ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்ற இறுதிக்கட்ட நேரத்திலாவது தமிழ்பேசும் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவாளர்களும், மக்களும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் , தமிழ்முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் புதிய அணுகுமுறையைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிகளாலும், அரசாங்கங்களாலும் உத்தரவாதம் வழங்கப்பட்டும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளை நிரல்படுத்த வேண்டும் என்றும், அவற்றைநிறைவேற்றுவதற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆணையைசிறுபான்மை மக்களிடம் கேட்டுப் பெறுகிற சந்தர்ப்பமாக இத்தேர்தலை தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த நாற்பது ஆண்டு காலமாக நடைபெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்பேசும் மக்கள் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் அளித்த வாக்குகள் அனைத்தும் வீண்விரயமாக்கப்பட்ட வாக்குகள் என்பதே உண்மையாகும். எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றி வைக்கவில்லைஎன்பதை பாடமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய அணுகுமுறையைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளாலும், அரசாங்கங்களாலும் உத்தரவாதம் வழங்கப்பட்டும் நிறைவேற்றப்
படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளை நிரல்படுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆணையை சிறுபான்மை மக்களிடம் கேட்டுப்பெறுகின்ற சந்தர்ப்பமாக தமிழ், முஸ்லிம் தலைவர்கள் இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
பெருமளவான வாக்குகளை மக்கள் தருவார்களாக இருந்தால் இவ்வாணையை பெரும்பான்மை சிங்கள மக்களிடமும், சர்வதேசத்திடமும், ஐக்கியநாடுகள் சபையிடமும், அயல்நாடுகளிடமும் முன்வைத்து நியாயம் கோருவதற்கான புதிய அரசியல் நகர்வுகளைச் செய்ய முடியும். தமிழ் அரசியல் சக்திகளும், முஸ்லிம் அரசியல் சக்திகளும் பாராளுமன்றத் தேர்தல்களில்தான் ஆணைகளைப் பெற்றிருக்கின்றன. இவையும் வெற்றுப் பிரசார நெடிகளாகவும், கற்பிதங்களாகவும் பழையனவாகிவிட்டன என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகும்.
பழைய அபிலாஷைகளுடனும்கோரிக்கைகளுடனும், யுத்தமுடிவின்பின்னரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் புதிய கோரிக்கைகளைக் கலந்து முன்வைத்து புத்தம் புதிய ஆணையினை மக்களிடம் இருந்து பெறுதல் அவசியமாகும்.
எப்படி நெடுங்காலமாக ஏமாற்றுவது என்பது ஒழுக்கக்கேடான அரசியலோ அவ்வாறே ஏமாறுவதும் ஒழுக்கக்கேடான அரசியலேயாகும். இந்தப் படிப்பினையை சிறுபான்மையினர் நாம் பெற்றுவிட்டோம், எமது பெரும்பான்மைச் சகோதரர்களே நீங்களும் இப்படிப்பினையை இத் தேர்தல்மூலம் பெறவேண்டும்’’என்று திறந்த மனதோடு கோருவதற்கான வாய்ப்பை தமிழ்பேசும் பொதுவேட்பாளர் நியமனம் ஏற்படுத்தும்.
பெரிய கட்சிகள், தேர்தல் காலங்களில்சிறுபான்மைக் கட்சிகளையும்மக்களையும் இடுப்பில் தூக்கிவைத்து கொஞ்சிக் குசலம் விசாரித்துவிட்டு தூக்கி வீசுகின்ற அரசியலை இல்லாதொழிக்க வேண்டும். சிறுபான்மைத் தலைவர்களுக்கு சலுகைகளை வழங்கிவிட்டு சமூகங்களின்பிரச்சினைகளை ஜனாதிபதிக் காரியாலய மற்றும் பாராளுமன்ற குப்பைக்கூடைகளுக்குள் போடுகிற வஞ்சக நடைமுறையை வீதியோரக் குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட நாம் துணியவேண்டும்.இத்துணிவை வெளிக்காட்டுவதற்கு தமிழ்பேசும் பொதுவேட்பாளரை நிறுத்துவதே இன்றிருக்கும் ஒரே வழியாகும்.
அனுகூலமும் பிரதிகூலமும் தந்துவிட்டு ஓய்ந்துபோன தைரியமான முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டமும், அதன்பின்னர் தைரியத்தை அடகு வைத்துச் செய்த பத்தாண்டுகால இணக்கம் கலந்த அச்ச அரசியலும், எமக்கு மேலும் தைரியத்தை தரவில்லை என்றால் அடிமைவாழ்வை தொடர வேண்டிய நிலைதான் ஏற்படும்.அடிமை வாழ்வை தவிர்க்க தமிழ்பேசும் பொதுவேட்பாளரைநிறுத்தி சிங்கள பௌத்த அடக்குமுறை அரசியலுக்கு சிறுபாடம் கற்பிக்கும் தருணத்தை தவறவிட முடியாது.
அதிகாரத்தை துறந்து புத்தர் காட்டிய ஆன்மீக ரீதியான வாழ்வியல் கல்விக்கு புறம்பாக வன்முறையை கையில் எடுத்துள்ள காவிகள் நாடெங்கும் காவித்திரிகிற அரசியலுக்கு சிறுபான்மையினர் அடிபணிய முடியாது. இவ்விறுதித் தருணத்திலாவது தமிழ் பேசும் பொதுவேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான அழுத்தத்தை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவாளர்களும் மக்களும் தமது தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM