டார். எனினும் அவர் மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கபூர் செல்லவுள்ளதால் நீங்கள் சிங்கபூர் செல்ல முன்னர் சந்திப்பீர்களா அல்லது சென்று மீண்டும் நாட்டுக்கு வந்ததும் சந்திப்பீர்களா என கேட்டேன். இது குறித்தும் எங்களின் கோரிக்கைகள் குறித்தும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஸில் ராஜபக் ஷ ஆகியோருடன் பேசிய பின்னர் மீண்டும் என்ன தொடர்புகொள்வதாக கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் நாம் இரகசியமாக யாருடனும் பேசி எமது கோரிக்கைகளை இரகசியமாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் வெளிப்படையாக எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பதில் கேட்கின்றோம். இதில் பிரதான கட்சிகள் எமக்கு இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM