(எம்.மனோசித்ரா)
உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்கு 5000 மில்லியன் வரை செலவு ஏற்படலாம். அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையே இந்த செலவிற்கு பிரதான காரணமாகும் என தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்டப வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இராஜகிரியவில் உள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் சட்ட விதிமுறைகள் குறித்து மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வேட்புமனு தாக்கல் செய்தல்
7 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் தலைமையத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அதே வேளை 9 மணி முதல் 11.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் அனுமதிக்கப்படுபவர்கள்
வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறித்த வேட்பாளர், வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திடுபவர்கள் உள்ளிட்ட 5 பேர் ஒரு வேட்பாளர் சார்பில் ஆணைக்குழுவிற்குள் அனுமதிக்கப்படுவர்.
அத்தோடு ஊடகவியலாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்களாயின் அவர்களும் அனுமதிக்கப்படுவர்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவோர்
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காரியாலயத்திற்குள் வேட்பாளர், வேட்புமனுவில் வேட்பாளர் சார்பில் கையெழுத்திடுபவர்கள், ஒரு வேட்பாளருக்காக அவரது பிரநிதியொருவர் , ஊடகவியலாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் என்போர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
தேர்தலுக்கான செலவுகள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் 4000 மில்லியன் செலவாகும் என கணிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அந்த தொகை 5000 மில்லியன் வரை அதிகரிக்கக் கூடும். இது வரையில் சுமார் 23 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதுவே முதல் முறை அதிக வேட்பாளர்கள் களமிறங்கும் ஜனாதிபதித் தேர்தலாகும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அதற்கமைய அரசியல் கட்சிகள் சார்பாக 12 வேட்பாளர்களும், 11 சுயாதீன வேட்பாளர்களும் , பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
முறைப்பாடுகள்
தேர்தல் காலத்தில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் தலைமையகத்துடன் இணைந்து கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம், பெக்ஸ் இலக்கம், வைபர், வட்ஸப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி மற்றும் பேஸ்புக் முகவரி என்பன வழங்கப்பட்டுள்ளன.
தொலைபேசி இலக்கங்கள் - 011-2868212 / 011-2868560 / 011-2868217
பெக்ஸ் இலக்கங்கள் - 011-2868529 / 011-2868526
வைபர் மற்றும் வட்ஸப் - 071-9160000
மின்னஞ்சல் முகவரி - complaint.pre2019elections.gov.lk
பேஸ்புக் முகவரி - Election Commission of Sri Lanka
Tell Commission Election Commission of Sri Lanka
அரச வைபவங்கள்
கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழாக்கள் உள்ளிட்ட அரச வைபவங்களில் அந்த நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகளினுடைய புகைப்படங்கள் அல்லது கட்சியின் சின்னத்தைக் கொண்ட போஸ்டர்கள் , பெனர்கள் தவிர்க்கப்பட வேண்டும். மாறாக இவ்வாறான வைபவங்களில் தேசிய கொடி ஏற்றப்படுதல் வரவேற்கத்தக்கது.
இதனை மீறி இவ்வாறான அரச வைபவங்களில் ஏதேனுமொரு கட்சி சார்பான நடவடிக்கைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அவதானிக்கப்பட்டால் அதனுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
பதாதைகள் , பெனர்கள்
7 ஆம் திகதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் சகல கட்சிகளினதும் பதாதைகள் மற்றும் பெனர்கள் என்பவற்றை அகற்றுமாறு முன்னதாகவே தேர்ல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்னமும் அவை அகற்றப்படவில்லை. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இராஜகிரியவை அண்மித்த பிரதேசங்களில் உள்ள பதாதைகள் மற்றும் பெனர்கள் பொலிஸாரினால் அகற்றப்படும். அவற்றை தவிர இவை காணப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இடம்பெறும் கூட்டங்கள் தொடர்பில் ஏதேனுமொரு அரசியல்வாதியின் அல்லது கட்சியொன்றின் சின்னம் பதிக்கப்பட்ட போஸ்டர்கள், பெனர்கள் காட்சிப்படுத்தப்படக் கூடாது. கூட்டம் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக மாத்திரமே அவை ஒட்டப்பட வேண்டும். அத்தோடு கூட்டம் இடம்பெறும் பிரதேசங்கள் தவிர்ந்த வெளிப்பிரதேசங்களில் ஒட்டப்படக் கூடாது.
குறித்தவொரு அரசியல்வாதியின் புகைப்படம் அல்லது கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் அச்சிடப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கான அளவு வழங்கப்படும். மேலும் வேட்பாளர்களது டிஜிட்டல் விளம்பர பதாதைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படல்
தேர்தல் காலத்தின் போது அரச ஊடகங்களோ அல்லது தனியார் ஊடகங்களோ தத்தமது தனிப்பட்ட தேவைகளை நோக்காகக் கொண்டு செயற்படக் கூடாது. ஏதேனுமொரு கட்சியின் கூட்டம் அல்லது மாநாடு என ஏதாவதொரு நிகழ்வு நடைபெற்றால் அந்த நிகழ்வை முழு நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான குறுகியதொரு நேரத்தை மாத்திரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
அத்தோடு ஏதேனும் ஒரு கட்சி சார்ந்த நிகழ்வை மாத்திரம் ஒளிபரப்பவும் கூடாது. ஒரு வழங்கப்படும் அதேயளவு நேரத்தை ஏனைய கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். மேலும் அது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்றால் அதை அறியப்படுத்த வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவருக்கு இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் தவிர பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுல் ஆகிய நிறுவனங்களுடனும் இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளோம். வன்முறை சம்பவங்கள் மற்றும் வன்முறைகளைத் தூண்டும் சம்பவங்கள் பற்றிய நேரடி ஒளிபரப்புக்கள் அல்லது பதிவுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் அரச தொலைக்காட்சி ஊடகமொன்றில் பிரதான அரசியல் கட்சியொன்றின் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு ஒளிபரப்பு செய்வதற்கு கட்டணம் செலுத்தவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவிய போது கட்டணம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். கட்டணம் செலுத்தப்பட்டமைகான ஆவணங்களை பரசீலித்த போது அந்த ஆவணங்கள் ' நேரடி ஒளிபரப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டுமானால் அதனை செலுத்துவதற்கு நாம் தயார் ' என்றே காணப்பட்டது. எனவே தான் அந்த நேரடி ஒளிபரப்பு இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே ஊடகங்களையும், சமூக வலைத்தள நிறுவனங்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழு ஆகியவற்றுடனும் , தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு மையம் என்பவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பு கொண்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதியளவில் நாட்டுக்கு வருகை தருவதோடு, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபவர்.
மேலும் பெப்ரல் உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.
சொத்து விபரங்களை வெளிப்படுத்தல்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்று கோரப்படுகின்றது. அவர்கள் தமது உத்தியோகபூர்வ இணையதளங்களின் ஊடாகவேனும் அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒவ்வொரு வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் சகல விதத்திலும் தகுதியுடையவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சத்தியக் கடதாசி ஒன்றை கையளிக்குமாறும் கோரப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM