ஐக்கிய தேசியக் கட்சிமுன்வைக்கவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை தெளிவாகவும், பகிரங்கமாகவும் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்க வேண்டுமென்பதை தீர்மானிக்க முடியுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிக பலமான அஸ்திரமொன்றை பிரயோகித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவித்தலைத் தொடர்ந்து கட்சிகளின் பிரமுகர்கள் அவரை சந்தித்த வேளைகளில் எல்லாம் சம்பந்தன் இவ்வகை பாணங்களையே எய்துள்ளார். சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களைச் சில கட்சிகளின் தலைவர்களுடன் அவர் நடத்திய வேளையிலும் சரி உத்தேச சந்திப்பின் போதும் சரி இக்கருத்தையே அவர் அடித்துக் கூறியுள்ளார்.
குறிப்பாக அரசியல் சாணக்கியன் என்று புகழப்படுகிற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவையும் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியபோது தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பது தொடர்பாகவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முன் வைக்கவிருக்கும் தீர்வு என்ன என்பதைப் பொறுத்தே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை நாம் எடுக்க முடியும்.
தமது நிலைப்பாட்டை ஒழிவு, மறைவு இல்லாமல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டுமென தனது உறுதியான நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
இவ்வகை நிலைப்பாடு தொடர்பாக ஏலவே உத்தியோகப்பற்றற்ற முறையில் உரையாடப்பட்ட கட்சி முகவர்களிடமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடு ஓர் இறுக்கமான நிலைப்பாடு மாத்திரமன்றி தமிழ் மக்களின் நீண்டகாலப் படிப்பினையிலிருந்து கோர்த்து எடுக்கப்பட்ட முடிவாகவும் ஊகிக்க இடமுண்டு.
ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியாக தொடர்ந்து செயற்பட்டு வரும் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனிநபர் விசுவாசத்தின் காரணமாக ரணில் எனும் கயிற்றில் ஆடும் பம்பரம்போல் செயற்பட்டு வருபவர்கள் கூட்டமைப்பினர் என மாற்றுத்தரப்பினராலும் எதிரணியினராலும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் கூட்டமைப்பின் இந்த விடாப்பிடியான நிபந்தனை வேட்பாளர் சஜித்துக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆச்சரியத்தை மாத்திரமல்ல, அதிர்ச்சியூட்டும் விவகாரமாகவும் மாறியிருக்கிறது.
ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குமுன் ரணில் விக்ரமசிங்கவையே இவர்கள் வேட்பாளராக, ஆக்க வேண்டுமென்பதில் உறுதியாகவிருந்த கூட்டமைப்பினர் அதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் சஜித்தை உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சந்தித்துவிட்டு, ”முதிர்ச்சியற்ற ஒரு தலைவராக காணப்படுகிறார் சஜித். அரசியல் தீர்வு தொடர்பில் அவரிடம் தெளிவான நிலைப்பாடு காணப்படவில்லை” எனக் கூறியிருந்தனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்புக்குப் பின்பே தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்மக்களுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும். அதைப் பகிரங்கமாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்க வேண்டுமென்ற இறுக்கமான தனது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் குறித்த நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது அதன் வேட்பாளர் சஜித் பிரேமதாசவோ ஏற்றுக் கொண்டு விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்த முடியுமா? அவ்வாறு வெளிப்படுத்தும் சார்பு நிலையொன்று ஏற்படுமாயின் தென்னிலங்கை மக்கள் அதை அங்கீகரிப்பார்களா? அத்தகைய சூழ்நிலையொன்றை உருவாக்கக்கூடிய ஆற்றலுடையவராக வேட்பாளர் வல்லமையுள்ளவரா? போ-ன்ற பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் தான் இப்பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனமென்பது ஒரு கட்சியின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள், வளர்ச்சிகள் தூரநோக்கு கொள்கைகளைத் தொகுத்துத் தருகின்ற பிரகடனம். இப்பிரகடனத்தின் அடிப்படையிலேயே கட்சியொன்றின் கொள்கைகளும் கோட்பாடுகளும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரை கட்சிகளின் விஞ்ஞாபனமென்பது சமூகம் சார்ந்த நலனையும் வாக்குத் திரட்டல் நோக்கத்தையும் குறிக்கோளாகக் கொண்டே இலங்கையில் இடம்பெற்ற எல்லா தேர்தல்களிலும் எல்லாச் சந்தரப்பங்களிலும் கட்சிகளால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்துள்ளன.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடக் கூடிய அல்லது கட்டியம் சொல்லக்கூடிய அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவங்கள் துணிகர மற்றும் தாராள தன்மை கொண்டதாக இதுவரை இருந்ததுமில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தென்னிலங்கை சமூகம் வளர்த்தெடுக்கப்படவுமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் நின்று இவ்விடயத்தை நோக்க முற்படுவோமாயின் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்படும் விபரம் அவர்களுக்கு எத்தகைய சவால்களை உருவாக்குமென்று பார்க்க வேண்டும். ஒன்று தமிழர்களுக்கான தீர்வை முன்மொழிவார்களாயின் அதை தாராள சிந்தையுடன் தென்னிலங்கை சமூகம் அங்கீகரிக்குமா என்பதும் இன்னொரு புறம் இனவாத குழுக்களின் பாரிய சவால்களுக்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்பது இன்னொரு சவாலாகவும் மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னே அணிவகுத்து நிற்கின்ற எதிரணியினரை வீழ்த்தி வெற்றி கொள்ளக்கூடிய களநிலை, இன்றைய சூழலில் காணப்படுகிறதா என்பது.
இதில் முதலாவது சவாலாகக் காணப் படுவது தென்னிலங்கை மக்களின் மனப்போக்கு. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தென்னிலங்கை தரப்பினர் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையையோ அல்லது அரசியல் அதிகாரப் பகிர்வையோ ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மிக சின்ன அளவிலான குழுவினர் மனசாட்சியோடு ஏற்றுக்கொண்டாலும் கணிசமான வீதத்தினர் எதிர்த்தே வந்துள்ளனர்.
குறிப்பாக 2009ஆம் ஆண்டின் யுத்த வெற்றிக்குப்பின் அவர்களுடைய மனோபாவங்கள் இனத்துவ தோரணைகள் வலுவடைந்து வந்துள்ளதே தவிர நல்லிணக்கத்தினூடான அரசியல் அல்லது சமத்துவத்துக்கான அரசியல் விட்டுக் கொடுப்புக்கு அரசியலை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் விஞ்ஞாபனத்தில் விளம்பரப்படுத்தி தமிழ் மக்களுக்கான தீர்வை சொல்லி வைக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட அரசியலை இதுவரை ஐக்கிய தேசியக்கட்சி நடத்திக் கொள்ளவில்லை.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய முன்னணியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பின்வரும் பிரகடனமொன்று செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் ஒற்றையாட்சி முறையின் கீழ் அதி உச்ச அதிகாரப்பகிர்வுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒற்றையாட்சி முறைமையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படுமென மேற்படி விஞ்ஞாபனத்தில் அறைகூவல் விடப்பட்டிருந்தது. (ஆதாரம் வீரகேசரி 24.07.2015).
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தில் தேசிய அரசாங்கத்தின் கீழ் தீர்வுக்கு கொள்கைத் திட்டம் வகுக்கப்படுமென கூறப்பட்டிருந்தது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வுத்திட்டமொன்றை காண்பதற்கு ஆறுமாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றை நோக்கும்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் அரசியல் தீர்வு தொடர்பில் கூறப்பட்டிருந்த போதிலும் அவை பற்றி எந்தளவு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கான முக்கியத்துவம் ஏன் இழக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தேடுவது வீண்விரயமான பிரயத்தனமே.
மறுபடியும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவகாரத்துக்கு வருவோம். வேட்பாளராக அறிவிப்பதற்கு முன் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் படை பலத்தைத் திரட்டி போராடிக் கொண்டிருந்த அமைச்சர் சஜித் பிரேமதாச இடையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அரசியல் தீர்வு தொடர்பில் தனது கருத்தை பதிவு செய்த போது 13 ஆவது திருத்தத்தை முழுமைப்படுத்தும் வகையில் உச்ச அளவிலான அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.
அதே சஜித், வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் முதல் செய்தியாக பிளவுபடாத நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வை வழங்குவது தனக்கு சுலபமான காரியமெனக் கூறியிருந்தார். வேட்பாளர் தெரிவுக்குமுன் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஓர் ஆதரவாளர் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு கூறியிருந்தார்.
”பௌத்த தேசியத்தை பாதுகாக்கக் கூடிய ஒருவரே இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும்”என்று ஆக்ரோஷமாக கூறியிருந்தார். இது இவ்வாறு இருக்கையில் யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்து உரையாடிய கூட்டமைப்பு தரப்பினர் அமைச்சர் சஜித்திடம் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பில் அவரிடம் எந்தவொரு தீர்க்கமான முடிவும் இருக்கவில்லையென கடுமையாக விமர்சித்துள்ளனர். இதேநேரம் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கூட்டமைப்பு கவனம் கொள்ளப் போவதில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பிலேயே கூட்டமைப்பு கவனம் செலுத்துமென தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.
இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் பல்வேறு அபிப்பிராயங்கள் உருவாகிக் கொண்டாலும் முடிவு ஒரு புள்ளியை நோக்கித்தான் நகரமுடியுமென்பதை மிக இலகுவாகவே புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தரப்புகள், எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் குறிப்பிட்ட முக்கோணப் போட்டியே பலமாக இருக்கப் போகிறதென்பதே யதார்த்தம்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் கூட்டமைப்பு பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவறவிட்டமை மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்பது சில புத்திஜீவிகளாலும் தமிழ்த்தரப்பினராலும் கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டு. இது பிற்காலத்தில் கடுமையான விமர்சனங்களாகவும் உருவெடுத்திருந்தது. எழுத்து மூல உறுதியொன்றை பெறுவதற்கு கூட்டமைப்பு தவறிவிட்டது.
இதுவே கடந்த காலங்களைப் போல் ஏமாற்றத்துக்கான மூலகாரணமாக போய் விட்டது என்பது கூறப்பட்டாலும் அவ்வாறானதொரு நிபந்தனையின் அடிப்படையில் யாரை நிறுத்தினாலும் மஹிந்த ஆட்சியை வீழ்த்துவது என்பது பகற்கனவாகவே போய்விடும். அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலின் போதோ அல்லது பொதுத் தேர்தலின் போதோ அத்தகைய நிபந்தனைகளை விதிக்க விரும்பவில்லையென இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டில் எழுத்து மூல உத்தரவாதத்தை கோராத கூட்டமைப்பு இன்றைய தேர்தலில் எழுத்து மூல வடிவத்துக்கு முக்கியத்துவம் தராமல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்ற புதிய தந்திரமொன்றுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதன் அர்த்தம் யாதெனில் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தவறான அர்த்தப்பாடுகளையும் வியாக்கியானங்களையும் கொண்டு வரலாம். பதிலாக விஞ்ஞாபனமென்பது பத்தோடு பதினொன்றாக பரகசியமில்லாமலே போய்விடும் என்பதற்காகவே இவ்வாறானதொரு உத்தி பயன்படுத்தப்படலாமென்பது சிலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது.
ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் ஆவண வடிவம் பெறுபவை, மீறப்படும்போது அது பற்றிய பெறுமதிகளும் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. ஆனால் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தவரை அது ஒரு பட்டயமே தவிர அதில் கூறப்பட்டவை நிறைவேற்றப்படலாம். முடிவுபடுத்தப்படாமல் போகலாம் அல்லது மீறப்படலாம் என்பது பொதுவாக தரப்படும் விளக்கம். இந்த இலக்கணத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு கனதியற்ற ஆவணமாக இல்லாது இருந்தாலும் சகல மக்களும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆவணம் என்ற வகையில் இக்கோரிக்கை பெறுமதி கொண்டதாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் களத்தில் முன்னணிப் போட்டியாளர்களாக காணப்படுவோர், மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்போரே.
போட்டியிடும் கட்சிகள் தாம் வெற்றி பெறும் பட்சத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். சிறுபான்மை சமூகங்கள் தொடர்பாக எவ் வகை தீர்மானங்களுக்கு வருவோம் என் பதை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும் என எதிர்பார்க்கும் நிலையில்தான் கூட்டமைப்பின் நிபந்தனையும் எதிர்பார்ப்பும் முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதில் கூட்டமைப்பின் ஆதரவை குறிப்பாக வட– கிழக்கு மக்களின் ஆதரவை எல்லாக் கட்சிகளும் எதிர்பார்த்து நின்றாலும் கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் தீர்மானம் இம்முறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
அவ்வகையில் தமிழ்மக்களின் வாக்கின்றியே தம்மால் வெற்றி கொள்ள முடியுமென தம்பட்டம் அடித்துவரும் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது ஆதரவை நல்குமென்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறானதொரு நிலை அல்லது மாற்றம் ஏற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் இருக்க முடியாது. இதற்குரிய வரலாற்றுப் பின்னணியையும் யதார்த்தத்தையும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பு அத்தகையதொரு தீர்மானத்துக்கு வருவதை தமிழ்மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சில ஊதாரித்தனமானவர்கள், ”மறப்போம், மன்னிப்போம், கோத்தாவை ஆதரிப்போம்” என கூறிக் கொண்டாலும் அத்தகையதொரு மாற்றமுடிவை கூட்டமைப்பின் தலைமையோ அன்றி தமிழ்மக்களோ எடுக்கப்போவதில்லை. அந்த வரலாற்று தவறு நடைபெற வாய்ப்பில்லை.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் அழிப்புக்கள் சரணடைந்தோரின் நிர்க்கதி காணாமலாக்கப்பட்டோரின் மர்மத்துலக்கங்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள், கடத்தப்பட்டோர், பாவ விமோசனம் என ஏகப்பட்ட குற்றப்பத்திரங்களின் மத்தியில் களமிறங்கியிருக்கும் வேட்பாளருக்கு கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கப்போவதில்லை என்பது வெளிப்படையான உண்மை.
மறுபுறத்தே தலைதூக்கி நிற்கும் வேட்பாளர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்க வேட்பாளர் அனுர. இக்கட்சியின் வளர்ச்சியும் மாற்றமும் ஆச்சரியம் கொண்டதாக பார்க்கப்பட்டாலும் இவர்களை ஆதரிக்கும் தோரணைக்கு கூட்டமைப்பு வருமா என்பது சந்தேகத்துக்குரிய விடயம். இதில் இரு காரணங்கள் முக்கியம் பெறு கின்றன. ஒன்று இடது சாரிக் கொள்கையுடன் ஒட்டி வளர்த்தெடுக்கப்பட்டு வரும் மக்கள் முன்னணியை ஆதரிக்கும் கொள்கை ரீதியான வளர்ச்சியை ஆதரிக் கும் அளவுக்கு அவர்கள் வளர்த்தெடுக்கப்படவுமில்லை. அவ்வகை மாற்றங்களை கைநீட்டி வரவேற்கும் அரசியல் அறிவு மாற்றங்கள் இன்னும் நடந்துவிடவுமில்லை.
மறுகாரணம் ஜே.வி.பி.யினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வட – கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கான அதிகாரப் பகிர்வு இவ்வாறு தான் இருக்க வேண்டுமென வெளிப்படையாக கூறியதில்லை. இது முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீர காலத்திலிருந்து இன்றைய தலைவர் காலம்வரை இடம்பெற்றதாகத் தெரியவில்லை. அதுவுமன்றி இடையில் வந்த தலைமைகளின் இனத்துவமான கொள்கைகள் பிரசாரங்கள் தமிழ்மக்களை வெறுப்படைய வைத்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவுமின்றி ஜே.வி.பி.யின் புதிய தலைமைகள் கூட தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தெளிவான, ஆழமான அரசியல் தீர்வுபற்றி வெளிப்படையாகவும் துணிவுடனும் கூறியது கிடையாது. அதுவுமின்றி வட–கிழக்குப் பிரிப்பின் சூத்திரதாரிகள் இவர்கள் என்ற வடுவி லிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத நிலையை மாற்றும் முயற்சிகளை இவர்கள் மேற்கொள்ளாதவரை தமிழ்மக்களின் மனங்கள் வென்றெடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
கூட்டமைப்பினால் தீர்மானத்துக்கு வரக்கூடிய ஒரேயொரு கட்சியாக ஐ.தே.கட்சியும், வேட்பாளர் சஜித் பிரேமதாச வுமே காணப்படுகிறார்கள். இந்த முக்கூட்டாளர்கள் மத்தியில் தெரிவு செய்யக்கூடிய ஒரேயொரு வேட்பாளராக காணப்படுபவர் சஜித். ஆனால் இவர் மீது எந்தளவு நம்பிக்கை கொள்ள முடியும்? இவர் இனப்பிரச்சினை தீர்வு குறித்துக் கொண்டிருக்கும் அபிப்பிராயம் தொடர்பில் பெருத்த நம்பிக்கை கொண்டவர்களாக கூட்டமைப்பு காண
ப்படவில்லை என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதைத் தவிர மாற்றுத்தேர்வு ஒன்றுக்குச் செல்லும் வழிமுறைகள் இல்லையென்பதும் வெளிப்படையே. இது இவ்வாறு இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாரும் எதிர்பார்க்காத தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கு மென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெளிவான முடிவுக்கு வரமுடி யாவிட்டாலும், கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான முடிவை எடுக்கும் சாத்தியமே அதிகம் காணப்படுகிறது.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லின்போது வட–கிழக்கு மக்கள் ஒதுங்கியிருந்ததைப் போல் ஒரு சூழ்நிலை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வரப்போவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ ஒரு முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டுமென்ற நிலையில் என்ன முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரப்போகிறதென்பது விரைவில் தெரிந்து விடும்.
திருமலை நவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM